

திருவிடந்தை தலம் மாமல்லபுரத்தில் இருந்து 25கி.மீ. தொலைவில் உள்ளது. கடலலை கூட ஓய்வெடுக்கலாம். ஆனால் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் நடைபெறும் திருமணத்திற்கு முடிவே இல்லை. திருமணமாகாத பெண்கள் மற்றும் பையன்களின் பெற்றோரின் கவலையைத் தீர்க்கக்கூடிய தலம். திருவிடந்தை வராஹப்பெருமாள் புராண காலத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஞானபிரான். சரித்திர காலத்திலும் லீலைகள் நடத்தி உள்ளான். காலங்களில் இடைவெளி இருந்தாலும் எப்போதும் மணக்கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி என்ற முனிவர் தவமியற்றி வந்தார். அவருக்குப் பணிவிடை செய்ய கணிகை ஒருத்தி வந்தாள். அவளின் ஆசை நிறைவேறாது முனிவர் வீடுபேறு அடைந்தார். எப்படியாவது ஏதேனும் ஒரு முனிவருக்கு பணிவிடை செய்து அவருக்கு பத்தினியாகி தானும் இறைவன் பதம் அடைய வேண்டும் என்று நினைத்தாள் கணிகை. காடுகளில் சுற்றி வந்தாள். அவளது ஆசையை அறிந்த காலவ முனிவர் அவளை மணந்தார்.
மகாலக்ஷ்மியின் அருளால் அவர்களுக்கு 360 கன்னிகைகள் தோன்றினார்கள். அதில் முதல் கன்னிகையின் பெயர் கோமளவல்லி. குழந்தைகளை ஈன்றவள் காலத்தின் கோலத்தால் மறைந்தாள். காலவமுனிவர் பெண்களை வளர்க்க மிகவும் சிரமப் பட்டார்.
பெண்கள் வளர்ந்து பருவ வயதை அடைந்ததும் அவர்களுக்கு திருமணம் செய்யவேண்டுமே என்ற கவலை அவருக்கு ஏற்பட்டது. சம்புத் தீவிற்கு வந்து மற்ற முனிவர்களின் ஆலோசனைகளை கேட்க அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடச் சொன்னார். பெருமாளும் முனிவரின் கோரிக்கையை ஏற்று தினமும் ஒரு பிரம்மச்சாரியாக வந்து 360 பெண்களையும் மணந்தார். கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தன் இடப்பாகத்தில் வைத்துக்கொண்டு எழுந்தருளினார்.
இத்தலத்தில் லக்ஷ்மியை இடதுபக்கம் ஏந்திய தலம் என்பதால் திருவிடந்தை எனப் பெயர் பெற்றது. கருவறையில் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்கிரகமாக தேவியை மடியில் அமர்த்தி வீற்றிருக்கிறார். திருமாலின் திருவடிக்குக் கீழ் ஆதிசேஷன் மனைவியுடன் உள்ளார். பெருமாளின் இடது பக்கமாக உள்ளார் நாச்சியார். அவளுக்கு அகிலவல்லி நாச்சியார் என்றும், பெருமாள் தினமும் திருமணம் செய்து கொண்டதால் நித்திய கல்யாண பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
உத்சவராக நித்ய கல்யாண பெருமாள் சீதேவி பூதேவியுடன் பஞ்ச லோக விக்கிரகமாக காட்சி தருகின்றனர். பெருமாளின் திருமுகத்தில் ஒரு திருஷ்டி பொட்டு இயற்கையிலேயே அமைந்துள்ளது. தனிச்சன்னதியில் இருக்கும். மற்ற கோவில்களில் திருஷ்டிப்பொட்டு அபிஷேகத்தின்போது அழிந்துவிடும். ஆனால் இந்த திருஷ்டிப் பொட்டு அழியாமல் எப்போதும் இருப்பது தனிச் சிறப்பாகும்.கோமளவல்லித் தாயாரின் திருமுகத்தின் திருஷ்டிப்பொட்டையும் தரிசிப்பவர் களுக்கு திருஷ்டி தோஷம் விலகும்.இந்தக் கோவிலுக்கு தரிசிக்க வந்தால் சட்டென்று திருமணம் கைகூடும்.
இத்தலம் 108திவ்யதேசங்களில் 62வது தலமாகக் கருதப்படுகிறது. கேது அம்சமான ஆதிசேஷன் தன் மனைவி வாசுகியுடன் வராக பெருமானின் இடது காலைத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பதால் ராகு கேது தோஷ நிவர்த்தி தலமாகவும் இது விளங்குகிறது.
திருமண பரிகார முறை
இரண்டு மாலைகள் வாங்கிக் கொடுத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்யவேண்டும். இருமாலைகளில் ஒன்றை பெருமாளுக்கு சாற்றிவிட்டு மற்றொரு மாலை பரிகாரம் செய்பவரிடம் கொடுக்கப்படும். அதை பரிகாரம் செய்பவர் கழுத்தில் அணிந்து கோவிலை ஒன்பது முறை சுற்ற வேண்டும். வீட்டிற்குச் சென்று மாலையை பூஜை அறையில் வைத்து பெருமாளை வேண்டிக் கொள்ள திருமணம் நடைபெறும்.
திருமணம் நடந்த பின் தம்பதி சமேதராக கோவிலுக்கு வந்து இரண்டு மாலைகள் பெருமாளுக்கு சாற்றி கையோடு வீட்டில் உள்ள பழைய மாலையை எடுத்துவந்து கோவில் தலவிருட்சமாக புன்னை மரத்தில் கட்டவேண்டும்.