இந்த கோடைக்காலத்தில் ஏதேனும் குளிர்ச்சியான இடத்திற்கு போக வேண்டும் என்று தோன்றுவது சகஜமே. அப்படி நினைப்பவர்களை ‘குளுகுளு’ வென்று உணர வைக்கும் நான் சொல்லும் இடத்திற்கு சென்றால், அப்படி எந்த இடம் என்று கேட்கிறீர்களா? சாதாரணமாக ஒரு அருவியை பார்த்தாலே மனம் மகிழ்ச்சியில் துள்ளும். அப்படியிருக்க ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஏழு அருவிகளை ஒருசேர பார்த்தால் குளு குளுன்னு தானே இருக்கும்.
இந்தியாவில் மேகாலயாவில் தெற்கு மவுஸ்மாய் கிராமத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலே அமைந்திருப்பது தான் சவென் சிஸ்டர்ஸ் அருவி. இந்த அருவி 1033 அடி உயரத்தை கொண்டது 230 அடி அகலத்தை கொண்டது. இந்தியாவிலே உயரமான அருவிகளுள் இதுவும் ஒன்றாகும். இந்த அருவி இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அருவியின் மீது சூரிய ஒளி பட்டு ஏழு வண்ணங்களில் அழகாய் ஜொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செவன் சிஸ்டர்ஸ் என்று பெயர் வர காரணம் அருகருகே ஏழு அருவிகள் அமைந்திருப்பதனால் ஆகும். இந்த ஏழு அருவிகளும் ஏழு மாநிலங்களை குறிக்கிறது. அசாம், அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், நாகாலேந்த், திரிபுரா, மிஸோரம், மேகாலயா ஆகியவையாகும்.
தனித்தனியாக ஏழு அருவிகள் அடுத்தடுத்து விழுவது பார்ப்பதற்கு திரைச்சீலை போல அழகாக காட்சியளிக்கிறது. செவன் சிஸ்டர்ஸ் அருவியை மழைக் காலங்களில் காண வருவதே சிறந்ததாகும். ஜூன் முதல் செப்டம்பர் வரை வருவது நல்லது. இந்த அருவியின் கம்பீரமான அழகை மவுஸ்மாய் கிராமத்திலிருந்து காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப்பயணிகள் இந்த அருவியின் அழகை எக்கோ பார்க்கில் (Eco Park) இருந்தும் பார்த்து ரசிக்க முடியும். இந்த செவன் சிஸ்டர்ஸ் அருவி மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். புகைப்பட பிரியர்களும், இயற்கை விரும்பிகளுக்கும் ஏற்ற இடமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த அருவி மட்டுமில்லாமல், இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளது. மவுஸ்மாய் குகை, லிவிங் பிரிட்ஜ், நோகாலிக்காய் அருவி, சிரப்புஞ்சி போன்ற இடங்களையும் தவறாமல் பார்க்கலாம்.
இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில், அமைதியான சூழ்நிலையில், மனதிற்கு இதமாக இருக்கும் இதுபோன்ற சுற்றுலாத்தலத்திற்கு இந்த கோடைக்காலத்தில் சென்று வருவது மிகவும் அவசியமாகும். கூட்டம் அதிகமாக இருக்கும் சுற்றுலா இடங்களை தவிர்த்து, இதுபோன்று வளர்ந்து வரும் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் போது எந்த தொந்தரவுகளும் இல்லாமல் நிம்மதியாக இயற்கையை ரசித்துவிட்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரே இடத்தில் இருக்கக்கூடிய ஏழு அருவிகளையும் ஒருமுறையாவது வாழ்வில் பார்த்து ரசித்துவிட்டு வாருங்கள்.