இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க்!

இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க்!

ர்நாடக மாநிலத்தில் மைசூருவைச் சூழ்ந்து அமைந்துள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஐந்து நாட்கள் 1300 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டேன்.  கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் அது சிறிய பகுதியாக இருந்தாலும் அதை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றி அமைத்து சிறப்பாக நிர்வகித்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்கள். 

கர்நாடகா மாநிலத்தில் ஏராளமாக கோயில்களும் நீர்வீழ்ச்சிகளும் இயற்கைவாச ஸ்தலங்களும், புராதான கலைச்சின்னங்களும் அமைந்துள்ளன.  அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பிக் காட்சியளிக் கின்றன.  விவசாயம் அதிக அளவில் செழிப்பாக நடைபெறுகிறது.  கர்நாடகத்தின் முக்கிய பயிர் கேழ்வரகு.  இங்கே அனைவரும் கீரை, மொச்சை போன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

கூர்க் மைசூரு நகரத்திலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு மலைவாசஸ்தலம்.  இங்கு பயிரிடப்படும் காபி உலகப்புகழ் பெற்றுத் திகழ்கிறது.  இங்கு காபி முதன்மைப் பயிராகும்.  இதைத்தவிர மிளகு, ஏலக்காய், ஆரஞ்சு போன்றவை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. 

கூர்க் என்பது கர்நாடக மாநிலத்தில் அமைந்த ஒரு மாவட்டத்தின் பெயர். நாம் அழைக்கும் கூர்க் எனப்படும் மலைவாசஸ்தலத்தின் பெயர் மடிக்கேரி.  முற்காலத்தில் இந்த பகுதி மெர்காரா என்று அழைக்கப்பட்டது.  மைசூரில் இருந்து மடிக்கேரிக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் காரில் பயணிப்பது இனிமையான அனுபவமாக இருக்கும்.  

மடிக்கேரி காட்டுப் பகுதியில் காட்டெருமை, யானைகள், சிறுத்தைகள் போன்றவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் இவற்றை நாம் காணலாம் என்கிறார்கள்.

இராஜாசீட்

டிக்கேரியில் முக்கியமான வியூ பாயிண்ட் ராஜா சீட் என்று அழைக்கப்படுகிறது.  முற்காலத்தில் அந்த பகுதியை ஆட்சி செய்த இராஜா ராணியுடன் ஒரு இடத்தில் அமர்ந்து இயற்கையை இரசிப்பாராம்.  மாலை வேளைகளில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு மகிழ்வாராம்.  இதனால் அந்த இடத்திற்கு ராஜா சீட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இராஜா சீட் பகுதியில் சுற்றுலா பயணிகள் நின்று கொண்டு இயற்கை அழகை இரசிக்க ஒரு பெரிய வியூ பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த இடத்தில் நின்று கொண்டு மடிக்கேரியின் அற்புதமான இயற்கை வளத்தை முழுமையாகக் கண்டு இரசிக்கலாம்.

மடிக்கேரிக் கோட்டை

கூர்க்கின் மையப்பகுதியில் ஒரு கோட்டை காணப்படுகிறது.  இதில் தற்போது பல அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  மடிக்கேரிக் கோட்டை பதினேழாம் நூற்றாண்டில் மன்னர் முத்துராஜாவால் கட்டப்பட்டது.  இந்த கோட்டைக்குள் ஒரு அரண்மனையையும் இவர் அமைத்தார்.   இந்த அரண்மனை பின்னர் நவீனமாக்கப்பட்டது.  கி.பி.1812 ஆம் ஆண்டு வாக்கில் இரண்டாவது லிங்கராஜேந்திர உடையாரால் சீரமைக்கப்பட்டது.  கி.பி.1834 ல் இந்த கோட்டை பிரிட்டிஷார் வசமானது.  இந்த கோட்டைக்குள் அமைந்துள்ள கோட்டை கணபதி ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  மடிக்கேரி மக்கள் இந்த கோயிலுக்கு வழிபட வருகிறார்கள்.  கோட்டைக்கு அருகில் ஒரு சிறிய அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

அபி நீர்வீழ்ச்சி

கூர்க்கில் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமாக இடம் அபி நீர்வீழ்ச்சி.   கூர்க்கிலிருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அடர்த்தியான காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.   பார்ப்பதற்கு குற்றாலம் நீர்வீழ்ச்சியைப் போல காட்சியளிக்கிறது.  ஆனால் இந்த நீர்வீழ்ச்சியில் நாம் குளிக்க அனுமதி இல்லை.  நமது வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் பத்து நிமிடங்கள் இத்தகைள காபி தோட்டத்தைக் கடந்து கென்றால் ஹோவென இரைச்சலுடன் இந்த நீர்வீழ்ச்சி ஒரு சிறிய மலைப்பகுதியில் கொட்டிக் கொண்டிருப்பதை நாம் இரசிக்க முடிகிறது.  இங்கு ஒரு தொங்கும் பாலத்தையும் அமைத்துள்ளார்கள்.  இதில் நின்று கொண்டு நேருக்கு நேராக நாம் நீர்வீழ்ச்சியின் அழகைக் கண்டு இரசிக்கலாம்.  நீர்வீழ்ச்சியிலிருந்து சிதறும் நீர்த்திவலைகள் நம் மீதுபட்டு மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது.  ஜீலை முதல் அக்டோபர் வரை இந்த நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டிக் கொண்டிருக்கும்.

ஓம்காரேஸ்வரா ஆலயம்

டிக்கேரியின் மையப்பகுதியில் ஓம்காரேஸ்வரா ஆலயம் அமைந்துள்ளது.  இந்த சிவபெருமானின் ஆலயம் கி.பி.1820 ல் இந்த பகுதியை ஆண்ட இரண்டாவது லிங்க இராஜேந்திராவால் கட்டப்பட்டது.  முகலாயர் கால கட்டக்கலை அமைப்பை இந்த கோயிலில் நம் காணமுடிகிறது.  இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கம் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  இந்த கோயிலின் முன்னால் ஒரு பெரிய குளமும் காணப்படுகிறது.

கூர்க் மலைவாசஸ்தலத்தின் மற்றொரு சிறப்பு அங்கு தயாரிக்கப்படும் சாக்லெட்  ஹோம்மேட் சாக்லெட்டுகள் இங்கே ஏராளமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.  அற்புதமான சுவையில் கிடைக்கின்றன.  தவற விடாதீர்கள்.  மேலும் இங்கு கிடைக்கும் சோன்பப்டி மற்றொரு சிறப்பான தின்பண்டமாகும்.  இங்கு நமது தமிழ்நாட்டு சைவ சாப்பாடு கிடைக்கிறது.     மதிய உணவை முடித்துக் கொண்டு நாம் தலைக்காவேரிக்குப் பயணிக்கலாம்.

தலைக்காவேரி

டிக்கேரியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப்பயணத்தில் தலைக்காவேரியை நாம் அடைந்து விடலாம்.  நம் வாழ்நாளில் காசியையும் இராமேஸ்வரத்தையும் பார்க்க வேண்டும் என்று நாம் எப்படி நினைத்திருக்கிறோமோ அப்படியே இந்த தலைக்காவேரியையும் காண வேண்டும்.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது.

ஸ்ரீ பாகண்டேஸ்வரா ஆலயம்

கூர்க்கிலிருந்து தலைக்காவேரிக்குச் செல்லும் வழியில் ஒரு அற்புதமான சிவன் கோயில் அமைந்துள்ளது.  அதன் பெயர் ஸ்ரீபாகண்டேஸ்வரா ஆலயமாகும்.   கேரளபாணியில் அமைந்துள்ள இந்த கோயிலில் ஸ்ரீபாகண்டேஸ்வரா லிங்க ரூபத்தில் காட்சிஅளிக்கிறார்.    மேலும் இக்கோயிலில் ஸ்ரீசுப்ரமணியசுவாமி, விநாயகர் போன்ற கடவுள்களுக்குத் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.  கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.

தலைக்காவேரி

லைக்காவேரி ஓர் அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும்.  காரில் பயணித்தால் கூர்க்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நாம் தலைக்காவேரியை அடைந்து விட முடியும்.   பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1276 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புனித பூமி தலைக்காவேரி.  காவிரி ஆறு இந்த இடத்தில்தான் உற்பத்தியாகிறது.  இந்த பகுதியில் ஒரு குளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.   இதற்கு அருகில் மூன்று அடிக்கு மூன்று அடி அளவில் ஒரு சிறிய அமைப்பு காணப்படுகிறது.  இதுதான் காவிரி ஆறின் உற்பத்தி ஸ்தலம்.  இந்த பகுதியில் உற்பத்தியாகும் நீர் பூமிக்கு அடியில் கீழிறங்கி காவிரி ஆறாக வெளிப்படுகிறது.  இந்த பகுதியின் மேற்பகுதியில் அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதியன்று இந்த பகுதியில் இருந்து நீர் உற்றாக பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம்.   இதை கண்டு தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கே கூடுகிறார்கள்.   இங்கிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாகமண்டலா என்ற பகுதியில் காவிரி, கனகே, சுஜ்யோதி என்ற மூன்று ஆறுகளும் சங்கமிக்கின்றன.   அகத்திய முனிவர் தன் கமண்டலத்தில் காவிரி நதியை அடக்கி வைத்திருந்ததாகவும் விநாயகர் காக்கை உருவத்தில் வந்து முனிவர் தவத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அந்த கமண்டலத்தை சாய்த்து காவிரியை மலையிலிருந்து ஓட வைத்ததாகவும்  புராணக்கதை கூறுகிறது.

தலைக்காவேரி உற்பத்தி ஆகும் இடத்திற்கு வலது புறத்தில் சுமார் நூறு படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் ஒரு வியூ பாயிண்ட் உள்ளது.    இந்த இடத்தில் நின்று கொண்டு இந்த பகுதியின் முழு இயற்கை வன அழகினைக் கண்டு ரசிக்கலாம்.

தலைக்காவேரியிலிருந்து மடிக்கேரி வழியாக மைசூரு நோக்கி பயணிக்கும் போது வழியில் நாம் காண வேண்டிய மற்றொரு சுற்றுலாத்தலம் காவேரி நிசார்கதாமா ஆகும்.

காவேரி நிசார்கதாமா

து காவேரி நதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு சின்னஞ்சிறிய தீவு.  இந்த தீவைச் சுற்றிலும் காவேரி நதி அமைந்துள்ளது.  இந்த இடம் மைசூரு மடிக்கேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குஷார் நகர் என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அறுபத்துநான்கு ஏக்கர் அளவுள்ள அமைதியான பகுதியாகும்.  இந்த இடம் மடிக்கேரியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இந்த சிறிய தீவை நகரத்திலிருந்து ஒரு தொங்குபாலம் மூலமாக இணைத்திருக்கிறார்கள்.  இந்த பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்களும் தேக்கு மற்றும் சந்தன மரங்களும் காணப்படுகின்றன.  மான் பூங்கா, முயல் பூங்கா போன்ற பூங்காக்களும் அமைந்துள்ளன.  இந்த இடத்தில் முழுமையான அமைதி நிலவுகிறது.  பூங்காவில் நாம் இயற்கை அழகையும் சிறுசிறு விலங்குகளையும் பார்த்து இரசித்துக் கொண்டே காலார நடந்து  செல்லலாம்.  யானை சவாரியும் படகுச் சவாரியும்கூட உண்டு.

புத்தர் தங்கக்கோயில்

காவேரி நிசார்கதாமாவை கண்டு களித்த பின்னர் அடுத்ததாக காண வேண்டிய இடம் குஷாலா நகருக்கு அருகில் பைலேகுப்பே என்ற இடத்தில் அமைக்கப் பட்டுள்ள புத்தர் தங்கக்கோயிலாகும். இங்கு திபெத்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பகுதிக்கு வந்தால் நாம் திபெத்தில் இருப்பதைப் போல உணருகிறோம்.  அனைவரும் அடர்த்தியான பிரௌன் மற்றும் மஞ்சள் வண்ண உடையினை அணிந்திருக்கிறார்கள். இங்கே திபெத்தியர்களுக்கான கல்விக்கூடமும் பல்கலைக்கழகமும் அமைந்துள்ளன.   இரண்டு பெரிய புத்த ஆலயங்கள் அமைந்துள்ளன.  இங்கு புத்தபிட்சுகள் தியானம் செய்கிறார்கள். கல்வியும் போதிக்கப்படுகிறது.  இந்த இடம் நமக்கு வித்தியாசமான உணர்வினைத் தருகிறது.

மைசூருவிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்குக் காரில் புறப்பட்டால் மேற்காணும் இடங்கள் அனைத்தையும் கண்டுகளித்து இரவு ஒன்பது மணிக்கு மைசூருவிற்குத் திரும்பி விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com