

கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் (Chikmagalur) மாவட்டத்தில், கலசா (Kalasa) அருகே பத்ரா ஆற்றின் (Bhadra River) குறுக்கே அமைந்துள்ள ஒரு பிரபலமான நடைபாதை தொங்குபாலம் வசிஷ்ட தீர்த்தா (Vashishtha Theertha hanging bridge) தொங்கு பாலமாகும். மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமையான பின்னணியில் அமைந்துள்ள இப்பாலம் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். சினிமா படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறும் இந்த இடம் அதன் அமைதியான சூழலுக்கும், இயற்கை அழகுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது.
பத்ரா நதியின் அமைதியான ஓட்டத்தையும், சுற்றிலும் உள்ள காபி தோட்டங்களையும் இந்த பாலத்தில் நின்று கொண்டு நீண்ட நேரம் ரசிக்கலாம். காலை 6:00 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையாளர்கள் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இயற்கை எழில் கொஞ்சும் கலசா சுற்றுலா தலங்களின் பின்னணி:
அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ஆற்றின் மேலே கம்பீரமாகத் தொங்கும் இந்த பாலம் அப்பகுதி மக்களின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியைக் கொண்டிருப்பதால் தமிழ் மற்றும் பிறமொழி சினிமா ஷுட்டிங்குகள் இங்கு அடிக்கடி நடைபெறுகின்றன. மாலையில் இங்கு வரும் பொழுது நதியின் அழகையும், மயக்கும் சூரிய அஸ்தமனத்தையும் பாலத்தின் மீது நடந்துகொண்டே ரசிக்கலாம்.
கலசா சுற்றுலா வரும் பயணிகள் தவறவிடக் கூடாத ஆன்மீகத் தலங்கள்:
இப்பகுதியில் கட்டாயம் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் நிறைய உள்ளன. இங்குள்ள பஞ்ச தீர்த்தங்களில் ஒன்றான வசிஷ்ட தீர்த்தா, கலசேஸ்வரர் கோவில் மற்றும் ஹொரநாடு அன்னபூரணி கோவில் ஆகியவை அருகில் அமைந்துள்ளன.
கலசேஸ்வரர் கோவில்:
இந்து புராணங்களின்படி, சிவன் பார்வதி திருமணத்தின்போது பூமியின் சமநிலையை நிலைநிறுத்த அகத்திய முனிவர் தென்திசைக்கு வந்தபோது உருவாக்கியதாக நம்பப்படும் புகழ்பெற்ற சிவன் கோவில் இது. கருவறையும், லிங்கங்களும் கலச வடிவில் இருப்பதால் இக்கோவில் கலசேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஈசன் கலசேஸ்வரர் என்றும், அம்பாள் சர்வாங்க சுந்தரி என்றும் திருப்பெயர் கொண்டு காட்சி தருகின்றனர். விஜயநகர மற்றும் ஹொய்சால கலைப்பாணியில் அமைந்துள்ள இக்கோவிலின் நுழைவாயிலில் ஆண், பெண் விநாயகர் சிலைகள் உள்ளன.
ஹொரநாடு அன்னபூரணி கோவில் (Horanaadu Annapoorneshwari Temple):
இக்கோயில் புகழ்பெற்ற அன்னபூரணி தேவிக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இது வசிஷ்ட தீர்த்தாவிற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு அன்னபூர்ணேஸ்வரி தேவி ஒரு பீடத்தில் நின்ற கோலத்தில் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், ஸ்ரீ சக்கரம் மற்றும் தேவி காயத்ரி ஆகியவற்றை ஏந்தி காணப்படுகிறாள். அன்னபூர்ணேஸ்வரியின் இந்த மூலவர் சிலை தங்கத்தால் ஆனது. இவரை வணங்க, வாழ்வில் ஒருபோதும் உணவு பற்றாக்குறை ஏற்படாது என்று கூறப்படுகிறது.
அம்பா தீர்த்தம்:
பத்ரா நதியில் அமைந்துள்ள புனிதமான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் தீர்த்தம் இது. அம்பா தீர்த்தம் அதன் ஆர்ப்பரிக்கும் நீர், மென்மையான ஓடைகள், கருங்கற்பாறைகளில் உள்ள அருவ வடிவங்கள், செழித்து வளரும் காட்டுப்பூக்கள், விதவிதமான வண்ணத்துப்பூச்சி வகைகள் ஆகியவற்றிற்காக புகழ்பெற்றது.
சூர்மனே நீர்வீழ்ச்சி (Soormane Falls):
கலசாவிற்கு அருகில் பசுமையான காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள அழகிய நீர்வீழ்ச்சி, குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ இது ஒரு சிறந்த இடமாகும். இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமான இது 'அபிகுடிகே' (Abigudige) என்றும் அழைக்கப்படுகிறது.
சாகச விரும்பிகளை ஈர்க்கும் கலசா சுற்றுலா மற்றும் ட்ரெக்கிங் இடங்கள்:
குத்ரேமுக் (Kudremukh):
இயற்கை ஆர்வலர்களுக்கும் மலையேற்ற வீரர்களுக்கும் ஏற்ற, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அற்புதமான இடம். ட்ரெக்கிங் மற்றும் சாகசப் பயணங்களை விரும்புவர்களுக்கான சொர்க்கம் இது. இங்குள்ள பசுமையான புல்வெளிகளும், மூடு பனியும் நம்மை வியக்க வைக்கும்.
செல்வதற்கு ஏற்ற காலம்:
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் இந்தப் பகுதிக்கு செல்ல ஏற்ற காலமாகும்.
எப்படி செல்வது?
அருகில் உள்ள விமான நிலையம் மங்களூர், ரயில் நிலையம் ஷிமோகா (Shimoga). கலசா நகரத்திலிருந்து சுமார் 4 முதல் 8 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து 323 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசாவிற்கு சாலை மார்க்கமாக செல்லலாம்.
இந்த வழிகாட்டியின் மூலம், உங்கள் அடுத்த சிக்மகளூர் பயணத்தை வெறும் சாதாரணப் பயணமாக இல்லாமல், அமைதியான நதிக்கரை உலா, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தரிசனம் மற்றும் சிலிர்ப்பூட்டும் மலைப் பிரதேசம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான புத்துணர்ச்சி தரும் அனுபவமாக நீங்கள் திட்டமிட முடியும்.