

விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பண்டிகை பொங்கல். 'இந்திரா விழா’ என்ற பெயரில் இலக்கிய காலத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. தற்போது மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழா.சோழர்கள் காலத்தில் காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா அந்தக் காலத்தில் 28 நாட்கள் தமிழர் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டது என்பதற்கு சான்றுகள் உள்ளன. பண்டைய காலத்தில் மழை தரும் கடவுளாக இருந்த இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் பண்டிகையை ‘இந்திர விழாவாக’ கொண்டாடினர்.
அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவன் பூம்புகார் வந்ததாகவும் புராணக் கதை கூறுகிறது. முதல் முறையாக இந்திர விழா நடந்தபோது, அதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவிப்பு செய்ததாக வரலாறு கூறுகிறது.
இப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்து வாசலில் கோலமிட்டு வண்ணப்பூக்களால் வீட்டை அலங்கரித்ததைப் போன்றே இந்திர விழாவிலும் நடைபெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கோயில்களிலும் அதேபோல் நடைபெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
மழைக்குரிய கடவுள் இந்திரன். அவனை வழிபட்டால் மாதம் மும்மாரி பெய்யும், பயிர்கள் செழித்து வளரும் என மக்கள் நம்பினர். அதனால்தான் இந்திரனை பெருமைப்படுத்தும் மற்றும் நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் பண்டிகையை இந்திர விழாவாகக் கொண்டாடினர். பின்னர்தான் சூரியன் பற்றிய அருமை, பெருமைகளை உணர்ந்து சூரிய பகவானை கொண்டாடும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரியனே பருவநிலை மாற்றத்தின் முக்கியமானவர் என்று அறிந்துகொண்டனர். தங்களது பயிர் வளர்ச்சிக்கு அவரே காரணம் என்பதை உணர்ந்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
தங்கள் வயல்களில் விளைந்த முதல் புது நெல்லை அறுவடை செய்து அதை சூரிய பகவானுக்கு படையலிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது தொடங்கியது. இப்படியாக இந்திர விழாவாக தொடங்கி, சூரிய விழாவாக மாறியதுதான் தைப்பொங்கல் பண்டிகை.
அந்நாளில் பொங்கல் பண்டிகை பஞ்சபூத வழிபாடாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் காரணமாகத்தான்.கிராமப்புறங்களில் இன்றும் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள். மண் பானை பூமியிருந்து பெறப்படும் களி மண்ணில் செய்யப்படுகிறது. அந்தப் பானையில் நீர் விட்டு, பனை ஓலை மூலம் நெருப்பு மூட்டி அரிசியை வேக வைக்கிறார்கள். அதனை காற்று பொங்கி வர உதவுகிறது. வெட்டவெளியில் ஆகாயத்தைப் பார்த்து பொங்கல் வைக்கிறோம். இதன் மூலம் பஞ்சபூதங்களுக்கு மரியாதை செய்தாகக் கருதப்பட்டு வழிபட்டு வருகின்றனர்.
மங்கலப் பொருட்களில் முதன்மையான மஞ்சளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் எந்த மங்கலகரமான நிகழ்ச்சி என்றாலும் மஞ்சள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே புதுப்பனையில் பொங்கல் வைக்கும் முன் அதில் மஞ்சள் கொத்து சுற்றி கட்டி பொங்கல் வைக்கிறோம்.
பொங்கல் சமயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது கரும்பு. அது ஏன் இடம் பெறுகிறது தெரியுமா? கரும்பு அடி முதல் நுனி வரை ஒரே மாதிரியான சுவையில் இருப்பதில்லை. அடிக்கரும்பு இனிக்கும், நுனிக்கரும்பு உப்புச் சுவையில் இருக்கும். கரும்பின் மேற்பரப்பு எத்தனையோ வளைவுகள் மற்றும் முடிச்சுகளும் கொண்டது. இருந்தாலும் அதன் உள்ளே இனிப்பு சுவை மிகுந்த சாறு உள்ளது. இதைபோலவே வாழ்க்கையில் எத்தனையோ கடுமையான சோதனைகள் வந்தாலும் இறுதியில் சுவையான வாழ்க்கை உள்ளது என்பதை உணர்த்துகிறது என்கிறார்கள்.
தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் நாளன்று வீடு முழுவதும் மாக்கோலமிட்டு, வாசலில் வண்ணக் கோலமிட்டு, மாவிலை, ஆவாரம் பூ, வேப்பிலை, கூரை போன்றவற்றை காப்பு கட்டி வாசலில் இருபுறமும் தித்திக்கும் கருப்பையும் கட்டி வைத்து பெரியவர்களும்,சிறியவர்களும் விடியற்காலையில் எழுந்து நீராடி புத்தாடைகள் அணிந்து, சூரியன் உதிக்கும் நேரம் வெளியே பொங்கல் வைத்து சூரியக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.