

விநாயகப் பெருமானே!
வினைதீர்க்கும் முதல்வனே!
ஆனை முகங்கொண்டு
அருளைத் தருபவனே!
மூத்தவனாய் நீ பிறந்து
முருகனுக்கு முன்னாலே
முக்கனியின் முதல்கனியை
முத்தாய்ப்பாய்ப் பெற்றவனே!
மாம்பழத்தை நீ பெற்றதனால்
மற்றுமொரு படைவீடு
பழனி மலையாகப்
பாருக்குக் கிடைத்ததுவே!
தொடங்கும் எப்பணிக்கும்
தொடக்கம் தருபவனே!
முந்தியே நின்றென்றும்
மூவுலகும் காப்பவனே!
நந்தி வாகனனின்
நனிசிறந்த தலைமகனே!
உறுப்புமாற்றுச் சிகிச்சையினை
உலகுக்கு உணர்த்தியநீ
யானைத் தலையேற்றாய்!
யாவரையும் மகிழ்வித்தாய்!
யானைபலம் தந்து
யாவற்றிலும் வெற்றியையே
அடைந்திடும் திறன்தருவாய்
அகிலம்புகழ வைப்பாய்!
சுருக்கெழுத்துக்கும் நீயே
சிறப்பான முன்னோடி!
பிள்ளையார் சுழி(உ)யினிலே
கடவுளைக் காட்டிவிடும்
‘ஷார்ட் கேன்ட்’ஐ நீதானே
ஜகத்திற்கு அளித்திட்டாய்!
எளிய மூஞ்சூறையும்
இறைபணிக்கு இழுத்து வந்து
உந்தன் வாகனமாய்
உலகறியச் செய்துவிட்டாய்!
எளிமையை மனிதர்க்கு
எப்பொழுதும் உணர்த்துபவனே!
சந்தனமோ சாணமோ…
உன்னை நினைத்து
உருட்டிப் பிடித்தாலே
அதுக்குள்ளே உன் வாசம்!
அகமெங்கும் உன் பாசம்!
ஆற்றங் கரைகளிலும்
அரசமர நிழல்களிலும்
வானத்தைக் கூரையாக்கி
வாசம் செய்பவன்நீ!
ஆனாலும் என்றைக்கும்
மக்கள் மன சிம்மாசனத்தில்
மன்னனாய் நீதானே!
தமிழை உன் தம்பி
தனியாகவே குத்தகைக்கு
எடுத்தே விட்டதனால்
எழுதினாயோ பாரதத்தை!
வளர்பிறை சதுர்த்தியில்
வந்து உதித்தவனே!
உந்தன் பிறந்தநாளில்
உவகை மிகக்கொண்டு
உன்னைக் கொண்டாடி
ஊர்வலமாய் எடுத்து வந்து
கடலில் கரைத்திடுவோம்!
கரைப்பதற்கு முன்னாலே
மோதகம் தன்னுடனே
முற்றிய பல கனிகள்
உனக்குப் படைத்திடுவோம்!
உன்பாதம் தொழுதிடுவோம்!
மண்ணும் நீருந்தான்
மனிதனுக்கு எல்லாமே
என்ற தத்துவத்தை
எல்லோர்க்கும் உணர்த்திடவோ
மண்ணிலிருந்து நீருக்கு
மகிழ்வான உன் பயணம்!
ஞானம் மிகுந்தோனே
நல்லுலகைக் காப்போனே!
ஞாலம் அமைதியுற
நற்கதியை நீயருளி
மக்கள் மனங்களிலே
மகிழ்வைப் பொழிவிப்பாய்!
கணேசன் விக்னேஷ்வரன்
கணபதி கஜானனன்
ஏகதந்தன் வக்ரதுண்டன்
லம்போதரன் ஹேரம்பன்
பிள்ளையார் என்றும்…
ஏகமாய்ப் பேருனக்கு
எல்லாமும் சிறப்புனக்கு!
ஒளவையார் நக்கீரர்
அகவல் பலவுண்டு!
அன்பான திருவாசகம்
ஆழமாய் உன் புகழ்பாடும்!
கூடுதலாய் உன் துதியும்
குவலயத்தில் ஒலித்திடுமே!
‘அல்லல்போம் வல்வினைபோம்
அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத்துயரம் போம்
குணமதிகமா மருணை கோபுரத்தின் மேலிருக்கும் செல்வக் கணபதியைக் கை தொழுதக் கால்!’