

பல்லாங்குழியும் தாயமும் நம் கலாச்சாரத்தின் உயிரோட்டம். நம் பாரம்பரியத்தின் அடையாளங்கள். தமிழர் கலாச்சாரம் என்பது கலை, பண்பாடு, ஒழுக்கம், வாழ்க்கை நெறி ஆகியவற்றின் அழகிய சங்கமம் ஆகும். அந்த பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதில் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. பல்லாங்குழி தாயம் போன்றவை பொழுதுபோக்கைத் தாண்டி குடும்ப ஒற்றுமையையும் சிந்தனை திறனையும் வளர்த்த கலாச்சார சின்னங்களாக விளங்கின.
பல்லாங்குழி தாயம் விளையாட்டு பற்றி கேட்டதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? பழைய பாட்டி காலத்து விளையாட்டு என்றா அல்லது நினைவில் மறைந்து போன ஏதோ ஒன்றா? உண்மையில் இவை வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற ஓர் அறிவுக் களஞ்சியம். ஆனால் அதை மறந்தே போனோமே நாம்.
பல்லாங்குழி ஆட்டம் இரண்டு பேர் விளையாடலாம். ஒருவர் தனது பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு குழியில் இருந்து விதைகளை எடுத்து வலமிருந்து இடமாக ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு விதையாக போட வேண்டும். கடைசி விதை விழும் குழியில் ஏற்கனவே விதைகள் இருந்தால் அவற்றையும் எடுத்து தொடர்ந்து போட வேண்டும். எந்த குழியில் கடைசி விதை விழுகிறதோ அந்த குழி காலியாக இருந்தால் அந்த சுற்று முடிவடைகிறது. இது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. மனம் மற்றும் உடல் நலத்திற்கு பல பயன்களை அளிக்கிறது.
நுண்ணறிவு மேம்பாடு
விளையாட்டின்போது செய்யும் கணக்கீடுகள் மற்றும் முன் கூட்டியே திட்டமிடுதல் நம் அறிவாற்றலை மேம்படுத்துகிறது.
கவனம் மற்றும் ஒருமுகப்படுத்துதல்
விளையாட்டின்போது கவனமாக இருக்கவேண்டி இருப்பதால் நம் ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது.
விரல்களின் நுண்ணிய அசைவுகள்
விதைகளை எடுத்து போடும்போது விரல்களின் நுண்ணிய அசைவுகள் மேம்படுகிறது. இது குறிப்பாக வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சமூக உறவுகளை வளர்த்தல்
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விளையாடுவதால் இது சமூக விளையாட்டாக விளங்குகிறது.
மன அழுத்தத்தை குறைத்தல்
விளையாட்டில் ஈடுபடும்போது மன அழுத்தம் குறையும். இது ஒரு சிறந்த மன ஓய்வு பயிற்சியாகவும் செயல்படுகிறது.
தாயம் விளையாட்டை எடுத்துக்கொண்டால் திட்டமிடும் திறன் முடிவெடுக்கும் திறன் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடும் மகிழ்ச்சி ஆகியவற்றை அடையமுடிகிறது.
தாயம் என்பது தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய பலகை விளையாட்டுகளில் ஒன்று. இந்த விளையாட்டில் தாய்க்கட்டை பயன்படுத்தபடுகிறது. இது வெறும் அதிர்ஷ்ட விளையாட்டு மட்டும் அல்ல. திட்டமிடும் திறன், சரியான நேரத்தில் முடிவெடுக்கும் திறன், பொறுமை, எதிராளிகள் நகர்வை கணிக்கும் திறன் ஆகியவற்றை வளர்க்கிறது.
அந்த காலத்தில் கோடை விடுமுறை திருவிழா நாட்கள், குடும்ப சந்திப்புகள் போன்ற நேரங்களில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இந்த தாயம் விளையாட்டு ஆகும். இது குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் ஒரு சமூகச் செயல்பாடாகவும் இருந்தது.
தாயம் விளையாடுவதால் திட்டமிடுதல், பொறுமை, வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவற்றை கற்றுத்தரும் விளையாட்டு என்றே கூறலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பல்லாங்குழி தாயம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மறைந்து வருகின்றன. பாரம்பரிய விளையாட்டுக்களின் மகத்துவம் பற்றி "sports psychologist" திரு கணேஷ் குமார் ஒரு பேட்டியில் " மனரீதியாக பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் என்னிடம் வரும்போது அந்த குழந்தைகளுக்கு நான் வழங்கும் முதல் பயிற்சியே நம் கலாச்சாரத்தைப் போற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்தான்" என்று கூறி இருக்கிறார்.
மொபைல் கேம்ஸ் இல் மூழ்கி இருக்கும் இந்த தலைமுறை குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகள் ஆன பல்லாங்குழி தாயம் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் அவசியம் இருக்கிறது. இது மறைந்து போகாமல் இதன் மதிப்பை உணர்ந்து இதனைப் பாதுகாக்க வேண்டும். நம் கலாச்சாரம் பழைய தலைமுறையோடு அழிந்துவிடக் கூடாது.
உங்கள் பிள்ளைகளின் கவனச்சிதறலையும் மொபைல் போன் மோகத்தையும் முற்றிலுமாக மாற்றி, அவர்களின் கணிதத் திறன், திட்டமிடுதல் மற்றும் சமூகப் பிணைப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் எளிய வாழ்வியல் மாற்றத்தை நீங்கள் இதன் மூலம் அடைவீர்கள்.