

வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றிய பரத்வாஜ் மகரிஷி ஒரு சமயம் நர்மதை நதியில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நீராடிய மங்கை ஒருத்தியைப் பார்த்து மயங்கினார் வசிஷ்டர். மோகித்த அவர் அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று இல்லறம் நடத்தினார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் பிறகு அந்ந மங்கையோ தேவலோகம் சென்று விட்டாள். பரத்வாஜ முனிவரும் அவந்தி நகரிலேயே குழந்தையை விட்டு விட்டு நர்மதை நதிக்கரைக்கு மீண்டும் சென்று பாதியில் விட்ட தவத்தை தொடர்ந்தார்.
அந்த ஆண் குழந்தையை பூமா தேவி அரவணைத்து வளர்த்து வந்தாள். குழந்தையின் மேனி செந்நிறத்துடன் அக்னி போல் ஒளி வீசியதால் அவனுக்கு அங்காரகன் என்று பெயர் சூட்டினார். அங்காரகனுக்கு ஏழு வயது பூர்த்தியடைந்தது. ஒரு நாள் பூமா தேவியிடம் தனது தந்தை யாரென்று தெரிய ஆவலாக இருப்பதாகச் சொன்னான். உடனே பூமாதேவி, ‘உன் தந்தையின் பெயர் பரத்வாஜர். மகரிஷிகளின் சிறந்தவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறி அவனை பரத்வாஜர் ஆச்ரமத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அங்கு மகரிஷியை சந்தித்து அவர் மகன் அங்காரகனை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினாள். மிகவும் மகிழ்ச்சி அடைந்த மகரிஷி, அவனை அன்புடன் அணைத்துக் கொண்டார். உரிய வயது வந்ததும் அவனுக்கு உபநயனம் முதலிய சடங்குகளை முறைப்படி செய்து வைத்து வேத அத்யயனத்தையும் துவங்கி வைத்தார். மிகக் குறுகிய காலத்திலேயே அவன் பல கலைகளில் சிறந்து விளங்கினான். ஒரு நாள் அவன் தனது தந்தையிடம் தான் சர்வ கலைகளையும் பெற விரும்புவதாகவும் அதற்கேற்ற வழியைக் காட்டும்படி கேட்டான்.
தவத்தைக் காட்டிலும் சிறந்த வழி இல்லை. நீ வினாயகரை குறித்து தவம் செய் என்று கூறி, உரிய மந்திரங்களை உபதேசித்து அனுப்பினார். அவந்தி நகரை அடுத்த அடர்ந்த காட்டில் ஒரு உரிய இடத்தைத் தேர்ந்தேடுத்து அங்காரகன் தனது தவத்தை மேற்கொண்டான். பல நூறு வருடங்கள் கடுமையாக தவம் செய்ய அவனுக்குப் பலன் கிடைக்கும் காலம் கனிந்தது. மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில் விநாயகர் அங்காரகனுக்கு தரிசனம் தந்தார்.
அவரது பாதங்களை நமஸ்கரித்து, நான் அம்ருதம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன் என்று கூறி துதித்துப் போற்றினான். இறுதியாக, அவரிடம் தான் சில வரங்கள் பெற விரும்புவதாகவும் கூறினான். எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள் என்று விநாயகர் கூற, அங்காரகன், ‘லம்போதரனே தங்களை தரிசித்த என்னை அனைவரும் மங்களன் என்று அழைக்க வேண்டும். அது மட்டுமல்ல, இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். தங்களை வழிபடும் பக்தர்களின் துயர் நீக்கி தாங்கள் அருள்புரிய வேண்டும்’ என்றார்.
மேலும், என்னை வணங்குபவர்க்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும் என்றான். உடனே கணபதியும், ‘நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன் என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த சதுர்த்தி சங்கட சதுர்த்தியாக போற்றப்படும். இந்நாளில் திரிகோண சுத்தியுடன் என்னை வழிபடுபவர்களுக்கு சங்கடங்களை அடியோடு விலக்குவேன்’ என்றார்
பிறகு விநாயகர் அருளால் தேவலோகம் அடைந்த அங்காரகன் அங்கு தேவாமிர்தம் பருகி நவகிரகங்களுள் ஒன்றாக பேர் பெற்றான். எனவே, செவ்வாய்க்கிழமை வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளைக் காட்டிலும் ஒப்பற்றது. விநாயகருக்கு உகந்ததாக கருதப்படுகிறது.