

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நாள்தான் சிவராத்திரி. 2025-ம் ஆண்டின் கடைசி சிவராத்திரி நாளை(டிசம்பர் 18-ம்தேதி) வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் வரும் சிவராத்திரி தேவ முகூர்த்த சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. அதுவும் இந்த மாத சிவராத்திரி வியாழக்கிழமை வருவது இன்னும் சிறப்பு. ஏனெனில் குரு பார்க்க கோடி நன்மைன்னு சொல்லுவாங்க. அந்த ஆதி குருவே தேடி வரும் மாத சிவராத்திரி என்பதால் அன்றைய தினம் சிவவழிபாடு செய்வது புண்ணியத்தை தரும் என்று நம்பப்படுகிறது. உங்கள் மனதில் இருக்கும் பாரத்தை எல்லாம் இறக்கி வைக்க இதை விட ஒரு நல்ல நாள் கிடைக்காது.
அதேபோல் மார்கழி மாதம் தேவ மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள், தானங்கள் ஆகியவை பல மடங்கு புண்ணியத்தை தரும் என்பது ஐதீகம்.
விடியாத குளிரில் விழித்திருந்து வேண்டினால் விதியின் பிணைப்பும் விலகும் என்கின்ற பழமொழிக்கு ஏற்ப சிவராத்திரி அன்று இரவு தூங்காமல் இருந்து வேண்டினால் நாம் வேண்டியது அனைத்து கிடைக்கும். இரவில் விழித்திருக்கும் போது சிவபுராணம், லிங்காஷ்டகம், கோளாறு பதிகம் போன்ற சிவபெருமானுக்கு உரிய பாடல்களை கேட்க வேண்டும். சிவன் காயத்ரி மந்திரத்தையும் கூறலாம்.
சிவன் காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்தோ ருத்ர ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை அல்லது உங்களால் முடிந்த அளவிற்கு உச்சரிக்க வேண்டும்.
அதேபோல் சிவராத்திரி அன்று இரவு இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அதாவது அன்றைய இரவு தாம்பத்தியம் வைத்து கொள்ளும் ஒரு தவறை மட்டும் செய்துவிடக்கூடாது.
நாளை அதிகாலையில் எழுந்து நீராடிய பின்னர் வீட்டில் பூஜையறையில் சிவபெருமானுக்கு பூக்கள் சாற்றி, நம்பிக்கையோடு சிவபெருமானை நினைத்து விளக்கேற்றுங்கள்.
மாலையில் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி மனமுருகி சிவபெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
மாத சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு சுத்தமான பசும்பாலில் அபிஷேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல் அன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒருவர் தொடர்ந்து இடைவிடாமல் 24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை முறையாக சிரத்தையுடன் கடைபிடித்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.