
உத்தராயண புண்யகாலம் என்று சொல்லப்படும் தை மாத முதல் நாளை மகர சங்கராந்தி என்று அழைப்பர். அன்று தான் நமக்கு பொங்கல் பண்டிகையுமாகும். அதே போல தட்சிணாயனத்தின் தொடக்கம் அதாவது ஆடி மாதம் முதல் நாள் கடக சங்காரந்தி என்று அழைக்கப்படுகிறது.
உத்திராயணத்தின் ஆரம்பத்தில் வரும் தை மாதம் தேவர்களின் பகல் காலத்தின் தொடக்கமாகவும், தட்சிணாயனத்தின் ஆரம்பத்தில் வரும் ஆடி மாதம் தேவர்களின் இரவு காலத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு காலமாகும். தட்சிணாயன புண்யகாலம் இந்த வருடம் ஜூலை 16-ம் தேதி ஆரம்பித்து ஜனவரி 13-ம் தேதி முடிவடைகிறது.
சூரியனின் நகர்வின் அடிப்படையில் இயற்கையாக அமையும் புண்ணிய காலங்கள் உத்தராயண புண்ணிய காலமும் தட்சிணாயன புண்ணிய காலமும் ஆகும். உத்தராயணம் என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம். சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள், அதாவது தை மாதம் முதல் நாள் உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும்.
தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி வரை இருக்கிறது. இந்த ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். இது முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறார்.
இதை தட்சிணாயனம் என்று அழைக்கிறார்கள். ஆடி மாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் சூரியன் அடுத்த ஆறு மாதங்களுக்கு அதாவது பங்குனி மாதம் வரை தெற்கு நோக்கியே பயணிக்கிறார்.
தேவர்களின் மாலைப் பொழுதாக தட்சிணாயனம் வருவதால் பெரும்பாலான பண்டிகைகள் அந்த காலத்தில் இருப்பதைக் காணலாம். குளிர்ச்சியான தட்சிணாயன காலம் பண்டிகை, திருவிழா கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
தட்சிணாயனத்தின் தொடக்க மாதமாகிய ஆடி மாதத்திலேயே ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், வரலட்சுமி விரதம் என்று அம்பிகை, மகாலட்சுமிக்கு மிகவும் விசேஷ நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடிப் பூரத்தன்று எல்லா அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் கோலாகலமாக நடைபெறும். எல்லா அம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல் போன்ற விசேஷங்களும் நடைபெறும்.
ஆடியைத் தொடர்ந்து வரும் ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா, மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் இப்படி பல முக்கியமான பண்டிகைகள் யாவும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவதைக் காணலாம்.
இன்று (ஜூலை 17-ம் தேதி) ஆடி முதல் நாள், தட்சிணாயன புண்ணியகாலம், ஆரம்பிக்கிறது. நாமும் நமக்கு பண்டிகைகளையும் விசேஷங்களையும் கொண்டு வரும் தட்சிணாயன புண்ணிய காலத்தை வரவேற்றுக் கொண்டாடுவோம்.