ஊட்டியிலிருந்து சுமார் 19 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமம்தான் பைக்காரா. அந்த கிராமத்தில் பசுமையான காடுகளுக்கு மத்தியில் அழகோவியமாக விளங்கும் இந்த பைக்காரா நீர்வீழ்ச்சி, கோடைக்காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஓர் இடமாகும்.
பைக்காரா கிராமத்தில் ஒரு அழகிய நதி ஓடுகிறது. முதலில் அந்த நதிக்கே கிராமத்தின் பெயர் சூட்டப்பட்டது. நதியில் ஓடும் நீர் புனிதத்துவம் வாய்ந்ததாகவே அந்த மக்கள் கருதுகின்றனர். மேலும் அங்கு பைக்காரா அணை, பைக்காரா ஏரி, பைக்காரா நீர்வீழ்ச்சி என அனைத்துமே உள்ளது. பைக்காரா ஏரியிலிருந்து வெறும் 2 கிமீ தூரத்திலும், ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவிலும் தான் இந்த பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளது.
பைக்காரா நதியிலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், மூச்சடைக்கக்கூடியதாவும் இருக்கும். கரடுமுரடான குன்றுகளினால் இரண்டு அடுக்குகளாகப் பிரிந்து விழும் இந்த அருவி 55 முதல் 61 மீட்டர் அளவில் விழுகிறது.
பசுமையான காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக உள்ளது. மழைக்காலங்களில் இன்னும் கூடுதல் அழகுடன் காட்சியளிக்கும் இந்தப் பகுதியில், சில இடங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த அருவிக்கு செல்ல ஏற்ற மாதம் ஜூலை ஆகும். ஆனால், விடுமுறை காலங்களில் இந்தப் பகுதிக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.
இந்த பைக்காரா நீர்வீழ்ச்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைத் திறந்திருக்கும். அதேபோல் நுழைவுக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரையாகும். அருவியில் நீர் அழகாக இருந்தாலும், பாறைகள் இருப்பதால் நீச்சலடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நீச்சல் செய்துகொள்ளலாம்.
இங்கு நீங்கள் படகு சவாரி செய்யலாம். சில மணி நேரத்திற்கு படகு வாடகை எடுக்க ரூ.150 முதல் ரூ.300 வரையாகும். பைக்காரா நீர்வீழ்ச்சியிலிருந்து ஒரு 2 கிமீ தொலைவில் பைக்காரா அணை மற்றும் நீர்த்தேக்கம் உள்ளன. அணைக்கு அடுத்து பைக்காரா ஏரியும் உள்ளது. இந்த ஏரியின் அழகை மோட்டார் படகில் சென்று பார்க்கலாம். மோட்டார் படகுக்கு ரூ750 முதல் ரூ900 வரையாகும்.
ஒருநாள் முழுவதும் பைக்காரா நீர்வீழ்ச்சியில் நேரம் செலவிடுவது, ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.