ஆந்திர மாநிலத்தில் திருமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.
ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஒருசில நேரங்களில் பக்தர்கள் 3 நாட்கள் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஆன்லைன் டிக்கெட் முறையை கொண்டு வந்து அதன் மூலம் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்களை வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் ஒரு சில மாற்றங்களை அறிவித்திருக்கிறது. அதன்படி ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நிதியுதவி கொடுப்பவர்கள் எளிதாக தரிசனம் செய்யவும், தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் 1500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்களை வழங்கி வருகிறது. இதில் 500 டிக்கெட்கள் 3 மாதங்களுக்கு முன்பு அட்வான்ஸ் புக்கிங் செய்பவர்களுக்கும், திருப்பதி விமான நிலையத்தில் ஸ்பாட் புக்கிங் செய்வதற்கு 200 டிக்கெட்டுகளும், மீதமுள்ள 800 டிக்கெட் தினசரி புக்கிங் செய்வதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனிமேல் தினசரி புக்கிங் செய்யப்படும் 800 டிக்கெட்களிலிருந்து 300 டிக்கெட்களை ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு ஒதுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.
தினமும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் இந்த சிறப்பு டிக்கெட்டை ரூ.10,000 நன்கொடை கொடுத்தவர்கள் மதியம் 1 மணிக்குள் முன்பதிவு செய்திருக்கும் பட்சத்தில் அன்றே மாலை 4 மணிக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.10,000 நன்கொடை வழங்கிய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதற்கு தகுதி பெற பக்தர்கள் 2025 மே 1-ம்தேதிக்கு பிறகு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய நடைமுறை ஜூன் 10-ம்தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.