
சமீபத்தில் "மும்பை ஆர்ட்ஸ் லவர்ஸ் நாடகக் குழு" இந்தூரில் நாடகம் போடச் செல்கையில், ஒரு கலைஞராக அடியேனும் உடன் சென்றிருந்தேன். தூய்மை நகரமான இந்தூரையும், புனித நகரமாகிய உஜ்ஜையினியையும் பார்க்க கிடைத்தது பாக்கியம்.
மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய நகரமெனக் கூறப்படும் இந்தூர் பல வருடங்களாக, இந்தியாவின் தூய்மை நகரமாக விளங்கி வருகிறது. வரலாற்று மற்றும் கலாச்சார இடங்கள், அரண்மனைகள், கோவில்கள், பாரம்பரிய சந்தைகள் ஆகியவைகளைக் கண்டு ரசிக்க உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பார்த்த இடங்களில் சிலவற்றை பகிர்கிறேன்.
கஜ்ரானா கணேஷ்ஜி கோவில், ராணி அகல்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்டதாகும். ஔரங்கசீப் படையெடுத்து வருகையில், கணேஷ்ஜி சிலையை பாதுகாக்க, கிணற்றினுள் மறைத்து வைக்கப் பட்டுள்ளது. பிறகு வெளியே எடுக்கப்பட்டு, விமரிசையாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மனதார பிரார்த்திக்கும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் கோவில்.
ராஜ்வாடா அரண்மனை, ஏழு அடுக்குகள் கொண்டது. நகரத்தின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ராஜ்வாடா நகரின் மையத்திற்கு அருகாமையில் அரண்மனை உள்ளது. ஏகாதிபத்திய இந்தியாவின் அரச பெருமையைப் பற்றிப் பேசும் அரண்மனையில், அகல்யாபாயின் சிலை அடங்கிய தோட்டம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. மாலை நேரங்களில் நடைபெறும் ஒலி -ஒளி நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும்.
சப்பன் என்றால் 56 என்று பொருளாகும். இந்த பஜாரில் 56 க்கும் மேல் உணவுக்கடைகள், துணிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 12 மணிவரை செயல்படுகின்றன. பஜாரின் இரு பக்கங்களிலும் கடைகள் எக்கச்சக்கம்.
சராபா பஜாரில், பகல் நேரங்களில் நகைக்கடைகளும், பாத்திரக் கடைகளும் அமர்க்களப்படும். இரவு 10 மணி அளவில், இக்கடைகள் மூடப்பட்டு, அவைகளின் வெளிப்புறத்தில் வித-விதமான உணவுக் கடைகள் திறக்கப்பட்டு மறுநாள் காலை 4 மணி வரை இயங்கும். புகைப்படம் எடுக்க, நடுவே ஊர்ந்து செல்லவேண்டும். உணவுகளை ருசி பார்க்க ஏற்ற பஜார்.
இந்தூரிலிருந்து சாலை வழியே சுமார் 2 மணி நேரப்பயணம் உஜ்ஜையினி. 5000 ஆண்டுகள் பழமையான சிறந்த நகரம். ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள உஜ்ஜையினில், கும்பமேளா நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விசேஷமாக நடைபெறுகிறது.
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகிய மகா காலேஷ்வர், சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். மகா சக்தி பீடங்களில் ஒன்றாகிய இங்கே பஸ்ம ஆரத்தி பிரபலமானது. முன் கூட்டியே புக்கிங் செய்யவேண்டும்.
கல்லால் கட்டப்பட்ட. இக்கோவிலில், பண்டைய இந்திய வடிவமைப்பு நுணுக்கங்களைக் காணலாம். அடர் சிகப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட அன்னபூரணி தேவியின் சிலை, மகாலெஷ்மி மற்றும் மகா சரஸ்வதி சிலைகளுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளது.
உஜ்ஜையினில் உள்ள பெரிய கோவிலாகிய இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர், சுயம்பு மூர்த்தியாக கருதப் படுகிறார். சிந்தாமணி, சிக்க்ஷாமணி,சித்தி விநாயகர் மூவரும் சேர்ந்து காட்சியளிக்கின்றனர். இங்கு காணப்படும் பொதுக் கூடம் மற்றும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ள வெள்ளை நிற கல் தூண்கள் கோவிலின் பழமையான புனிதத்தை வரையறுக்கின்றன.
உஜ்ஜையினியின் கலாச்சார முக்கியத்துவத்தை கூறும் வகையிலும், இங்கே ஆட்சி புரிந்த அரசர்கள், இளவரசர்களின் வரலாற்றைக் குறிப்பிடும் சின்னமாக அமைந்துள்ளது.
உபரி தகவல்கள்
காராசேவ், கச்சோரி, கஜக், மால் புவா, ரபடி, அவலினால் செய்யப்பட்ட வித்தியாச ருசிகொண்ட பதார்த்தங்கள் பிரபலம். விமானம் ரெயில், சாலை போக்குவரத்து என. நாட்டின் அனத்து பகுதிகளில் இருந்தும் இணைப்பு இந்தூருக்கும், உஜ்ஜையினிக்கும் உள்ளன. வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.