மலைகளின் ராணி என அழைக்கப்படும் முசோரி உத்ரகாண்டின் கர்வால் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த மலை வாசஸ்தலமாகும். தேவதாரு மரங்கள் நிறைந்த அடர்ந்த காடுகள் மலைகளில் காணப்படுகிறது.
1) முசோரி ஏரி:
செயற்கையாக கட்டப்பட்ட இந்த ஏரி மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலா தலமாகும். இந்த ஏரியில் படகு சவாரி, ஜிப்லைனிங் ஆகியவற்றை அனுபவிக்கலாம். சிட்டி போர்டு மற்றும் முசோரி டெஹராடூன் மேம்பாட்டு ஆணையம் இந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. டூன் பள்ளத்தாக்கு மற்றும் அருகில் உள்ள அழகிய கிராமங்களையும் இங்கிருந்து பார்க்க முடிகிறது. டெஹ்ராடூன்-முசூரி சாலையில் முசோரிக்கு 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள முசோரி ஏரி, படகு சவாரியுடன் ஒரு நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகும்
2) கெம்ப்டி நீர்வீழ்ச்சி (Kempty Falls):
முசோரியிலிருந்து 13 கிலோமீட்டர் சக்ரதா சாலையில் உள்ளது.இது கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையிலிருந்து 40 அடி உயரத்தில் விழும் இந்த நீர்வீழ்ச்சிதான் முசோரியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். வற்றாத கெம்ப்டி நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் உள்ள குளம் நீச்சல் மற்றும் குளிப்பதற்கு சிறந்த இடமாக உள்ளது. இன்று படகு சவாரியும் செய்து மகிழலாம்.
3) லால்டிப்பா:
அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இடமான லால்டிப்பாதான் முசோரியின் மிக உயரமான இடமாகும். சூரிய உதயம், மறைவு மற்றும் ஆங்கிலேயர் காலத்து வீடுகள் ஆகியவற்றைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.
4) கன் ஹில்:
கடல் மட்டத்திலிருந்து 2122 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது முசோரியின் இரண்டாவது உயரமான இடமாகும். ரோப் கார் உதவியுடன் கன் ஹில்லின் உச்சியை அடையலாம். மலை உச்சியிலிருந்து இமய மலையையும் முசோரியின் கடை வீதிகளையும் காண முடியும்.