
சாலை பயணங்கள் என்பது புதிய இடங்களை பார்ப்பதற்கும் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கும் ஏற்ற ஒரு உற்சாகமான வழியாகும். சாலைப் பயணத்தை திட்டமிடும் பொழுது பயணப்பாதை, தங்குமிடம், பொழுதுபோக்கு போன்றவற்றையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டியது அவசியம். இயற்கையோடு இணைந்த சாலைப்பயணம் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தரும்.
வாகன பராமரிப்பு:
சாலை பயணத்திற்கு திட்டமிட்டால் பயணத்திற்கு முன்பு வாகனத்தின் டயர்கள், பிரேக்குகள், பெட்ரோல் இருப்பு மற்றும் பிற பாகங்களையும் சரிபார்க்கவும். செல்லும் வழியைப் புரிந்து கொள்ள சாலை வரைபடம் அல்லது ஜி.பி.எஸ் கருவியை பயன்படுத்தலாம். இவை சிறந்த வழிகளைக் கண்டறியவும், போக்குவரத்தை தவிர்க்கவும், வழியில் காணப்படும் சிறந்த இடங்களை பார்வையிடவும் உதவும்.
ஓய்வு:
பாதுகாப்பான, வசதியான மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை பெறுவதற்கு பயணத்திற்கு முன்பு ஓய்வெடுப்பது நல்லது. பயணம் செய்வதற்கு முன்பு நல்ல இரவு தூக்கத்தை பெறுவது. அத்துடன் நீண்ட நேரம் ஓட்டுவதை தவிர்க்கவும். அவ்வப்போது ஓய்வெடுத்து பயணம் செய்யவும். பயணத்தின்போது மறக்காமல் சீட் பெல்ட் அணிந்து கவனமாக ஓட்டவும். கடந்து செல்லும் பிற வாகனங்களுக்கு வழிவிடவும் மறக்க வேண்டாம்.
இடைவெளி எடுப்பது:
நல்ல தூக்கம் இருந்தாலும் நீண்ட பயணங்களின் பொழுது வழக்கமான இடைவெளிகளை எடுப்பது அவசியம். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஓய்வெடுப்பது, தூக்க கலக்கத்தைத் தடுக்க பின்னிரவு நேரப் பயணங்கள் அல்லது அதிகாலை போன்ற குறைந்த ஆற்றல் உள்ள நேரங்களில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கலாம்.
பட்ஜெட் திட்டமிடல்:
பெட்ரோல், உணவு, ஹோட்டல் தங்குதல் மற்றும் பிற செயல்பாடுகளுக்கான செலவுகளை உள்ளடக்கிய சாலைப் பயண பட்ஜெட்டை உருவாக்குவது, அவை நம் பட்ஜெட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள உதவும். பட்ஜெட்டிற்கு ஏற்ற இடங்களை தேர்ந்தெடுப்பதும், எரிபொருள் திறன்கொண்ட வாகனங்களை பயன்படுத்துவதும் ஒட்டுமொத்த பயண செலவுகளை கணிசமாக குறைக்கும். தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்வதும் செலவுகளை நிர்வகிக்க உதவும். எதிர்பாராத செலவுகளுக்கென்று தனியாக சிறிது பணத்தை ஒதுக்கி வைப்பது நல்லது.
பேக்கிங்:
பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வது. செல்லும் இடத்தின் காலநிலைக்கேற்ப ஆடைகளை எடுத்து வைப்பதும், குறிப்பாக முதலுதவி பெட்டி மற்றும் அவசர காலத்துக்கான பொருட்களை எடுத்து வைப்பதும் அவசியம். எதர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் அமைதியாக செயல்பட்டு காவல்துறைக்கு தகவல் கொடுப்பது நல்லது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீட்டுப் பத்திரம் போன்றவற்றை சரி பார்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
நீரேற்றமாகவும் புத்துணர்ச்சிடனும் இருப்பது:
குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது ஆரோக்கியமான சிற்றுண்டிகளை பேக் செய்து எடுத்துச் செல்வது அவசரத்திற்கு கை கொடுக்கும். சில சமயங்களில் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சாலையில் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம். நீண்ட சாலைப் பயணங்களில் ஆற்றலையும் விழிப்புணர்வையும் பராமரிக்க நீரேற்றமாக இருப்பது அவசியம். உற்சாகமான பயணத்தின் பொழுது போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடுவது இயல்பு. பழச்சாறுகள், மூலிகைத் தண்ணீர், எலக்ட்ரோ லைட்டுகளின் இயற்கையான மூலமான இளநீர் ஆகியவை நம்மை புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும். ஆரோக்கியமான உள்ளூர் உணவுகளையும் சுவைக்கத் தவற வேண்டாம்.
பயணத்தை சுவாரஸ்யமாக்க:
குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது அவர்களை மகிழ்விப்பது மன அழுத்தம் இல்லாத சாலைப் பயணத்திற்கு முக்கியமாகும். பயணத்தை சுவாரஸ்யமாக்க குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிறைந்த நல்ல நகைச்சுவை மிகுந்த ஆடியோக்கள், காதுக்கு இனிமை தரும் பாடல்கள், விளையாட்டுகள், புத்தகங்கள், புதிர்கள் போன்ற அமைதியான செயல்பாடுகளும் மகிழ்ச்சியான பயணத்திற்கு வழி வகுக்கும்.
குழந்தைகளுடன் பயணம் செய்வது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருக்க வேண்டும். அதற்கு நம் மனநிலையையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன், குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றையும் எடுத்துச் செல்லுங்கள்.
வானிலைகளை சரி பார்ப்பது:
வானிலை ஆய்வு மையங்கள் மற்றும் நம்பகமான வானிலை செயலிகள் மூலம் நம் பயண இலக்கு மற்றும் பாதையில் வானிலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம். மழை, பனி, பலத்த காற்று போன்ற தீவிர வானிலை நிலைகளை முன்கூட்டியே அறிந்து கொள்வது, பயணத்தை திட்டமிடவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.
போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப தயார் படுத்திக்கொள்வது: சாலைப் பயணத்தின் பொழுது போக்குவரத்து மாற்றங்கள் என்பது சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், திசை மாற்றம், சாலை மூடல், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி போன்றவற்றை அறிந்து கொள்வது நம் பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிசெய்யவும் உதவும்.
பயணத்தின் பொழுது செய்யக்கூடாதவை:
அதிகப்படியான வேகத்தில் ஓட்டுவதை தவிர்க்கவும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும், சோர்வாக இருக்கும் பொழுது ஓட்டுவதையும் தவிர்க்கவும். அவசரப்படாமல் நிதானமாக மற்ற வாகனங்களுக்கும் வழிவிட்டு செல்லுங்கள். வாகனம் ஓட்டும்போது விபத்தை தவிர்க்க தொலைபேசியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் சாலைப் பயணம் ஒரு அற்புதமான அனுபவமாக இருக்க உதவும்.