ஆழ்கடல் அருவியை பார்த்ததுண்டா? அப்போ நீங்க இங்க கண்டிப்பா போகணும்!
உலகில் எத்தனையோ எண்ணிலடங்கா அருவிகள் உள்ளது. உயரமான அருவி முதல் வருடம் முழுக்க வற்றாத அருவி என பல வித்தியாசமான அருவிகளை பார்த்திருப்போம். அதன் அழகையும் ரசித்திருப்போம், அதில் குளித்திருப்போம். ஆனால் கடலுக்கு அடியில் இருக்கும் அருவியை பார்த்திருக்கிறீர்களா?
ஆம். நம் உலகில் அப்படி ஒரு அதிசயமான ஆழ்கடல் அருவி ஒன்று உள்ளது. அந்த அருவி அமைந்திருக்கும் இடம்தான், மொரிசியஸ்.
மொரிசியஸ் இந்திய பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவு ஆகும். இது கிழக்கு மடகாஸ்கரிலிருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மொரிசியஸ் தடாகங்கள், கடற்கரை, இயற்கையான அழகோடு இருக்கும் அமைதியான இடம் போன்றவற்றிற்கு பிரசித்தி பெற்றதாகும். வருடா வருடம் நிறைய சுற்றுலா பயணிகள் மொரிசியஸை காண வருவதற்கு முக்கியமான காரணம், ஆழ்கடலில் அமைந்திருக்கும் இந்த அருவிக்காகவே ஆகும். இதுவே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மொரிசியஸை வட்டமிட காரணம்.
மொரிசியஸில் உள்ள லீ மோர்னே பிரேபன்ட்(Le Mourne brabant) தென்மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்திருக்கிறது இந்த ஆழ்கடல் அருவி. உண்மையிலேயே இது அருவி கிடையாது. அருவி போன்று தோற்றமளிக்கும் ஆப்டிக்கல் இலூசனாகும். இப்படி உருவாவதற்கு காரணம் மண் மற்றும் வண்டல் படிவு நீருக்கடியில் உள்ள மின்னோட்டம் காரணமாக அடித்து செல்லப்பட்டு படிந்ததே காரணம். விதவிதமான நிறங்களில் உள்ள மணலும் அதன் மீது வந்து விழும் வெளிச்சமுமே இப்படி ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தி நம் கண்களை ஏமாற்றுகிறது.
இந்த அருவியை கடற்கரையிலிருந்து காணுவது சிரமம். இதை கழுகு பார்வையிலிருந்து மட்டுமே பார்க்க முடியும். அப்போதுதான் தெளிவாக தெரியும் என்பதால் ஹெலிகாப்டர் அல்லது பிளேன் மூலமாக சுற்றி காட்டப்படுகிறது. ஆழ்கடல் அருவியை ரசிப்பது மட்டுமில்லாமல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இருக்கும் லீ மோர்னே (Le Morne) மலையின் அழகையும் ரசிக்கலாம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அருவியை வானில் இருந்து ரசித்தது மட்டும் போதாதென்று கடலுக்கடியிலும் சென்றும் ரசிக்க முடியும். ஆம். இங்கு ஸ்க்யூபா டைவ் (Scuba Dive) செய்யும் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆழ்கடல் அருவியை பார்க்க வருவதற்கு சரியான நேரம் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களேயாகும். கண்டிப்பாக ஹெலிக்காப்டர் புக்கிங்கை முன்னதாகவே செய்து வைத்து கொள்வது அவசியமாகும்.
மொரிசியஸை ‘குட்டி இந்தியா’ என்று அழைப்பதுண்டு ஏனெனில் இங்குள்ள 75 சதவீத மக்கள் இந்தியர்களே ஆவார்கள். இந்தியாவிற்கும் மொரிஸியசிற்கும் நல்ல உறவு இருக்கிறது. இந்தியாவிலிருந்து அதிகப்படியாக மொரிசியஸ் பொருட்களை இறக்குமதி செய்கிறது. பாலி போன்று மொரிசியஸூம் இந்தியர்களிடம் பிரபலம் அடைந்து வருவதால் இந்தியர்கள் மொரிசியஸிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கண்டிப்பாக ஆழ்கடலின் அருவியின் அழகை ரசிப்பதற்காகவே வாழ்வில் ஒருமுறையாவது மொரிசியஸ் சென்றுவிட வேண்டும் என்பது பலருடைய கனவாக உள்ளது.