

இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் துவாந்தர் நீர்வீழ்ச்சி (Dhuandhar Falls) மத்திய பிரதேசத்தின் பேடாகாட்டில் (Bhedaghat) அமைந்துள்ளது. துவாந்தர் என்ற சொல் இரண்டு இந்தி சொற்களில் இருந்து பெறப்பட்டது. துவான் (புகை), தார் (ஓட்டம்). நர்மதை ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி துவான் (புகை) மற்றும் தார் (நீர்) என்ற வடமொழிப் பெயர்களுக்கேற்ப, 30 மீட்டர் (98 அடி) உயரத்திலிருந்து விழும் நீர் மூடுபனி போலவும், புகையாகவும் காட்சியளிக்கும்.
நர்மதை நதி இப்பகுதியில் உலகப் புகழ்பெற்ற வெள்ளைப் பளிங்குப் பாறைகளுக்கு நடுவே குறுகலான பாதையில் பாய்ந்து அருவியாக கொட்டுகிறது. இந்தப் பாறைகளின் மீது படும் சூரிய ஒளி கண்கொள்ளாக் காட்சியாக அனைவரையும் கவர்கிறது. அருவியின் ஓசையினை தொலைதூரத்திலிருந்தே கேட்கக்கூடிய அளவுக்கு சக்திவாய்ந்ததாக உள்ளது.
இந்தியாவின் மூடுபனி நீர்வீழ்ச்சி:
நர்மதா நதியின் நீர் பெரும் விசை மற்றும் வேகத்துடன் 30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுவதால், அங்கு பனிமூட்டம் போன்ற நீர் துகள்கள் எழும்பி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. அதனால் இது "இந்தியாவின் மூடுபனி நீர்வீழ்ச்சி" (Fall of Mist) என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் அருவியின் அழகை ரசிக்க படகு சவாரி மற்றும் கேபிள் கார் வசதிகள் உள்ளன.
நீர்வீழ்ச்சியின் முழு அழகையும், நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள நிலப்பரப்பையும் பறவைப் பார்வையில் ரசிக்க கேபிள் கார் வசதியும், அருவியின் மிக அருகில் சென்று பார்க்க படகு சவாரியும் உள்ளது. மாலை நேரங்களில் நீர்வீழ்ச்சிக்கு செய்யப்படும் மின்விளக்கு அலங்காரம் அதன் அழகை மேலும் கூட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சி பசுமையான தாவரங்களால் சூழப்பட்டு ஒரு முக்கிய பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
துவாந்தர் நீர்வீழ்ச்சி ஆற்றுப் படகுப்பயணம், கயாக்கிங் மற்றும் படகோட்டம் போன்ற சாகச விளையாட்டு களுக்கும் பிரபலமான இடமாகும். நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள பளிங்குப் பாறைகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை செயல்பாட்டின் காரணமாக உருவானதாக சொல்லப்படுகிறது. நீர்வீழ்ச்சியைச் சுற்றி நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு பூங்காவும் உள்ளது. இதில் உணவுக் கடைகள், நினைவுப் பரிசு கடைகள் ஆகியவை உள்ளன.
உள்ளூர் கைவினைஞர்களால் செதுக்கப்படும் பளிங்கு சிலைகள், பளிங்கு மற்றும் பல்வேறு இயற்கை கற்களால் செய்யப்பட்ட அழகிய வளையல்கள், காதணிகள் போன்ற ஜுவல்லரிகளும் இங்கு கிடைக்கின்றன. இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நர்மதா நதி, இந்து மதத்தில் ஒரு புனித நதியாகக் கருதப்படுவதால் ஏராளமான பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடவும், பிரார்த்தனை செய்யவும் இங்கு வருகிறார்கள்.
சௌசத் யோகினி ஆலயம்:
துவாந்தர் நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, ஒரு புனிதத் தலமும் ஆகும். இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் 3 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சௌசத் யோகினி கோவில் என்ற புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் உள்ளது. பெடகாட்டின் சமநிலைப் பாறைகளும் இங்கு காணத்தக்கவை. அதனையும் கண்டு வரலாம்.
செல்ல சிறந்த நேரம்:
அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் இங்கு செல்வதற்கு சிறந்த காலமாகும். மழைக்காலத்தில் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் படகு சவாரி நிறுத்தப்படும்.
எப்படிச் செல்வது?
அருகில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஜபல்பூர். ஜபல்பூரிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இதனை சாலை வழியாக பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் எளிதில் அடையலாம்.