அலையாத்தி மத்தியில் அழகாய் ஒரு படகு பயணம் செய்யலாம் வாங்க!
உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளது. 2-வது பெரிய சதுப்பு நிலக்காடு பிச்சாவரமாகும். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. பிச்சாவரத்தின் கடற்கரை 6 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும். மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுண்ணை காடுகளும் பிச்சாவரத்திற்கு எல்லைகளாக உள்ளது.
பிச்சாவரம் வனப் பகுதி தற்போது ஈர நிலங்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பது அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் ஈரப்பதத்தைக் காணமுடியும்.
சுரபுன்னை மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் அதனை விரிவுபடுத்தும் பணியில் வனத்துறையினர்' தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சுரபுன்னை மரத்தில் வளரும் காய்கள் சேற்றில் தவழ்ந்து, சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மரமாக வளர்ந்துவிடும். இந்த மரங்களுக்கு இடையில் ஏராளமான பறவை இனங்கள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஜனவரி வரை பல்வேறு நாடுகளில் இருந்து இனப் பெருக்கத்திற்காக கடல் காகம், ஆலா, சின்ன உள்ளான். காஸ்பியன் ஆலா, மண்கொத்தி, ஊசி வால் வாத்து, புள்ளி மூக்கு வாத்து என ஏராளமான பறவைகளுக்கு புகலிடமாக இருந்து வருகிறது.

மேலும் உள்நாட்டு பறவைகளான மீன்கொத்தி, செம்மூக்கு, ஆள்காட்டி, கொக்குகள், நாரைகள், அரிவாள் மூக்கன், செம்பருந்து, மயில், மணிப்புறா, சிட்டு வகைகள், கிளிகள், கரிச்சான் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் இங்கு வசித்து வருகிறது.பிச்சாவரம் ஏரியில் உப்பனாற்றின் கடற்கரையையொட்டி 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரியாக இருப்பது பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே "நாரையும் அறியா நாலாயிரம் வாய்க்கால்" எனும் வழக்கு மொழி இருந்துள்ளது என பிச்சாவரத்தில் கூறுகிறார்கள். உலக அளவில் தொழுநோயை சரிசெய்யக் கூடிய மருத்துவ குணம் கொண்டது என கூறப்படும் மாங்கு ரோவ்ஸ் தாவரங்களும் இந்த சதுப்பு நிலக்காட்டில் நிறைந்துள்ளது.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோவில் தல விருட்சமாக கருதப்படும் தில்லை மரம் உட்பட 18 வகையான மூலிகை தாவரங்கள் இந்த காட்டில் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அலையாத்தி சதுப்பு நிலக்காடுகளில் படகுகள் மூலம் சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்து ரசித்து வருகிறார்கள்.

இந்த பயணம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஓர் திரில்லிங்கான அனுபவமாக இருக்கும். பெருமை வாய்ந்த பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களுக்கான ராம்சர் பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளது இதற்கான மற்றொரு சிறப்பம்சமாகும்.
பிச்சாவரம் நீங்கள் வருவதற்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வந்தால் நகரப் பேருந்து வசதி மற்றும் வாடகை வாகனம் வசதிகள் உள்ளது.