பாண்டிச்சேரி போறீங்களா? அருமையான இந்த 15 இடங்கள்... மிஸ் பண்ணிடாதீங்க!

பாண்டிச்சேரி போறீங்களா? அருமையான இந்த 15 இடங்கள்... மிஸ் பண்ணிடாதீங்க!

பாண்டிச்சேரிக்கு சுற்றுலா செல்லும்போது காண்பதற்கு அருமையான 15 இடங்களைப் பார்ப்போம்.

1. பாரடைஸ் கடற்கரை:

கடலூர் செல்லும் பாதையில் சுண்ணாம்பார் என்ற இடத்திற்கு சென்று, அங்கிருந்து படகில் ஏறி, பாரடைஸ் கடற்கரைக்கு செல்ல வேண்டும். சுத்தமான அருமையான கடற்கரை. இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

2. அரவிந்தர் ஆசிரமம்:

விடுதலைப் போராட்ட தியாகி அரவிந்தோ கோஷ் பாண்டிச்சேரியில் குடிபுகுந்தார். இங்கு ஆன்மிக வாழ்வில் தன்னை ஐக்கியமாக்கிக்கொண்டார். அரவிந்தர் மற்றும் அவரது சிஷ்யையான பாண்டிச்சேரி அன்னை ஆகியோரின் சமாதி ஆசிரமத்தில் உள்ளது. இங்கு யோகா, தியானம் போன்றவை கற்பிக்கப்படுகின்றன.

3. மணக்குள விநாயகர் கோயில்:

இது அரவிந்தர் ஆசிரமத்திற்கு வெகு அருகே உள்ளது. இது பிரெஞ்சுக்காரர்கள் வருவதற்கு முன்பே, 15 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் இருந்தததாக அறியப் படுகிறது. இங்குள்ள பாவனேசுவரர் கணபதி பிரபலமானவர்.

4. ஆரோவில்:

பாண்டிச்சேரி அன்னையின் கனவான ஆரோவில்,
உலக மக்களை, நாடு, சாதி, மதம் கடந்து ஒருங்கிணைக்கும் ஒரு திட்டம். ஆரோவில் என்றால் விடியல் நகரம் என்று அர்த்தம். இங்குள்ள மாத்ரி மந்திர் என்ற  உருண்டை போன்ற கோயில் பிரபலமானது. அதனுள் தியானக் கூடம் உள்ளது.

5. பாரதியார் இல்லம்:

பாரதியார் பாண்டிச்சேரியில் வாழ்ந்தபோது, அவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. பாரதி என்ற மாபெரும் கவிஞரின் எளிமையான வாழ்விடம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

6. பாரதிதாசன் இல்லம்:

பாண்டிச்சேரியில் பிறந்து, பாரதியாரின் சிஷ்யராக வாழ்ந்த பாரதிதாசனின் இல்லமும் அருங்காட்சியகமாக உள்ளது. இங்கு வாழ்ந்தபோதுதான் பாரதிதாசன் பல்வேறு மாபெரும் படைப்புகளைப் படைத்தார்.

7. அரிக்கமேடு:

பண்டைய காலத்தில், இது ஒரு பெரும் வணிகமையமாக விளங்கியது. இங்கு ரோமானியர்கள், பிரஞ்சுக்காரர்கள், சோழர்கள் வசித்தனர். கி. மு. 300 முதல் கி.பி. 1800 வரையிலான பல்வேறு சுவடுகளை இங்கு காண முடிகிறது. இங்கு நடத்தபட்ட அகழ்வாராய்ச்சிகள் பல்வேறு அருமையான காட்சிப்பொருட்களை கொடுத்துள்ளன. அவற்றை பாண்டிச்சேரி அருங்காட்சியகத்தில் காணமுடியும். வரலாற்று ஆர்வலர்கள் கண்டிப்பாக காணவேண்டிய இடம்.

8. கடற்கரை சாலை:

இங்குள்ள கடற்கரை பாறைக் கடற்கரை (Rock beach) அல்லது ப்ரோமினேட் கடற்கரை என்ற அழைக்கப் படுகிறது. இந்தக் கடற்கரையை ஒட்டி, கடற்கரை சாலை(seaside promenade) உள்ளது. இங்கு காற்று வாங்கி காலாற நடக்கலாம். காந்தி சிலை, டூப்ளே சிலைகள் அருகருகே உள்ளன.

9. பாரதி பூங்கா:

மரங்கள் சூழ்ந்த பெரியதொரு பூங்கா. கடற்கரை சாலையில், காந்தி சிலைக்கு எதிரே உள்ளது. இதன் நடுவே ஆயி மண்டபம் என்கிற கிரேக்க - ரோமானிய கட்டடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட கலைநயமிக்க மண்டபம் உள்ளது. குழந்தைகள் விளையாட பெரிய விளையாட்டு பகுதியும் உள்ளது.

10. வேதபுரிஸ்வரர் கோயில்:

பழமையான பிரம்மாண்டமான சிவன் கோயில். இது 1748 ஆம் ஆண்டு, பிரெஞ்சுக்காரர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, மறுபடி 1788 ஆம் ஆண்டு பக்தர்களால் புனரமைக்கப்பட்டது. இங்கு சிவன் சுயம்புவடிவில் அருள்பாலிக்கிறார்.

11. வரதராஜ பெருமாள் கோயில்:

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்துப் பெருமாள் கோயில். பின்னர், பாண்டியர்களாலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள், இஸ்லாமிய படையெடுப்பின்போது, இந்தக் கோயில் தப்பியது. சோழர்களின் கட்டடக் கலைக்கு உதாரணமாக உள்ளது.

12. காரணீஸ்வர நடராஜர் பிரமிட் கோயில்:

பிரமிட் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயில். இது 2000 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுனாமியில் பாதிக்கப்பட்டது. பின்னர், மறுபடியும் விரிவாக கட்டப்பட்டது.

13. ஆனந்தரங்கம் பிள்ளை மாளிகை:

பிரெஞ்சு கவர்னர் டூப்ளேவின் துபாஷாக விளங்கிய ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் வீடு. 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் படையெடுப்பின் போது, இது தாக்கப்படவில்லை. அந்த காலத்திய தமிழர் வீட்டினை கண்முன்னே நிறுத்தும் அருமையான மாளிகை. ஆனந்தரங்கம் பிள்ளை தமிழின் டைரிக்குறிப்புகளின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

14. வெள்ளையர்கள் நகரம்:

பிரெஞ்சுக்காரர்கள் வாழ்ந்த பகுதி. இங்குதான் அரவிந்தர் ஆசிரமம், பாண்டிச்சேரி அருங்காட்சியம் போன்றவை அமைந்துள்ளன. அழகாக திட்டமிடப்பட்ட தெருக்கள், வீடுகள் அமைந்த அருமையான, அமைதியான பகுதி.

15. இம்மாகுலேட் கன்சப்ஷன் தேவாலயம்:

300 ஆண்டுகள் பழமையான போர்த்துக்கீசிய பாணியில் கட்டப்பட்ட தேவாலயம். இது ஆங்கிலேயரின் படையெடுப்பில் தப்பியது. இது சம்பா கோயில் என்றும் என்றழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com