-தா. சரவணா,
வேலுார் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 1ம் தேதி சிரசுத்திருவிழா அதிவிமரிசையாக நடந்து வருகிறது.
இத்திருவிழாவில் உள்ளூர், மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 29ம்தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. கடந்த 10ம்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், 13ம்தேதி தேர்த் திருவிழா நடந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிரசுத் திருவிழா 14ம் தேதி நடந்தது.
விழா முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ஜனப்பதெரு, பிச்சனுார்பேட்டை, நடுப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து அம்மனுக்கு சீர் வரிசை, பட்டுப்புடவை ஆகியவை எடுத்துவரப்பட்டு தரணம்பேட்டை முத்தியாலயம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது.
பின்னர் அம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டது. சிரசு ஊர்வலம் சென்ற தெருக்களில் புலியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் ஆகியவை நடந்தன. தரணம்பேட்டை ஜி.என்.செட்டித் தெரு, காந்தி ரோடு, ஜவஹர்லால் தெரு, கோபாலபுரம் வழியாக சிரசு ஊர்வலம் சென்றது. சிரசு ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் தெருக்களிலும், மாடி வீடுகளிலும் திரண்டு காணப்பட்டனர்.
இதனால் சிரசு ஊர்வலம் சென்ற தெருக்களிலும் அதை சுற்றியுள்ள தெருக்களிலும் நடக்க கூட முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிரசு மீது பூச்சரம் போட பக்தர்கள் முண்டியடித்தனர். மேலும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் சிரசு ஊர்வலம் சென்ற தெருக்களில் ஆயிரக்கணக்கான சூறைத் தேங்காய்களை உடைத்தனர். இதனால் தெருக்களில் தேங்காய் ஓடுகள் சிதறிக்கிடந்தன. சூறை விடும் தேங்காய்களை மலைகிராமங்களைச் சேர்ந்த மக்கள் சேகரித்து எடுத்துச்சென்றனர். நகரின் முக்கிய தெருக்களின் வழியாக சென்ற சிரசு ஊர்வலம், காலை 8.20 மணிக்கு கோயிலை சென்றடைந்தது.
அம்மன் சிரசு, கோயில் வளாகத்தை சுற்றி வந்த பின்பு, மண்டபத்தில் உள்ள 7 அடி உயர சண்டாளச்சி அம்மன் உடலில் கெங்கையம்மன் சிரசு பொருத்தப்பட்டது. பின்னர் கூழ் வார்த்தல், கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. காலை முதல் இரவு வரையில் தொடர்ந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு சென்றனர். இரவு 8 மணிக்கு மீண்டும் சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்த சிரசு எடுக்கப்பட்டு கவுண்டன்ய ஆறு, ராஜேந்திரசிங் தெரு, ஆழ்வார் முருகப்ப முதலி தெரு, சுண்ணாம்புபேட்டை பகுதிகளின் வழியாக சென்று சுண்ணாம்புபேட்டை சலவை படித்துறையில் சிரசு ஊர்வலம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதனை கவுண்டன்ய ஆறு அருகே கட்டப்பட்டு வரும் பாலங்கள், கோபாலபுரம், காமராஜர் பாலம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நின்று கண்டு ரசித்தனர்.