

வடசென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுலா தலமாகவும் சென்னை மாதவரம் ஏரி மற்றும் அருகிலுள்ள மணலி ஏரியில் படகு சவாரி வசதி தொடங்கப்பட்டுள்ளது. மாதவரம் ஏரி படகு இல்லம் நகரின் பரபரப்பான சூழலில் இருந்து விடுபட ஒரு சிறந்த இடமாகும். இங்கு ஜெட் ஸ்கை (Jet Ski), பெடல் படகுகள், மோட்டார் படகுகள் மற்றும் வாட்டர் ஸ்கூட்டர் சவாரிகள் கிடைக்கின்றன. இது சென்னையில் உள்ள ஜெட் ஸ்கை வசதியைக் கொண்ட முதல் ஏரியாகும்.
மாலையில் குடும்பத்துடன் குதூகலமாக நேரத்தை செலவிடவும், புதிய படகு சவாரி அனுபவத்தைப் பெறவும் ஏற்ற சிறந்த இடமாக இந்த மாதவரம் ஏரி உள்ளது. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று ஜாலியாக பொழுதுபோக்கலாம். ஏரிப் பகுதிக்கு செல்ல நுழைவு கட்டணம் எதுவும் இல்லை.
ஆனால் படகு சவாரிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இங்கு 2- சீட்டர் பெடல் படகுகளும், 4- சீட்டர் FRP மற்றும் 8 சீட்டர் மோட்டார் மற்றும் ஜெட் ஸ்கைகளும் என 16 படகுகள் உள்ளன. இரண்டு இருக்கை படகுகள் 200 ரூபாயில் தொடங்கி, ஜெட் ஸ்கை சவாரிக்கு 800 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
66 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியை சுற்றி நடந்து செல்ல 800 மீட்டர் நடைபாதைகள், பொழுது போக்கிற்கான வசதிகளும், குழந்தைகள் விளையாடும் இடமும், பசுமை பூங்காக்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், அலங்கார விளக்குகள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்குப் போதுமான வசதிகளும் உள்ளன. ஏரிகளைச் சுற்றி இருக்கை வசதிகள், கழிப்பறைகள், வாகன நிறுத்தும் இடங்கள், காத்திருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்த மாதவரம் ஏரி படகு சவாரியுடன், சென்னையில் புதுமையான அட்வென்ச்சர் ரைட் அனுபவத்தையும் வழங்குகிறது.
சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து நிர்வகித்து வருகின்றது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு ஏரியைச் சுற்றி வெட்டிவேர் புற்கள் நடப்பட்டுள்ளன. அத்துடன் ஏரியில் உள்ள நீரின் தரத்தை பாதுகாப்பதற்கு கழிவுநீர் கலப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஏரியில் படகு சவாரி வசதி இப்பகுதியை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றி வருகிறது. மாதவரம் மற்றும் மணலி ஏரிகள் நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக உருவெடுத்துள்ளது. இது உள்ளூர் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன், குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்குவதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும் ஒரு சிறந்த இடமாக உள்ளது.
எப்படி செல்வது?
தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது. மணலி- மாத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் மிக அருகில் உள்ளது. பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து படகு குழாம் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பஸ் வசதியும், மூலக்கடையிலிருந்து பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களும் அதிகம் உள்ளது.