

திருச்சி அருகில் தொட்டியத்தில் உள்ள பூமிதேவி சீதேவி சமேத வேத நாராயணப் பெருமாள் திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் வேதநாராயண பெருமாளும் வேதநாயகி தாயாரும் உலகமக்கள் அனைவருக்கும் ஞானத்தை அருள்கின்றனர்.
இக்கோவில் காவேரி ஆற்றின் வடகரையில் உள்ளது உள்ளே நுழைந்ததும் கம்பத்தடி ஆஞ்சநேயரும் மற்றும் கருடாழ்வாரையும் வழிபட்டு உள்ளே சென்றால் பெருமாளைக் காணலாம். சிவபெருமானுக்கு விசேஷமான வில்வமரத்தின் அடியில் பெருமாள் பாதங்கள் அமைந்துள்ளன. அருகிலுள்ள தனிச்சன்னதியில் ஆண்டாள் அருள் பாலிக்கிறார்.
இத்தலத்தில் ஆதிசேஷன் மீது நான்கு வேதங்கள் ஆகிய ருக், யஜுர் சாம, அதர்வண வேதங்களைத் தலையணையாகக் கொண்ட பெருமாள் தனது கழுத்தில் உள்ள பிரம்மாவிற்கு வேத வழிகாட்டுதலையும், அறிவுரைகளையும் வழங்குகிறான் என்பது ஒரு நம்பிக்கையாகும் சீதேவியும், பூதேவியும் பெருமாள் பாதங்களுக்கு அருகில் உள்ளனர் கீழே பிரகல்லாதன் மூன்று வயது குழந்தையாகப் காட்சி தருகிறார்.
ஆதிரங்கம் அல்லது முதல் அரங்கம் என்று போற்றப்படும் இந்த கோவில் பிரம்மா, பிரக்லாதன், சுக்ரீவன், அனுமன், கருடன், அரையர், சோழர்கள் போன்றோர் வழிபட்டு தெய்வீக அங்கீகாரம் பெற்ற தலமாகும் இங்கு 27அகல் தீபங்கள் ஏற்றி
இறைவன் திருவடியில் நம் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து வழிபட திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் 5நெய் தீபங்கள் ஏற்றி வெண்தாமரை மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்தால் கல்வியில் முன்னேற்றம், தொழில் மற்றும் வேலையில் செழிப்பும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
கோவில் வரலாறு:
பேரரசர் மகாபலி சக்கரவர்த்தி போருக்காக மைசூரை நோக்கி படையெடுத்தபோது வழியில் ஒரு மணற்குன்றின் மேல் ஓய்வெடுத்தார். அப்போது பெருமாள் அவர் கனவில் தோன்றி அந்த இடத்தில் பூமிக்கடியில் ஒரு சிலை இருப்பதாகவும் அதைத்தோண்டி எடுத்துக்கோவில் கட்டுமாறு கட்டளையிட்டார்.
அவர் போரில் வெற்றி பெறுவார் என ஆசீர்வதித்தார். அப்படியே அரசனும் சிலையை எடுத்து கோவில் கட்டி அங்கே ஒரு கிராமத்தை நிறுவி அதற்கு திருநாராயணபுரம் என்று பெயரிட்டான். மைசூர் போரில் வெற்றி அடைந்ததும் ஏராளமான நிலங்களை இந்த கோவிலுக்கு அளித்தான்.
பிரகலாதனுக்காக விஷ்ணு பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தார் பிரக்லாதன் பெருமாளை சாந்தமாக எழுந்தருள வேண்ட அவனை திருநாராயணபுரத்துக்கு வரும்படி கூற பிரக்லாதனும் சென்றார். அவன் கூறியபடி சாந்த மூர்த்தியாக இங்கு காட்சியளித்தார்.
பிரம்மாவின் கர்வம் ஒடுக்க
பிரம்மாவின் கர்வத்தை ஒடுக்குவதற்காக வேத நாராயணன் தோன்றினார். முன் காலத்தில் இது சதுரவேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது பெருமாள் வேதநாராயணனாகத் தோன்றி பிரம்மாவிற்கு வேத ஞானங்களை வழங்கினார். இங்கு வழிபட்டால் கல்வி அறிவு செழிக்கும் என்பது நம்பிக்கை.
பிள்ளை திருநாரையூர் அபிமான க்ஷேத்திரம்
திருநாரையூர் அரையர் என்பவர் இந்த பெருமாளை வழிபட மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் இங்கு தங்கி இருந்தார். ஒருநாள் இரவு கோவிலின் மேற்கூரை பேரீச்ச மர ஓலைகள் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த அரையர் தீயிலிருந்து இறைவனைக் காக்க ஆறு குழந்தைகளையும் அவரை நோக்கி எறிந்தார் துரதிஷ்டவசமாக தீஎறிந்தது.
பிறகு தனக்குப் ப்ரியமான இறைவனை தீ தொடக்கூடாது என்பதற்காக இறைவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். அவரது பக்தியால் மகிழ்ந்த இறைவன் அவர் முழு குடும்பத்திற்கும் மோட்சம் அளித்தார். இதனால் இத்தலம் பிள்ளை திருநாரையூரின் அபிமான க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது.
கோவில் சிறப்பு
இக்கோவிலுக்கு வந்து மனமார பிரார்த்தனை செய்து தங்கள் புத்தகங்களை வேத நாராயணப்பெருமாள் பாதங்களில் சமர்ப்பிக்கும் மாணவர்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
இத்தலம் திருச்சியிலிருந்து 50கி.மீ. தொலைவில் உள்ள தொட்டியத்தில் அமைந்துள்ளது. குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கும், திருமணத்தடை நீங்கவும். நல்ல ஞானமும் பெற வேதநாராயணப் பெருமாளை அவசியம் தரிசிக்கவேண்டும்.
அமைவிடம்: திருச்சியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது. தொட்டியம் பேருந்து நிலையத்திலிருந்து காட்டுப்புத்தூர் செல்லும் வழியில் (அரசலூர் ஆர்ச் வழியாக) 4 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
இந்தப் பதிவின் மூலம், உங்கள் குழந்தைகளின் மந்தநிலை நீங்கி கல்வியில் முதன்மை மாணவர்களாகத் திகழ்வதற்கான ஆன்மீக வழிகாட்டுதலையும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் விருத்திக்கான எளிய வழிபாட்டு ரகசியங்களையும் நீங்கள் அடைவீர்கள்.