
வருடத்தில் ஒரு முறை மட்டுமே சில வினாடிகள் மட்டுமே இந்த அதிசயம் நடக்கும் பைரவர் கோவில் ஒன்று தமிழ் நாட்டில் உள்ளது. இங்கு பைரவர் தலை மீது வைக்கப் படும் எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசயம் நடக்கிறது. சிவபெருமானின் அம்சமாக விளங்குபவர் பைரவர். இவருக்கு சிவன் கோவில்களில் தனியாக சன்னதி இருக்கும். காவல் தெய்வமாகக் கருதப்படும் இவர் பக்தர்களின் கஷ்டங்களை உடனடியாக தீர்த்து வைக்கும் வல்லமை பெற்றவர்.
தமிழகத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கும் கோவில்கள் பல உள்ளன. அதில் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில் சித்தர்கள் வழிபடும் கோவிலாக விளங்குகிறது. இது வேலூர் மாவட்டம் இரங்காபுரம் மலைமேல் உள்ளது. கோபுரங்கள் இல்லாத பாதி சுவர் மட்டுமே உள்ள இந்தத் திருக்கோவிலின் கால பைரவர், தனி சன்னதியில் நின்று காட்சி அளித்து சித்தர்கள் வணங்கும் தெய்வமாக விளங்குகிறார்.
வருடம் ஒருமுறை மட்டுமே இவருக்குப் பொங்கல் வைத்து அருள் வாக்கு வாங்குவார்கள். மிகவும் சக்தி வாய்ந்த பிரபலமான கோவிலாக கருதப்படுகிறது. இக் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட நாளில் நடக்கும் அதிசயத்தைப் காண ஏராளமான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு வருவதுண்டு. மே மாதம் நடைபெறும் விழாவின் சிறப்பு அம்சம் பழம் கொடுப்பது ஆகும். பைரவருக்கு அபிஷேகம் அலங்காரம் முடிந்த பிறகு அவரின் தலைமீது பூ வைத்து அதில் ஒரு எலுமிச்சை பழம் வைப்பார்கள்.
எலுமிச்சை பழத்தை வைத்ததும் ஒரு ஈ பறந்து வந்து அந்த எலுமிச்சை பழத்தில் சில வினாடிகள் அமர்ந்து விட்டுப் பறந்து சென்றுவிடும். அது பறந்து சென்றதும் பழம் தானாக சுற்றிக் கீழே விழும். அதை ஒருவர் கீழே அமர்ந்து பிடித்துக் கொள்வார். வருடந்தோறும் இந்த அதிசய நிகழ்வு இக் கோவிலில் நடக்கிறது.
பைரவர் தலையில் வைக்கப்பட்ட எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசய நிகழ்வு நடந்த பிறகு பலரும் இந்த பைரவரிடம் அருள்வாக்கு கேட்டுச் செல்கின்றனர். பைரவர் உத்தரவுடன் சொல்லப்படும் இந்த அருள்வாக்கால் பல பக்தர்களின் மனக்குறைகள் நீங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. வேலூரிலிருந்து இக்கோவிலுக்குச் செல்ல பஸ் வசதி உண்டு.