திண்டுக்கல் மாவட்டம் பூட்டிற்கும் பிரியாணிக்கும் மட்டுமே பிரபலமில்லை. சுற்றுலாத் தலமான சிறுமலை மலைத்தொடருக்கும் பிரபலமாகும்.
சமீப காலமாகத்தான் மக்களுக்கு மெல்ல மெல்ல இந்த சுற்றுலா தலத்தின் அருமை புரிய ஆரம்பித்துள்ளது. சிறுமலை காடு 60,000 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த மலையின் உச்சியை அடைய 18 கொண்டைஊசி வளைவுகளைக் கடக்க வேண்டும்.
நோய்களை போக்கும் மலைவாழை:
சிறுமலையை சுற்றி இலையுதிர் காடுகளே அதிகமாக உள்ளன. இது மலைவாழைக்கு மிகவும் புகழ்பெற்ற இடமாகும். இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் வெள்ளிமலை சிவன் கோயில், மாவூர் அணை போன்ற இடங்கள்.
சிறுமலை உருவான வரலாறு:
ராமாயண போரின்போது லக்ஷ்மணரை காப்பாற்ற சஞ்சீவினி மூலிகையைத் தேடிக்கொண்டு வந்த அனுமன் அந்த மூலிகை எது என்பதை கண்டுப்பிடிக்க முடியாததால் மொத்த மலையையும் தூக்கி செல்வார். அப்போது அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு துளிதான் இந்த சிறுமலை காடு என்று கூறப்படுகிறது.
சிறுமலையில் உள்ள உயரமான மலை வெள்ளிமலையாகும். இது முழுக்க வெள்ளியால் ஆன மலையாக இருந்தது என்றும், பின்பு அகத்திய முனிவர் கலியுகத்தில் இந்த மலையை கல்லாக மாற்றினார் என்றும் நம்பப்படுகிறது. 500 வருட பழமையான சிவன் கோயில் இந்த மலையின் உச்சியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம்:
அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் உள்ள ஆசிரமம் வெள்ளிமலையில் அமைந்துள்ளது. அன்னதான வசதியும் தங்கும் வசதியும் ஆசிரத்தில் இருக்கிறது. நிறைய தொண்டு நிறுவனங்களும் மலையை சுத்தம் செய்வதற்கு முன்வருகிறார்கள்.
தங்கும் வசதி:
சிறுமலையில் தங்கும் வசதிகள் நிறைய இருக்கின்றன. காட்டேஜ், ரிசார்ட்கள் உள்ளன. குறைந்த விலையில் தூய்மையான மற்றும் சுத்தமான தங்கும் வசதிகள் உள்ளன.
எனவே அமைதியான இயற்கை அழகை கண்டு ரசித்த வர நினைப்பவர்களுக்கு சிறுமலை ஏற்ற இடமாகும்.
திண்டுக்கல்லின் சிறப்பு
திண்டுகல் காரணப்பெயர் கொண்ட ஊர். ‘திண்டு’ அதாவது தலையணை போன்று கற்கள் அந்த நகரத்தில் உள்ளதால் ‘திண்டுகல்’என்று பெயர் வந்தது. திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டை கற்களால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் அபிராமியம்மன் கோயில் மிகவும் பிரபலமான சிவஸ்தலங்களுள் ஒன்று. நவராத்திரியில் நடைப்பெறும் கொலுவிற்கு புகழ்பெற்ற கோயிலாகும்.
கோட்டை மாரியம்மன் கோயில் பூச்செரிதல் திருவிழாவிற்கு பிரசித்தி பெற்றதாகும்.
ஆத்தூர் காமராசர் ஏரி, காமராசர் சாகர் அணை ஆகியவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா தலங்களாகும்.
கொடைக்கானல் மலை, பழனி மலை, சிறுமலை, திண்டுக்கல் கோட்டை ஆகியவை கண்டிப்பாக சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களாகும்.
திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி உலக புகழ் பெற்ற ஒன்றாகும்.