பயணம் என்பது வாழ்வுதோறும் நடக்கும் ஒரு நிகழ்வு. உறவினர் வீட்டுக்கு, நண்பர்கள் வீட்டுக்கு, அக்கம், பக்கம் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, ஆன்மீகப் பயணம், தொலைதூரப் பயணம் ரயில் பயணம், பேருந்து பயணம், விமான பயணம் என்று இடத்திற்கு தகுந்தாற்போல், நேரத்திற்கு தகுந்தாற்போல், விருப்பத்திற்கு தகுந்தாற்போல பொருளாதாரத்திற்கு தகுந்தாற்போல் நாம் பயணம் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறோம். அப்படி பயணம் செய்யும் பொழுது அதிக எடையை குறைக்க பயணத்தை இலகுவாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
இடத்திற்கு தகுந்தாற்போல் சூட்கேஸ், பெட்டி, பேக் வகைகள், துணிமணிகள் சோப்பு, சீப்பு, கண்ணாடி, பேஸ்ட் ,பிரஸ் இவற்றை முன் கூட்டியே திட்டமிட்டு தீர்மானித்து எடுத்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
பயண காலத்தில் எப்போதும் புதிதாக தயாரித்த சூடான உணவுகளையே சாப்பிட வேண்டும். இது நம் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும். மேலும் உடல் உபாதைகள் வராமல் தடுக்கும். நம் உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளும் உணவு ஸ்னாக்ஸ் வகைகளை வீட்டிலிருந்து தயாரித்து எடுத்து செல்வது நோய் பிரச்சனைகளை வர விடாமல் தடுக்கும். இதனால் செல்லும் இடங்களில் உள்ள முக்கியமான இடங்களை நன்றாக சுற்றிப் பார்க்கலாம்.
கோடை காலத்தில் பயணம் செய்யும்போது குழந்தைகள் மற்றும் முதியவர்களை கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். மருந்துகள், பால் பவுடர், உணவுப்பொருட்கள், குளுக்கோஸ் ,எலக்ட்ரால் ஆகியவற்றை போதுமான அளவு கொண்டு செல்ல வேண்டும். நீர் தட்டுப்பாடு வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். மலைப்பிரதேசம் போன்றவற்றிற்கு செல்லும்போது இடத்திற்கு ஏற்ற உடைகள், தொப்பி , மாய்ச்சரைசர் சால்வை, காலணிகள், எடுத்துச் செல்வது மிக மிக அவசியம்.
சின்னச் சின்ன பொய்கை, ஏரி போன்ற இடங்களுக்கு சென்றால் ஒரு பேப்பரில் உப்பை மடித்து செல்வது அவசியம். அங்கு அட்டைகள் பூச்சிகள் போன்றவை அதிகமாக இருக்கும். அவை கால்களில் ஒட்டிக்கொண்டு ரணப்படுத்தும் அப்பொழுது அவைகளின் மீது தூவி விட்டால் நம் கால்கள் பத்திரமாக இருக்கும்.
வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகள், குடை, சன் கிளாஸ், சன் ஸ்கிரீன் உதடு வெடிப்பிற்கு தேவையான லிப் பாம் போன்றவற்றை கைவசம் வைத்திருப்பது நல்லது.
கை நிறைய சில்லறை கொண்டு செல்வது அவசியம். கோவில்களுக்கு செல்லும் பொழுது இது மிகவும் தேவைப்படும். பஸ், ஆட்டோ போன்றவற்றில் ஏறி இறங்கும் பொழுது சில்லறையைத் தேடி அலைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. ரயில் சுத்தம் செய்பவர்களில் இருந்து பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பது வரை கைவசம் சில்லறை வைத்திருப்பது ஆபத்துக்கு உதவும்.
எங்கெங்கு செல்கிறோம் என்பதை நன்றாக தீர்மானித்து, செல்லும் இடங்களில் உள்ள முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில்கள் மற்றும் இயற்கை வாழிடங்களை தேர்ந்தெடுத்து தெளிவாக வைத்திருந்தால் குழப்பம் இல்லாமல் சுற்றிப் பார்க்கலாம்.
பெரிய பெரிய பெட்டிகளை தவிர்த்து தூக்குவதற்கு வசதியாக ஆளுக்கு ஒன்றாக வைத்துக் கொண்டால் எடுத்துச் செல்வது எளிது. அவைகளில் அடையாளம் தெரியும்படி ரிப்பன் போன்றவற்றை கட்டி வைத்தால் குழப்பம் இல்லாமல் எடுத்துச் செல்லலாம்.
செல்போன், சார்ஜர், பான் கார்டு, பாஸ்போர்ட், விசா, மாஸ்க் போன்றவைகளை பத்திரமாக மறக்காமல் எடுத்துச் செல்வது அவசியம்.
இவைகளை லிஸ்ட் போட்டு வைத்து இருந்தால் பயணத்தின்போது நினைவிற்கு வருவது எளிதாக இருக்கும். இதை மறந்து விட்டேன் அதை மறந்து விட்டேன் என்று குழப்பம் ஏற்பட்டு தவிக்காமல் எதையும் தவிர்க்காமல் எடுத்துச் செல்லலாம்.