

நம்மூர் சித்தர்கள் நமக்கென விட்டுச்சென்ற விஷயங்கள் ஏராளம். நூற்றாண்டு கானும் முன்பே காகித புத்தகங்கள் கந்தலாகி போகும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சித்தர்களின் அற்புத ஓலைச் சுவடிகள் இன்றளவும் சிதையாமல் உள்ளது. சகல சித்திகள் பெற்றவர்களே சித்தர்கள்.
பதஞ்சலி, அகத்தியர், கமலமுனி, திருமூலர், குதம்பை, கோராக்கர், தன்வந்திரி, கொங்கனார், சட்டமுனி, வான்மீகர், ராமதேவர், நந்திதேவர், இடைக்காடர், மல்முனி, கருவூரார், போகர், பாம்பாட்டி, கத்தரத்தாண்டவர் என 18 சித்தர்களும் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்தனர்.
மருத்துவம், விஞ்ஞானம், புவியியல் முதல் யோகம், ஞானம் வரைக்கும் அத்தனையையும் அறிந்து நரை, திரை, பிணி, மூப்பு கடந்து வாழ்ந்தவர்கள் 18சித்தர்களும். அனிமா, மகிமா, லோகியா, கரிமா, பிராப்தி, பிரகாசியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டு சக்திகள் பெற்றவர்கள். இவர்களின் ஞானத்தில் உதித்தவற்றை மக்களுக்கு பயன்தரும் வகையில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தனர்.
18 சித்தர்களில் கருவூர் சித்தர் குறிப்பிடத்தக்கவர் பல கோயில்களுக்கு விஜயம் செய்து பல ஆச்சரியமான செயல்களைச் செய்தவர். அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கி.மீ. தூரத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற ஊரிலிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தூரம் சென்றால், திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் திருத்தலத்தை அடையலாம். இந்த கோவிலில் காட்சி தரும் மூலவர் சிவலிங்கம் சற்றே இடது பக்கம் சாய்ந்து நிலையில் உள்ளது சிறப்பம்சம்.இதற்கு காரணமாக இருந்தவர் கருவூர் சித்தர்.
ஒரு முறை சிறந்த சிவபக்தரான கருவூர் சித்தர் இத்தலத்தில் உள்ள சிவனை தரிசிக்க வந்தார். அவர் தாமிரபரணியின் வடகரைக்கு வந்து போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றைக் கடக்க முடியாத அவர், அக்கரையில் இருந்து கொண்டே தென் கரையில் மலர்கள் பூத்துக் குலுங்குய மருதமரங்கள் நிறைந்த வனத்த்தின் மையத்தில் வீற்றிருந்த சிவபெருமானை நோக்கி "நாறும் பூவின் நடுவே நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள் புரிவாயோ" என மனமுருகி வேண்டி பாடினார்.
அவரது பாடலில் மயங்கிய சிவன், தனது இடது செவியில் கை வைத்து ஒருபுறம் சாய்வாக திரும்பி, ரசித்து கேட்டார். இவ்வாறு , கருவூர் சித்தரின் பாடலை செவி சாய்த்து கேட்டதால், இங்கு சிவலிங்கம் இடப் பக்கம் சாய்வாக திரும்பிய நிலையில் அருள்பாலிக்கிறார்.
தஞ்சை பெரிய கோயில் அனைவரும் அறிந்ததே. அங்குள்ள பெரியசிவலிங்கத்தின் உயரம் சுமார் 15 அடி; சுற்றளவு 25 அடி . அதன் பீடம் அதைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும். பெரிய கோயிலை கட்டி முடிக்கப்பட்ட பிறகு கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. யாகசாலை ஏற்படுத்தப்பட்டு பல பெரியோர்களும், அந்தணர்களும் வேள்விகள் நடத்தினர்.
கும்பாபிஷேகத்திற்கு முன், சிவலிங்கத்தை அதன் பீடத்தில் நிறுத்திப் பொருத்தும் 'பிரதிஷ்டை' நிகழ்ச்சி மட்டும் நடைபெற வேண்டியிருந்தது. அதற்காக எட்டு வித மூலிகை மருந்துப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'அஷ்டபந்தன மருந்து' என்ற மெழுகு போன்ற பசைப் பொருளை சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் தடவி அதை பீடத்தில் நிறுத்தினார்கள்.
ஆனால், பலமுறை முயன்றும் சிவலிங்கத்தை அதன் பீடத்தில் பொருத்த முடியவில்லை.சாதாரணமாக இந்த அஷ்டபந்தன மருந்துக் கலவையை சிலையின் அடிப்பாகத்தில் பூசிய சில நிமிடங்களில் பீடத்துடன் சிலை இணைந்துவிடும் . ஒரு சிலமணி நேரங்களில் அது இறுகி, கல்லைப் போல உறுதியாகிவிடும். அந்த முறையின்படி மிகவும் பயபக்தியுடன் தயார் செய்யப்பட்ட அந்த அஷ்டபந்தன மருந்தினால் பெரிய கோயில் சிவலிங்கத்தைப் பீடத்தில் பொருத்த முடியாமல் எல்லோரும் திகைத்து நின்றனர்.கும்பாபிஷேகத்திற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய இயலாமல் மன்னன் ராஜராஜ சோழன், அந்தனர், பெரியோர் ஆகிய அனைவரும் கலங்கி நின்றனர்.
அப்போது அங்கு வந்தார் கருவூர் சித்தர். அவரிடம் நிலைமையை மன்னர் விளக்கினார். உடனே கர்ப்பக்கிரகத்திற்குள் சென்ற கருவூர் சித்தர் தன் வாயில் இருந்த எச்சிலை எடுத்து அந்த லிங்கத்தின் அடிப்பாகத்தில் தடவினார். பின்னர் அவர் கூறியபடியே, பிரதிஷ்டை செய்தபோது எல்லோரும் ஆச்சரியப்படும்படி அந்த லிங்கம் பீடத்தில் ஒட்டிக் கொண்டது. கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு மரியாதை செய்யும் பொருட்டு தஞ்சை பெரிய கோவியிலில் அந்தக் கருவூர் சித்தருக்கு தனி சன்னதி அமைத்தார்கள். அந்த சன்னதியை இன்றும் பெரிய கோயிலின் சிவன் சன்னதியின் பின்புறம் காணலாம்.