லடாக் பயணத்தின் மணிமகுடம்: பாங்காங் ஏரியைப் பற்றித் தெரியுமா?

pangong-lake
pangong-lake
Published on

“சொர்க்கம் என்று ஒன்று உலகில் உண்டெனில் அது இதுவே” என்று சொல்லுமளவிற்கு பார்த்ததும் மனதை பறித்துவிடும் அழகை கொண்ட ஏரிதான்  பாங்காங் ஏரியா.

பாங்காங் ஏரி லடாக்கின் கிழக்கிற்கும் திபெத்தின் மேற்கிற்கும் மத்தியிலே 13,862 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 5 கிலோ மீட்டர் அகலமும், 134 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் 328 அடி ஆழத்தை கொண்டதாகும்.  இதுவே உலகத்தின் உயரமான உப்பு ஏரியாகும். இந்த ஏரியின் நிறம் நீலநிறமாகவும், சுற்றி மலைகளும் அமைந்திருப்பது பார்ப்பவர்களை இதன் அழகில் மெய்மறக்க வைத்துவிடும். பாங்காங் ஏரி நேரத்திற்கு ஏற்றார் போல நிறம் மாறக்கூடியதாகும். சில சமயங்களில் நீலம், சிவப்பு மற்றும் பச்சை நிறமாக மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

லடாக்கிற்கு பயணிக்கும்போது மறக்காமல் இந்த பாங்காங் ஏரியை பார்த்துவிட்டு வருவது அவசியமாகும்.

சனம், 3 இடியட்ஸ் போன்ற பாலிவுட் படங்களில் வரும் சில காட்சிகளை இங்கே வைத்து படமாக்கியுள்ளார்கள். அதனால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் இந்த ஏரியை சுற்றி பார்க்க அதிகளவில் வருகிறது.

பாங்காங் ஏரியானது, புகைப்பட கலைஞர்களுக்கும், செல்பி பிரியர்களுக்கும், லடாக்கிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது.

பாங்காங் ஏரிக்கு வருவதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரி இந்தியாவிற்கும், சீனாவிற்குமான எல்லையில் அமைந்துள்ளதால், இந்திய சுற்றுலாப்பயணிகள் இன்னர் லையன் பர்மிட் (ILP) வாங்க வேண்டும்.

பாங்காங் ஏரிக்கு லேயிலிருந்து 5 மணி நேரத்தில் வந்து அடைந்துவிடலாம். லேயிலிருந்து சங்லா பாஸ் மூலமாகவும்  ஏரியை அடையலாம். இங்கே பஸ் வசதிகளும் இருக்கிறது. அப்படி இல்லையென்றால், லேவிலிருந்து பாங்காங் ஏரிக்கு டாக்ஸி உள்ளது.

மே முதல் செப்டம்பர் வரை பாங்காங் ஏரியை சுற்றி பார்க்க வருவது சிறந்ததாகும். அப்போதுதான் ஏரியின் அழகை முழுமையாக ரசிக்க முடியும். இல்லையேல் குளிர்காலத்தில் ஏரி முழுமையாக உறைந்து போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இனி இஷ்டத்துக்கு தாய்லாந்தில் தங்கி ஊர் சுற்ற முடியாது... முட்டுக்கட்டை போடும் புதிய நடைமுறை இதோ!
pangong-lake

பாங்காங் ஏரியை அங்கே உள்ள மக்கள் புனிதமாகக் கருதுவதால் நீந்துவதற்கோ அல்லது கால்களை நனைப்பதற்கோ அனுமதி கிடையாது.

அதுமட்டுமில்லாமல் ஏரியில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், கண்டிப்பாக குளிப்பதற்கு தடை செய்யப்படுள்ளது. இவ்விடத்தை சுற்றி 34 கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவமனை எதுவும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைய ஏஜென்சிகள் தற்போது சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கிறது. அதன் மூலமாக கூட பாங்காங்கிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது மிகவும் சுலபமாகும்.

எனவே பாங்காங் ஏரியை வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்து ரசித்து விட்டு வரவேண்டிய இடங்களில் ஒன்றாக மறக்காமல் சேர்த்து கொள்வது அவசியமாகும். மனதிற்கு ரம்மியமாகவும், கண் கவரும் அழகுடனும், பரந்து விரிந்து விசாலமாகவும் காட்சி தரும் பாங்காங் ஏரி உண்மையிலேயே ஒரு சொர்க்க பூமி என்று வர்ணித்தாலும் மிகையாகாது.

-நான்சி மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com