திருநந்திக்கரை குடைவரை குகைக் கோயில்!

Kugai kovil
குடைவரை குகைக் கோயில்

ன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே அமைந்துள்ளது திருநந்திக்கரை குடைவரை குகைக்கோயில். கி.பி. 7ம் நூற்றாண்டில் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட பல்லவர் கால குகைக் கோயில் இது. சமணர்களின் வழிபாட்டுக்காக நிறுவப்பட்ட இக்கோயில் பிற்காலத்தில இந்து கோயிலாக மாறிவிட்டது.

இங்குள்ள சுதை ஓவியங்கள் கி.பி. 9 மற்றும் 10ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். சில சுவரோவியங்கள் கேரள பாணியில் அமைந்துள்ளன. இவை ராமாயணம் மற்றும் மகாபாரத நிகழ்வுக் காட்சிகளை சித்தரிக்கும் வண்ணம் உள்ளன. இயற்கையான தாவர நிறங்கள் மற்றும் நிறமிகளைக் கொண்டு இந்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நந்தியாற்றங்கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலின் ஒரு பகுதியாகும். இது மிகவும் தொன்மையான குடைவரை கோயில். 1956ம் ஆண்டு வரை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. தற்போது தமிழ்நாடு அரசின் கீழ் உள்ளது.

கி.பி. 8ம் நூற்றாண்டில் வீரநந்தி என்ற சமண முனிவர் இக்கோயிலில் தங்கி சமயப் பணியாற்றியுள்ளார். கி.பி.1003ம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன் இக்கோயிலில் தங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சுடுநீரால் செய்யும் அபிஷேகம் குளிர்ந்த நீராக மாறும் அதிசயக் கோயில்!
Kugai kovil

முகப்பின் மேற்குப்பாறை சுவரில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் திருநந்திக்கரை மகாதேவருக்கு தன் பிறந்த நாளான ஐப்பசி சதய நாளன்று விழா எடுக்கவும், ஆற்றில் நீராட்டவும், நாழி நெய் ஊற்றி நந்தா விளக்கேற்றவும் இந்நாட்டில் இருந்த முட்டம் என்னும் ஊரை மும்முடிச் சோழநல்லூர் என பெயர் மாற்றம் செய்து தானமாக வழங்கிய செய்தியினை பதிவு செய்துள்ளது.

திருநந்திக்கரையில் இரண்டு முக்கியமான சிவன் கோயில்கள் உள்ளன. ஒன்று, திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில் மற்றது திருநந்திக்கரை குகைக் கோயில். தெற்கு நோக்கிய திருநந்திக்கரை குன்றின் சரிவில் உள்ளது இக்குடைவரை கோயில். இது தரை மட்டத்திலிருந்து 4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து குகைத்தளத்திற்கு செல்வதற்கு 10 படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இதில் இரண்டு படிகள் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் வெட்டப்பட்டது.

இக்குடைவரைக் குகையில் முகப்பு மண்டபம், முக மண்டபம், உள் மண்டபம், கருவறை என உள்ளன. முகப்பு மண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுதை ஓவியங்கள் பல அழிந்து காணப்படுகின்றன. உள் மண்டபத்தின் மேற்குச் சுவரில் கருவறை அகழப்பட்டுள்ளது. இதில் சிவலிங்கத்தின் பாணம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலில் நான்கு வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்து குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com