ஓம்
ஓம்

‘ஓம்’ எனும் பிரணவச் சொல்லின் பெருமை அறிவோம்!

Published on

‘ஓம்’ என்ற மந்திரச் சொல்லின் பெருமையை உபநிஷதங்கள் வெகுவாகப் புகழ்கின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள்தான் என்று கூடச் சொல்லப்படுகிறது.

இந்து மதத்திலுள்ள அநேக புனித மந்திரங்கள் அல்லது புனித வார்த்தைகளிலே, ‘ஓம்’ என்ற வார்த்தைதான் மிகப் பழைமையானதும் சந்தேகமில்லாமல் மிக முக்கியமானதும் ஆகும். இறைவனைக் குறிக்கும் இந்தப் புனித ஓரசைச் சொல் வேதங்களிலும், இதர புனித நூல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மந்திரச் சொல்லாகும். இதைத்தான், ‘பிரணவம்’ என்று  சொல்லப்படுகிறது. பிரணவம் என்றால் சுவாசம் என்று பொருள். மனிதன் உயிர் வாழ சுவாசம் அவசியம். இந்த பிரபஞ்சம் உயிர் வாழ, ‘ஓம்’ எனும் மந்திரம் அவசியம்.  அதனால்தான் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் என்கிறோம்.

‘ஓம்’ என்ற சொல் ஆண்பாலும் இல்லை, பெண்பாலும் இல்லை, மூன்றாம் பாலினமும் இல்லை. ஒருமை ஒலியே. இதற்கு ஒருமையோ, பன்மையோ கிடையாது. வேற்றுமை உருபுகளும், அதாவது முதலாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையுள்ள உருபுகளும் இதற்குக் கிடையாது. இலக்கண வரம்புகளுக்கெல்லாம் இது அப்பாற்பட்டது.

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களின் பொருளாக விளங்குகிறது ‘ஓம்’ எனும் பிரணவச் சொல். ஓம் என்பது இறைவனின் ஒலி அலைகளின் அடையாளமாகும். மனிதனின் வாயால் உச்சரிக்கப்படும் அனைத்து வார்த்தைகளும், ‘ஓம்’ என்ற ஒலியின் வெளிப்பாடாகும். மனிதனின் உச்சரிப்பு, தொண்டையிலிருந்து தொடங்கி உதடுகளில் முடிவடைகின்றது. 'அ' என்ற சொல் தொண்டையில் உருவாகின்றது. 'உ' மற்றும் 'ம்' என்ற சொற்கள் உதட்டில் உருவாகின்றன.

இதையும் படியுங்கள்:
காலையில் வெறும் வயிற்றில் துளசி நீர் பருகுவதால் உண்டாகும் பயன்கள் தெரியுமா?
ஓம்

எனவேதான் (AUM) ‘ஓம்’ என்பது, உதடுகள் உச்சரிக்கும் அனைத்து சொற்களின் அடையாளச் சின்னமாகும். எனவேதான், இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே இந்த 'ஓம்' என்ற வார்த்தைக்குள் அடக்கமாகும். இறைவன் பிரபஞ்சம் முழுமைக்குள் அடங்கியிருப்பதால், இறைவனையே அடையாளம் காட்டுகின்ற சொல் ‘ஓம்’ என்பது இறைவனை அடையாளப்படுத்தும் புனிதச் சொல்லாகவே கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com