இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் டச்சு மக்கள் வியாபாரம் செய்வதற்காக இந்தியா வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக டச்சு கிழக்கிந்தியா கம்பெனி ஒன்றை இந்தியாவில் நிறுவினார்கள். டச்சு மக்களும் நிறைய பேர் வந்து இந்தியாவில் குடிப்பெயர ஆரம்பித்தார்கள். இதனையடுத்து பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தது.
அந்தச் சமயத்தில் ஃப்ரென்ச் மக்கள் பாண்டிச்சேரியிலும், போர்ச்சுகீஸ் மக்கள் கோவாவிலும், டச்சு மக்கள் தரங்கம்பாடியிலும் இடங்களைப் பிரித்து வாழ்ந்தார்கள். அதன் பின்னர் டச்சு அரசு கோரமண்டல், கோல்கோண்டா, மச்சிலிப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களைத் தன் வசம் ஆக்கினார்கள். அப்போதுதான் புலிகாட் டச்சு கட்டுப்பாட்டில் வந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் போரின்போது நிறைய கோட்டைகள் சேதமடைந்தன. அவற்றை இன்னும் இந்திய அரசும் டச்சு அரசும் மறுக்கட்டுமானம் செய்யும் முனைப்பில் இருந்து வருகின்றனர். அந்த இடங்கள் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்படுகின்றன. அந்தவகையில் புலிகாட்டில் நாம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி பார்ப்போம்.
புலிகாட் ஏரி:
இது மிகவும் புகழ்பெற்ற ஏரி. இதனை பழுவேற்காடு ஏரி என்றும் அழைப்பார்கள். அரானி ஆறு, கலங்கி ஆறு, ஸ்வர்னமுகி ஆறு ஆகிய மூன்றும் இணைந்ததுதான் புலிகாட் ஏரி. இங்கு ஏராளமான மீன்கள், பறவை வகைகள் மற்றும் ஊர்வன வகைகளைப் பார்க்கலாம்.
புலிகாட் பறவைகள் சரணாலயம்:
புலிகாட் சரணாலயம் மொத்தம் 481 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பலவகையான இறால், பாலிசீட் புழுக்கள், அதிகப்படியான பறவைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். மேலும் பூநாரை, நீர்க்கோழி வகைகள், கடல் காளைகள், பெரிய வகை கொக்குகள், நிறைய வகையான வாத்துகள் ஆகியவற்றையும் பார்க்கலாம். இங்கு நீங்கள் வாரம் முழுவதும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை சுற்றிப்பார்க்கலாம். அனுமதி கட்டணம் எதுவும் இல்லை.
கோட்டை ஜெல்ட்ரியா:
இந்தக் கோட்டை டச்சு அரசால் 1613ம் ஆண்டு கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு போரினால் ஜெல்ட்ரியா கோட்டை சேதமானது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாக இருந்து வருகிறது. ஜெல்ட்ரியா கோட்டை அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஓர் இடம்.
பாலிஸ்வரர் கோயில்:
புலிகாட்டிற்கு 9 கிலோமீட்டர் தொலைவில் திருபாலைவனத்தில் உள்ள ஒரு சிவன் கோயில். இது சோழர்களால் கஜப்ருஷ்த கட்டடக் கலையில் கட்டப்பட்டது. இங்கு காலை 7 மணியிலிருந்து 11 மணி வரையே செல்ல முடியும்.
ஸ்ரீ ஆதி நாராயண கோயில்:
இது விஜயநகர பேரரசால் 13வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஒரு சிறப்புமிக்க விஷ்ணு கோயில். மாலை 5 மணி முதல் 7 வரை மட்டுமே தரிசனம்.
ஜதராயர் கோயில்:
இக்கோயில் ஐநூறு வருடங்கள் பழைமையான ஒரு சிவன் கோயில். புலிகாட்டிலிருந்து இந்தக் கோயிலுக்குச் செல்ல ஒரு மணி நேரமாகும்.
சிந்தா மாந்தீஷ்வரர் கோவில்:
கருங்காலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோயில். இது கடலுக்கும் காட்டிற்க்கும் இடையில் உள்ள ஒரு கோயில். சிந்தா மாந்தீஷ்வரர் கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ அரசால் கட்டப்பட்டது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டச்சு சிமிட்டரி:
புலிகாட் சுற்றிப்பார்க்க செல்பவர்கள் நிச்சயம் இந்த இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும். இது டச்சு அரசின் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது 1622ம் ஆண்டிலிருந்து புகழ்வாய்ந்த ஒரு இடமாக இருந்து வருகிறது. இங்கு வாரத்தில் ஏழு நாட்களும் காலை
10 மணி முதல் மாலை 7 மணி வரை செல்லலாம்.
புலிகாட்டிற்கு சென்றால் இந்த இடங்களைக் கட்டாயம் சென்று சுற்றிப் பார்த்து ரசிக்கலாம்.