முருகப்பெருமானால் நிலத்தடியில் அமைக்கப்பட்ட சிவன் கோயில்!

Shiva temple inside the well
Shiva temple inside the well
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on

வாரணாசியில் உள்ள மிகவும் ரகசியமான ஆலயங்களில் ஒன்று பிடா மகேஸ்வரர் சிவன் கோயில். இக்கோயிலில் அருளும் சிவலிங்கம் சுயம்பாக வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு அமைந்துள்ள மகேஸ்வரர் நாற்பது அடி நிலத்தடியில் அமைந்து காட்சி தருகிறார். மேலும், இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இக்கோயில் சிவனை பக்கத்தில் சென்று தரிசிக்க முடியாது. இத்தல சிவனை அங்குள்ள சுவற்றில் உள்ள துளையின் வழியாக மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் சிவராத்திரி, ரங்பரி ஏகாதசி மற்றும் குளிர்காலங்களில் வரும் திங்கள்கிழமை அன்று மட்டும்தான் திறக்கப்படும். ஆனால், ஆண்டுதோறும் அந்த சுவரில் வழியாக சிவனை தரிசிக்க முடியும். அதேசமயத்தில் வாரணாசியை பொறுத்தவரை இப்படி மறைக்கப்பட்ட கோயில்கள் பல இருக்கின்றன. கோயிலுக்கு மேல் சில வீடுகளும் அமைந்திருக்கும். அந்த அளவுக்கு மிகவும் சாதாரணமாக பல மறைக்கப்பட்ட கோயில்கள் வாரணாசியில் எங்கும் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
குலதெய்வம் கோபமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள்!
Shiva temple inside the well

பிடா மகேஸ்வரர் வாரணாசியின் ஷீட்லா தெருவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சௌக் அல்லது சிந்தியா காட்டில் இருந்து நடந்தே இங்கு வரலாம். சிந்தியா காட்டிலிருந்து கோயிலை அணுகினால் சித்தேஸ்வரி தேவி கோயிலை பற்றி உள்ளூர்வாசிகளிடம் கேட்டால், சித்தேஸ்வரியிலிருந்து அதே பாதையில் முன்னோக்கி செல்ல, நுழைவாயிலில் மணியுடன் உங்கள் இடது பக்கத்தில் ஒரு குறுகிய தெருவை காணலாம்.

இந்தத் தெருவில் நுழைந்து கோயிலுக்கு அழைத்துச் செல்லும் பாதையில் செல்ல வேண்டும். அப்படிக் குறுகிய சாலையில் நெருக்கமான இடத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். இந்தக் கோயில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டாலும் ஆண்டில் எந்த நாளில் வேண்டுமானாலும் சுவற்றின் மீது உள்ள துளையின் வழியாக சிவனை தரிசித்து வழிபடலாம். அப்படி வழிபடுவதனால் பல மாற்றங்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுவதை கண்கூடாக உணர முடியும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படும்போது சிவனை நேராகச் சென்று தரிசனம் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
கோயில் பிரசாதங்களும் அவற்றின் விசேஷ அம்சங்களும்!
Shiva temple inside the well

கிணற்றுக்குள் அமைந்திருக்கும் இந்த பிடா மகேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆவார். உலகில் பல சிவன் கோயில்கள் மலைக்கு மேல் அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கிணற்றுக்குள் அமைந்திருக்கும் சிவன் கோயில் பற்றி கேள்விப்படும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

வாரணாசிக்கு செல்ல வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. அதிலும் இந்த பிடா மகேஸ்வரர் ஆலயத்தையும் அதன் மர்மங்களையும், அந்த சக்தி வாய்ந்த சிவனைப் பற்றியும் அறியும்போது உடனே சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் எழுவது இயல்பு. எங்கு சென்றும் நடக்காத வேண்டுதல்களும் இந்த பிடா மகேஸ்வரரிடம் கேட்டால் அது விரைவில் நடைபெறும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது.

காசி விஸ்வநாதருக்கு நிகரானவர் இந்த பிடா மகேஸ்வரர். இந்த சிவன் மறைவாகவும் நாற்பது அடி நிலத்தடியிலும் இருப்பதினால் ஆதிகால படையெடுப்பினால் பாதிக்கப்படாமல் உள்ளது. மேலும், இக்கோயில் சிவனின் வழிகாட்டுதலால் அவரின் மகனான முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டது என்று கந்த புராணம் கூறுகிறது. இத்தல ஈசனை தரிசனம் செய்வதால் இருபது தலைமுறைக்கு மேல் முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com