
சரபேஸ்வரரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவைதான் சரபேஸ்வரர். இவரின் சக்தி அளவிட முடியாதது. எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், பில்லி, சூனியம், ஏவல் பிரச்னைகள், தீராத நோய்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைப்பவர் சரபேஸ்வரர். விதியையும் மாற்றம் வல்லமை சரபேஸ்வருக்கு மட்டுமே உண்டு.
அசுரர் குலத் தலைவன் இரணியன் கடும் தவம் புரிந்தான். தேவர், மனிதர், விலங்குகள் போன்ற யாராலும் பகலிலோ அல்லது இரவிலோ வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ எவ்வித ஆயுதங்களாலும் தமக்கு மரணம் ஏற்படக் கூடாது என்று கடவுளிடம் அரிய வரம் பெற்றான்.
எதிர்ப்பார் யாரும் இல்லாததால் தன்னையே கடவுள் என்றான். ‘என்னையன்றி வேறு யாரையும் வணங்கக் கூடாது’ என்று குடிமக்களுக்கு உத்தரவிட்டான். இரணியனுக்கு மகனாகப் பிறந்தவன் பிரகலாதன். தனது தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவரால் நாராயண உபதேசம் பெற்று கருவிலேயே திருவுருவானான். இரணியனை அழிக்க நரசிம்மாவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு.
இரணியனை வதம் செய்து ஆக்ரோஷமாக இருந்த அவரைக் கண்டு அண்ட சராசரங்களும் நடுங்கின. சிவபெருமான் சரபேஸ்வர பறவை உரு கொண்டு வந்து நரசிம்மரின் கோபத்தைத் தணித்தார். இந்த சரபேஸ்வரரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவைதான் சரபேஸ்வரர்.
சரபேஸ்வரர் சன்னிதி உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெறும். ராகு காலத்தில் பதினொரு வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், உடல் பிணி, எதிரிகள் தொல்லை நீங்கும். வியாபார அபிவிருத்தி, உயர் பதவி, கல்வியறிவு, காரிய வெற்றி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ராகு காலத்தில் எலுமிச்சம் பழம் மாலை, செவ்வரளி பூ, வடை மாலை சாத்துதல், அன்னதானம் செய்தல், பால், தயிர், இளநீர் போன்ற அபிஷேகம் செய்தல் சிறப்பானது. சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் சரபேஸ்வரர் முப்பதாவது மூர்த்தமாகும். இவருக்கு அதிரசம் படைத்து தானம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, நல்ல நட்பு, நல்ல குணங்கள் வளர்வதுடன், இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும்.
ஞாயிறு சந்திர ஓரை பூஜையில் 4.30 மணி முதல் 6 மணி வரை பசும்பால் அபிஷேகம் செய்து, வெண்ணெய் உருண்டைகளால் அர்சிக்கலாம். உடையாத அரிசி மணிகளை சந்தனக்காப்பில் பதித்து வழிபடலாம். வெண் பட்டுச் சாத்தி தேங்காய் சாதம் நெய்வேத்தியமாகப் படைக்கலாம். இவ்வாறு செய்தால் மனதில் நிம்மதி கிடைக்கும்.