

எவ்வித பயணம் என்றாலும் அதில் உடல்நல பாதிப்புகளும் சிலருக்கு ஏற்படுவது உண்டு. நெடு நாட்களாக இருக்கும் உடல் உபாதைகளுக்கு அவரவர் கைகளில் மருந்துகளை எடுத்துச் சென்றாலும் ரயிலில் செல்லும்போது திடீரென ஏற்படும் உடல் நல பாதிப்புகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் பயணிகள் விழிப்பதுண்டு.
சில நேரங்களில் அந்த பெட்டியில் யாரேனும் மருத்துவர் இருந்தால் அவர் உதவியின் பேரில் ஏதேனும் முதல் உதவிகளை செய்ய முற்படுவர். ஆனால் தற்போது அதற்கு அவசியம் இன்றி ரயில்வேதுறை தங்கள் பயணிகளுக்கு உடல் நலம் குறித்து செய்து தந்துள்ள இந்த வசதி அனைவராலும் பாராட்டு பெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக எந்தவித பாதிப்பாக இருந்தாலும் ஓடும் ரயிலில் பாதிக்கப்படும் பயணிகளிடம் அதற்கான கட்டணமாக வெறும் ₹100 வசூலிக்கப்பட இருக்கிறது எனும் என்று வெளியான தகவல் ரயில் பயணிகளுக்கு உற்சாகத்தையும் பாதுகாப்பு உணர்வையும் தந்துள்ளது எனலாம்.
இதற்கு முன்பும் ரயில் பயணிகளுக்கான இந்த மருத்துவ வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த மருத்துவ வசதி எப்போது துவங்கப்பட்டது தெரியுமா?
உலக அளவில் 1800களின் இறுதியில் ரயில் பயணம் அதிகரித்தபோது அடிப்படை மருத்துவ வசதிகள் அவசியமாகி 1870–1900 ஆண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகள் முதலுதவி பெட்டிகளை ரயில்களில் கட்டாயமாக்கின.
தொடர்ந்து இந்திய ரயில்வே 1930களில் முதலுதவி பெட்டிகளை ரயில்களில் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் அறிவியல் தாக்கத்தால் மருத்துவ உதவி அமைப்பு சிறிது சிறிதாக விரிவடைந்து 2000களில், முக்கிய நிலையங்களில் மெடிக்கல் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மற்றும் ரயில்களில் முதலுதவி பெட்டிகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள், சில சிறப்பு ரயில்களில் மருத்துவர்கள் மற்றும் 108/139 போன்ற அவசர உதவிக்கான எண்கள் சேர்க்கப்பட்டது. திடீர் நெஞ்சு வலி, மயக்கம், இடைவிடாத விக்கல் அல்லது வலிப்பு, சுவாசப் பிரச்னை, ரத்தப்போக்கு குழந்தைக்கான திடீர் மருத்துவம்
போன்ற எந்த அவசர மருத்துவ நிலைக்கும் உடனே உதவி கோரலாம்.
பொதுவாக அனைத்து ரயில்களிலும் பாண்டேஜ், அடிப்படை மாத்திரைகள், மருந்துகள் உள்ளடக்கிய முதலுதவிப்பெட்டி (First-Aid Box) உள்ளது. திடீரென மருத்துவ உதவி தேவைப்பட்டால் டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) தெரிவித்தால் அவர் கட்டுப்பாட்டு அறையை (Control Room-) தொடர்பு கொண்டு மருத்துவருடன் (doctor on-call) பேச வைப்பார். அல்லது தீவிர பிரச்னை ஏற்பட்டால் 139 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
நீங்கள் பயணிக்கும் ரெயில் மற்றும் கோச் எண், பயணி பெயர் பிரச்னையின் நிலைமை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். ரயில்வே கட்டுப்பாட்டு அறை (Control Room) உடனடியாக அருகிலுள்ள அடுத்த நிலையத்துக்கு மருத்துவ அணியை அனுப்பி உதவும். தேவைப்பட்டால் அவசர மருத்துவ வண்டி (Ambulance) க்கும் ஏற்பாடு செய்வார்கள்.
இரயில் பயணம் அல்லது வேறு எந்த வகை பயணமாக இருந்தாலும் நாமே எதிர்பாராதவிதமாக வரும் உடல் பிரச்னைகளின்போது பதட்டம் கொள்ளாமல் அதன் நிர்வாகத்தினரிடம் இருக்கும் மருத்துவ சேவையை பயன்படுத்தி நலமுடன் பயணிக்கலாம்.