திருப்பதி பெருமாளுக்கு மண் சட்டியில் ஏன் நிவேதனம் செய்யப்படுகிறது?

Tirupati Perumal
Tirupati Perumal
Published on

பெருமாள் கோயில்களில் புகழ் பெற்றது திருப்பதி வேங்கடாஜலபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்து வந்தார். இவர் மிகச் சிறந்த பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலிலேயே மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக அவருக்கு நேரம் இருக்காது. அப்படியே போனாலும் பெருமாளை எப்படி வழிபடுவது என்று அவருக்குத் தெரியாது. ‘பெருமாளே நீயே எல்லாம்’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

ஒரு சமயம் அவருக்கு மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்குப் போக அவருக்கு நேரமில்லை. ‘பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?’ என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். பூ வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாக செய்து அதை கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப் பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிவித்து விட்டு மறு வாரம் ஆலயத்துக்கு வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. பட்டர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார். அன்று அவரது கனவில் தோன்றிய பெருமாள் குயவர் பீமன் பக்தியைப் பற்றிச் சொன்னார்.

இதையும் படியுங்கள்:
அனீமியாவை போக்கும் 5 அற்புத உணவுகள்!
Tirupati Perumal

அதைத் தொடர்ந்து, மறுநாள் அந்தக் குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர் அவருக்கு வேண்டிய அளவு பொருள் உதவி செய்தார். அப்பொருளைக் கண்டு மயங்காமல் பெருமாள் பணியை தொடர்ந்து செய்து வந்த குயவர், தனது இறுதிக் காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.

பெருமாளின் ஆணைப்படி அந்த பக்தரை கௌரவிக்கும் வகையில் இப்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாத திருவோணம் திருப்பதி மலையைப்பசாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் அதேநேரம் புரட்டாசி சனிக்கிழமை அவதரித்த நாள். அதன் காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை  வணங்குவது மரபாகிவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com