இந்த வீக்கெண்ட் பிளான் என்ன? இதோ பசுமையான உலக்கை அருவிக்கு ஒரு ட்ரிப்!

Payanam articles
ulakkai-aruvi
Published on

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை தாலுகாவில், அழகியபாண்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடம்தான் உலக்கை அருவி. இது நாகர்கோவிலில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும், அடர்ந்த காட்டுப் பகுதியிலும் உள்ள அருவி. இது மலையேற்றத்திற்கு ஏற்றது. மலை உச்சியில் இருந்து செங்குத்தாக பாயும் இதனை சற்று தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு பெரிய உலக்கையைப் போல் காட்சி தருகிறது. அதனால்தான் இந்த அருவிக்கு உலக்கை அருவி எனப் பெயர் வந்தது.

அழகியபாண்டியபுரத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இந்த அருவிக்கு அருகில் அகஸ்திய முனிவருடன் தொடர்புடைய ஒரு சிறிய கோவிலிலும் உள்ளது. காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும்.

காட்டின் வழியாக ஒரு குறுகிய நடைபயணத்தின் மூலம் இந்த நீர்வீழ்ச்சியை காணச் செல்லும் பொழுது பல்வேறு வகையான பறவைகள் மற்றும் விலங்குகளைக் காணலாம். இது ஒரு இயற்கை அருவியாகும். ஏராளமான மூலிகைகளுடன் கலந்து வரும் இந்த இந்த அருவியல் குளிப்பதற்கும், இயற்கை அழகை ரசிப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

களக்காடு வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ளதால், அடர்ந்த காடுகள் மற்றும் மூலிகை செடிகளுக்கு இடையே அழகாக நீர் வழிந்து ஓடுகிறது. இந்த அருவியினுடைய சிறப்பு என்னவென்றால் இதில் எல்லா மாதமும், எல்லா காலத்திலும் நீர் வந்து கொண்டே இருக்கும். அருவியைச் சுற்றி பசுமையான காடுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பச்சை பசேலென தெரிகின்றது.

பசுமை மாறா காடுகளும், மலைகளும், வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றது. இந்த நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எனவே உலக்கை அருவிக்கு செல்வது என்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும். சாகச ஆர்வலர்களுக்கும், மலையேற்றம் செய்ய விரும்புவர்களுக்கும் ஏற்ற அற்புதமான இடம் இது.

இதையும் படியுங்கள்:
குற்றங்களே இல்லாத நாடு! ராணுவமே இல்லாத தீவு! - ஆச்சரியப்படுத்தும் சுற்றுலாத் தலங்கள்!
Payanam articles

கோடை காலத்தைவிட மழைக்காலத்திற்குப் பிறகு செல்வது சிறந்தது. இந்த அருவி காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளதால் உள்ளே செல்ல வனத்துறையின் அனுமதி பெறவேண்டியது அவசியம். இது பாதுகாப்பான, பசுமையான சூழல் மற்றும் குளிர்ந்த நீர் உள்ளதால் இது ஒரு சிறந்த ட்ரெக்கிங் இடமாகவும், பிக்னிக் ஸ்பாட்டாகவும் கருதப்படுகிறது. அருவி பகுதிக்கு அருகில் கடைகளோ, உணவகங்களோ இல்லை. எனவே தேவையான ஸ்னாக்ஸ், குடிதண்ணீர் மற்றும் உணவுகளை எடுத்துச்செல்வது நல்லது. வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை. இந்த நீர்வீழ்ச்சி வார இறுதி பயணத்திற்கு ஏற்ற இடமாகும். அருவியில் குளிப்பதும், பசுமை நிறைந்த இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிப்பதும் என ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

எப்படிச் செல்வது?

கன்னியாகுமரி நகரத்திலிருந்து 35 கி.மீ.,நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ.தொலைவிலும் உள்ள இதனைை எளிதாக அடையலாம். அழகிய பாண்டியபுரம் வரை வாகனங்களில் சென்று, பின் சுமார் 2 கிலோ மீட்டர் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபயணமாக செல்ல வேண்டும்.

செல்ல ஏற்ற காலம்?

பருவ மழைக்கு பிந்தைய காலங்களான செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இந்த அருவிக்கு செல்ல சிறந்த நேரமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com