
பள்ளி முடிந்து விடுமுறையில் குழந்தைகளோடு பயணம் செய்ய விரும்பினாலும் இப்போதுள்ள விலைவாசி பயமளிக்கும். இதை போக்கி ஃப்ரெண்ட்லி பட்ஜெட் பிக்னிக் ஸ்பாட் குழந்தைகளோடு என்ஜாய் பண்ண பிச்சாவரம் சிறந்த இடம்.
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதை மாங்குரோவ் காடுகள், அலையாத்தி காடுகள் என பலவாறு அழைக்கின்றனர். இங்கு தில்லை மரங்கள் அதிகமாக இருக்கும். இந்த தில்லை மரமே சிதம்பரம் கோவிலின் தல மரமாகும். இதனாலேயே சிதம்பரத்துக்கு தில்லை எனப்பெயர் வந்தது.
பிச்சாவரம் காட்டுப் பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர். சிறு சிறு தீவுகளாக காணப்படுகிறது. இந்த காட்டில் புன்னை மரங்கள் அடர்ந்து காணப்படும். இதன் காய்கள் நீண்டு இருக்கும். இந்தக் காய்களே சேற்றில் விழுந்து செடியாகி சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். இங்கு மீன்கள், இறால்கள் அதிகளவில் கிடைக்கின்றன.
மரங்கள் மூடி இருப்பதால் காலை பொழுதே மாலை போல் இருக்கும். இதைத் தவிர இப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் வலசை வருகின்றன. செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களை சேர்ந்த 177 வகை பறவைகள் வலசை வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டத்தில் கிள்ளை என்னும் ஊரில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 12 கிமீ தூரத்தில் உள்ள பிச்சாவரத்திற்கு பஸ் வசதி உள்ளது. சிதம்பரத்தில் நல்ல தங்கும் விடுதிகளும், உணவகங்களும் உள்ளன. ஒருநாள் பயணமாக பிச்சாவரம் வனப்பகுதியை சுற்றி பார்க்கலாம். பக்கத்திலேயே சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் முக்கிய இடங்களை பார்த்து வரலாம். குழந்தைகளை மகிழ்விக்கும் பிச்சாவரம் சென்று வந்து இயற்கையை ரசித்து வாருங்கள்.