

சென்னையில் வெயில் காலம் தொடங்கிவிட்டாலே எப்படா லீவ் விடுவார்கள், எங்கு தப்பித்து செல்லலாம் என்ற எண்ணம் தான் எல்லோர் மனதிலும் ஓடும். பல மாதங்களாக தொடர்ந்து வேலை செய்து கலைத்த உடலுக்கும் மனதுக்கும் ஒரு நல்ல ரெஸ்ட் தேவைப்படும் நேரம் இது. குறிப்பாக மே மாத விடுமுறையை ஸ்பெஷலாக கொண்டாட பலரும் பிளான் செய்வார்கள்.
உள்ளூரில் சுற்றியது போதும், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக குடும்பத்தோடு வெளிநாட்டுப் பயணம் செல்லலாம் என நினைப்பவர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி காத்திருக்கிறது. அதுவும் பாக்கெட்டை பதம் பார்க்காத பட்ஜெட்டில், விசா வாங்கும் பெரிய தலைவலியும் இல்லாமல் சென்னையிலிருந்து மிக எளிதாகப் பறக்கக்கூடிய மூன்று அட்டகாசமான நாடுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
பக்கத்து நாடான இலங்கை!
நமது அண்டை நாடான இலங்கை எப்போதுமே சுற்றுலாப் பயணிகளின் ஒரு ஃபேவரைட் ஸ்பாட். சென்னையிலிருந்து மிகக் குறைந்த நேரத்தில் அங்கே சென்றுவிட முடியும். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பழமையான இடங்கள், கண்ணைப் பறிக்கும் பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே ஒரு ஜாலியான ரயில் பயணம் மற்றும் மனதை அமைதியாக்கும் அழகான கடற்கரைகள் என எல்லாமே அங்கு கொட்டிக்கிடக்கின்றன.
இந்தியர்களுக்கு அங்கு செல்ல விசா தேவையில்லை என்பது ஒரு மாபெரும் பிளஸ் பாயிண்ட். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாகச் சென்று வர தோராயமாக 19,300 ரூபாய் மட்டுமே விமானக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கலாச்சாரம் நிறைந்த மலேசியா!
பல்வேறு விதமான கலாச்சாரங்கள் ஒன்றாகக் கலந்த ஒரு அற்புதமான நாடு மலேசியா. பாரம்பரியம் மிக்க மலாக்கா நகரத்தின் வரலாற்றுச் சின்னங்களை ரசிப்பது ஒரு தனி சுகம் என்றால், சபா பகுதியின் அடர்ந்த காடுகளுக்குள் பயணம் செய்வது ஒரு பிரம்மாண்டமான சாகச உணர்வைக் கொடுக்கும். இயற்கை அழகும் நவீன நகரமும் கலந்த ஒரு கலவை இது.
இங்கும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு எந்த ஒரு விசா கெடுபிடியும் கிடையாது. ஏர் ஏசியா விமானத்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்று திரும்ப சுமார் 21,600 ரூபாய் செலவாகும். உங்களின் பட்ஜெட்டிற்குள் ஒரு செம ட்ரிப் அடிக்க இது ஒரு அருமையான சாய்ஸ்.
எவர்கிரீன் தாய்லாந்து!
வெளிநாடு செல்ல வேண்டும் என நினைக்கும் இளைஞர்களின் முதல் சாய்ஸ் எப்போதுமே தாய்லாந்து தான். இங்கு செல்வதற்கு இந்தியர்களுக்கு எந்த விசாவும் தேவையில்லை என்பதால் எப்போது வேண்டுமானாலும் பேக் செய்து கொண்டு கிளம்பலாம். பேங்காக் நகருக்குச் சென்று வர ஏர் ஏசியா விமானத்தில் சுமார் 22,500 ரூபாய் டிக்கெட் கட்டணமாக ஆகிறது.
அருமையான உணவுகள், விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஷாப்பிங் செய்ய ஏராளமான இடங்கள் என உங்களின் மே மாத விடுமுறையை கலர்ஃபுல்லாக மாற்ற தாய்லாந்து நிச்சயம் ஒரு மாஸ் காட்டும் இடமாக அமையும்.
ஒரு காலத்தில் வெளிநாட்டுப் பயணம் என்பது லட்சக்கணக்கில் செலவாகும் ஒரு பகல் கனவாகவே இருந்தது. நிறைய காகித வேலைகள் இருக்கும் என்ற பயமும் எல்லோருக்குமே இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ட்ரெண்ட் முற்றிலுமாக மாறிவிட்டது. சென்னையில் இருந்து வெறும் இருபதாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் விசா கவலையே இல்லாமல் இவ்வளவு அழகான நாடுகளைச் சுற்றிப் பார்க்க முடிவது உண்மையிலேயே ஒரு மாபெரும் ஜாக்பாட் தான்.