
சென்னையிலிருந்து டக்குனு எங்கயாவது போகலாம்னு நினைத்தபோது ‘ஏலகிரி’ எங்களுக்கு ‘இமயமலை’ போல காட்சியளித்தது. இந்த காலத்துல இணையவழியில் பயண திட்டம் போடுவது சுலபம் என்பதால், நாங்க வீட்டிலிருந்தபடியே ஒரு விடுதியை புக் செய்து, கூகிள் மேப் உதவியுடன் காரில் கிளம்பினோம்.
தமிழுடன் வரவேற்பு
புறநகர் பகுதி வந்தவுடனேயே கரிச்சான் மற்றும் பல குருவி வகை பறவைகள் கண்ணில் அதிகம் தென்படத் துவங்கின. வேலூர் மாவட்டத்தினுள் நுழைந்த உடனேயே எங்கு திரும்பினாலும் மலைத்தொடர்கள்; கண்களுக்கு மிகவும் குளுமையாக இருந்தது. ஏலகிரி மலைத்தொடரில் மொத்தம் பதினைந்து கொண்டை ஊசி வளைவுகள் இருந்தன. நல்ல அகலமான வளைவுகள் என்பதால், எந்த சிரமமுமின்றி மிதவேகத்தில் இருபக்கமும் மரங்களையும், குரங்குகளையும் பார்த்தவாறு மலை ஏறினோம்.
ஒவ்வொரு வளைவிற்கும் பாரதி வளைவு, திருவள்ளுவர் வளைவு, கம்பர் வளைவு என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த வளைவுகளில் கடையெழு வள்ளல்களான - பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரியும் அடக்கம். இந்த வள்ளல்களின் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லியவாறே ரிசார்ட் வந்தடைந்தோம்.
சுற்றுலாத் தலங்கள்
படகுக் குழாம்
ஏலகிரி சிறிய ஊர் என்பதால் இரண்டே நாட்களில் பார்த்துவிடலாம். இருந்தும், ஆர அமர நிதானமாக நான்கு நாட்கள் கண்டுகளித்தோம். படகுக் குழாம் மிகவும் ரம்மியமாக இருந்தது. வார நாட்களில் சென்றால் கூட்டமே இன்றி மிகவும் மலிவாக படகு சவாரி மேற்கொள்ளலாம்.
இயற்கை பூங்கா
உயர்ந்த மரங்களும், வண்ண சோலைகளும், நீர் பவுண்டன்களும் காண்போர் கண்ணை கவரும விதம் அமைந்திருந்தது அந்த இயற்கை பூங்கா. புகைப்பட பிரியர்களுக்கும், காதலர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற இடம்.
த்ரில் வேலி (Thrill Valley)
இங்கே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் கயிற்றிலேயே அந்தரங்கத்தில் தனியாக தொங்கியபடி செல்ல ‘zip line’ இருந்தது, இது நிஜமாகவே ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது. இதைத் தவிர rope course, துப்பாக்கி சுடுதல், வில் அம்பு எய்தல், trampoline, slingshot என்பதுபோல பல விளையாட்டுகள் இருந்தன. நேரம் போவதே தெரியாமல், பெரியவர்களும் குழந்தைகளாக மாறி உற்சாகமாக விளையாடினர்.
ஃபன்டேரா பறவைகள் மையம் (Fundera)
பறவைகள் என்றால் யாருக்குதான் பிடிக்காது? அதுவும் இந்த காட்சியகத்தில் தென் ஆப்ரிக்க மகாவ் பறவை, இந்தோனேசியாவிலிருந்து வண்ண கிளிகள், ஆப்ரிக்க கிளிகள் என விதவிதமான பறவைகளை ஒரே இடத்தில் காண முடிகிறது.
புறாக்களில் மட்டும் ஒரு முப்பது வகை, கோழிகளில் இருபது வகைகள் என, மிகப் பெரிய நெருப்புக் கோழி முதல் சின்ன கோழி குஞ்சுகள் வரை காணலாம். இவ்விடத்தில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், மனிதர்களுடன் நட்பாக பழகும் ஒரு சில பறவைகளுக்கு நாமே உணவு கொடுக்கலாம். அவை நமது கைகளில் அமர்ந்து அதன் உணவை சாப்பிட்டுவிட்டு பறந்துவிடும். சிலிப்பூட்டும் தருணம் அது.
முருகன் கோயில்
‘குன்றுகள் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்று நாம் கேட்டிருப்போம். அதுபோல, மலைகள் சூழ்ந்திருக்க அழகிய ஒரு மலையின் மீது கம்பீரமாக முருகப் பெருமான் வீற்றிருந்தார். முருகன் சந்நிதியில் பக்தியுடன் திருப்புகழ் ஒன்றை பாடிவிட்டு அமைதியாக சில நிமிடங்கள் அங்கே கழித்தோம். மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.
தமிழ்நாட்டின் பிற மலைப்பிரதேசங்களைப்போல ஏலகிரி குளுமையாக இல்லை. பகல் நேரங்களில் நல்ல வெயில். இரவில்தான் சற்று குளு குளுவென மாறியது. இங்கே இரவு ஏழுமணிக்கு மேல் எந்த நடமாட்டமும் இல்லை. கடைகளும் இல்லை. வெறும் சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் அழகிய இடம் ஏலகிரி. இதன் எளிமையும் அமைதியும் பரபரப்பான நகரவாசிகளான எங்களை மிகவும் கவர்ந்தது.
- மஞ்சுளா சுவாமிநாதன்
இக்கட்டுரை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக்கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்