நாகாபரணத்துடன், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் காட்சி தரும் அபூர்வ முருகன்...
திருவண்ணாமலை வேலூர் சாலையில் கலசபாக்கத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் செங்கம் அருகில் உள்ளது நட்சத்திர கோயில் (வில்வாரணி) என்னும் சிற்றூர். இந்த ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில் சுயம்பு வடிவ லிங்க திருமேனியராய் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
இந்த கோயில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைக்கோயில். பக்தர்கள் மலை உச்சிக்கு செல்ல 300 படிகள் அமைக்கப் பட்டுள்ளன.
தல பெருமை:
நெருப்பு சிவன், அதிலுள்ள வெப்பம் உமாதேவி, நெருப்பின் நிறம் கணபதி, அதன் ஒளி முருகன். இவை யாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால் சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது.
தலவரலாறு:
பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்த கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்கு பூஜை செய்து வந்தார். அவர் தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை அன்று திருத்தணி சென்று வழிப்படுவார். ஒரு ஆண்டில் சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் மனம் நொந்து வருந்தினர்.
அன்றிரவு அவர்கள் உறங்கும் போது இருவர் கனவிலும் தோன்றிய முருகன் “நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி கிருத்திகை நட்சத்திரத்தில் வழிபாடு செய்யுங்கள்” என கூற, இருவரும் முருகன் சொன்ன மலையில் உள்ள சுயம்பு சிலையைத் தேடியதில், “பாம்பு காத்த லிங்கத்தை” கண்டனர். இருவரையும் கண்டதும் நாகம் இறைவனின் தலைக்கு மேல் குடையாக உருவெடுத்தது. இரண்டு அர்ச்சகர்களும் ஒரு சிறிய கூடாரம் அமைத்து வழிபாட்டை தொடங்கினார்கள்.
இத்தல கருவறையில் முருகனும், சுயம்பு வடிவான சிவபெருமானும், ஒருசேர காட்சி தருவது தனிச்சிறப்பாகும். வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் அமர்ந்து நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க ஆலயம் இதுவாகும்.
கார்த்திகைப் பெண்களும், 27 நட்சத்திரங்களும், ஒவ்வொரு கிருத்திகை அன்றும் இங்கு வந்து முருகனை வழிபட்டு செல்வதாக நம்பிக்கை. அதனால் இத்தலம், 27 நட்சத்திரங்களுக்கும் அனுகிரகதலமாகவும் அமைந்திருக்கிறது.
27 நட்சத்திரங்களும், சிவசர்ப்பமும், முருக பெருமானை வழிபடும் சிறப்பு இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை. கிருத்திகை தோறும் பக்தர்கள் நட்சத்திர கிரி மலையை வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மலேசிய நாட்டில் உள்ள முருகன் சிலையைப் போல் 42 அடி உயர முருகன் சிலை இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை:
ராகு மற்றும் கேது அம்சங்களால் பாதகமான விளைவுகளை எதிர் கொள்பவர்கள், நிவாரணத்திற்காக இங்குள்ள முருகப்பெருமானை வழிப்படுகின்றனர். பக்தர்கள் அபிஷேகம் மற்றும் வஸ்திரங்கள் இறைவனுக்கு காணிக்கையாக செலுத்து கின்றனர்.
இக்கோயிலில் செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி அன்னதானம் செய்து வழிபடுபவர்களின், நாக தோஷம், புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும். சிவந்த விருட்சி மலர்களால் அர்ச்சித்து மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும். நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை.