
கடற்கரை என்றாலே அலைகளின் சத்தமும், ரிலாக்ஸான மனமும், ஓயாது வீசும் காற்றும்தான் நினைவிற்கு வரும். ஆனால், இந்த கடற்கரைக்கு சென்றால் அமானுஷ்ய குரல்களும், காற்றில் இருக்கும் குளிர்ச்சியும், பயம் கலந்த உணர்வும்தான் ஏற்படும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அத்தகைய அமானுஷ்யம் நிறைந்த வித்தியாசமான கடற்கரை இந்தியாவில்தான் இருக்கிறது. அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள கடற்கரைதான் டுமாஸ் கடற்கரை. இந்த கடற்கரை பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. கருப்பு நிற மணல்களைக் கொண்ட இந்த கடற்கரை சுற்றுலாப் பயணிகளை மட்டும் கவருவதில்லாமல் சாகச பிரியர்களையும் சேர்த்தே கவர்கிறது.
மற்ற கடற்கரையில் இருப்பதுபோல வெள்ளை நிற மணல்கள்போல் இல்லாமல் கருப்பு நிறத்தில் மணல்இருப்பது மேலும் இவ்விடத்திற்கு அமானுஷ்யத்தை கூட்டுகிறது. இக்கடற்கரையின் மணல் கருப்பு நிறத்தில் இருப்பதற்கான முக்கியமான காரணம் மணலில் அதிகமாக இருக்கும் Iron content ஆகும்.
காலையில் டுமாஸ் கடற்கரையில் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும். கடல் காற்று, சூரிய உதயம் என்று கடற்கரை அழகை ரசிக்க மக்கள் கூட்டம் திரண்டிருக்கும். இதுவே, இரவு நெருங்க நெருங்க கடற்கரையே மயான அமைதியாகிவிடும்.
டுமாஸ் கடற்கரை ஒருகாலத்தில் இடுகாடாக இருந்ததாகவும், அந்த ஆன்மாக்கள் இப்போது அங்கே உலவிக் கொண்டிருப்பதாகவும் இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். இரவில் இக்கடற்கரைக்கு செல்பவர்கள் வினோதமான ஓசைகளை கேட்பதாகவும், காற்றில் அதிகமான குளிரை உணர்வதாகவும், தங்களை சுற்றி அமானுஷ்யமாக உணர்வதாகவும் கூறுகின்றனர்.
எனினும், விஞ்ஞானிகள் இதற்கு வேறு விதமான கருத்துக்களை கூறுகிறார்கள். இந்த கடற்கரையில் வீசும் அதிகமான காற்றின் காரணமாக வினோதமான ஓசைகளை கேட்டிருக்கலாம், கருப்பு நிறத்தில் இருக்கும் கடற்கரையை பார்க்கும்போது மனம் சிலநேரங்களில் இதுபோன்ற பிரம்மையை உருவாக்கியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். எனினும், இந்த கடற்கரை அமானுஷ்ய விரும்பிகளையும், அப்படி என்னதான் இருக்கிறது? என்று பார்க்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்களையும் இவ்விடத்திற்கு இழுத்துவர தவறுவதில்லை. நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இரவில் இந்த கடற்கரைக்கு நீங்கள் செல்வீர்களா?