
பயணம் என்றாலே பலருக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கும். அதுவும் நெடுந்தூர பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். இதற்கு என்றே பல நாட்களைச் செலவு செய்ய தயாராக சிலர் இருப்பார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக இந்த வகையான பயணங்களை வெறுப்பவர்களும் இருப்பார்கள். அவர்களை என்ன செய்து பயணங்களை மேற்கொள்ள வைக்கலாம்?
பயணங்களில் என்னென்ன நன்மைகள் மறைந்துள்ளன?
வெறும் கிளம்பினோம், சேர்ந்தோம் என்பதைவிட அந்த இடைப்பட்ட நேரத்தில் நாம் எவ்வாறு நம்மை உணர்ந்தோம் என்பதில்தான் ஒட்டுமொத்த பயண சுகமே அமைந்துள்ளது.
நெடுந்தூர பயணங்களை ஒரு இலக்கை அடைவதாக மட்டும் நினைக்காமல் அதை ஓர் அனுபவமாக கருதவேண்டும். அந்தப் பயண நேரங்களில் இயற்கை கொடுத்துள்ள அழகை ரசிக்கலாம். சாலையோர உணவகங்களில் பல வகையான உணவுகளை உண்ண வாய்ப்பு கிடைக்கலாம். ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்கள் பயண நேரங்களில் சில அரிதான கோயில்களைக் காண இயலும். அந்தந்த ஊர்களில் இருக்கும் சந்தைகளால் சிலரின் நீண்ட நாள் தேவை பூர்த்தியாகலாம்.
குறிப்பாக நகரத்தில் வசிப்பவர்கள், நகரத்தில் உணரும் சத்தம் மற்றும் அழுத்தத்திற்கு (Stress) விடைகொடுக்கும் இடமாக திறந்த சாலைகளை (Open roads) கருதி, இயற்கையோடு இணைந்த புத்துணர்ச்சியூட்டும் அமைதியைப் பெறலாம்.
ஒரு பயண ஆர்வலராக நாம் என்ன செய்ய வேண்டும்?
நெடுஞ்சாலை பயண ஆர்வலர்களாகிய (Highway enthusiast) நீங்கள் பயணங்களில் ஆர்வம் குறைவாக இருப்பவர்களின் மனதை முதலில் புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். மோஷன் சிக்னஸ் (motion sickness), பயண பாதுகாப்பு கவலை (safety concerns) அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து பயணம் செய்வதனால் வரும் சிரமம் போன்ற பிரச்னைகளால் சிலர் பயணத்தை வெறுக்கலாம்.
எனவே, அப்படிப்பட்டவர்களைப் பயணங்களோடு ஒன்றிணைக்க, பயண நேரங்களில் அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களில் ஈடுபடப் பாருங்கள், பயண இடைவெளி எடுங்கள் (More breaks), தேவைப்பட்டால் ஒரு இயற்கையான சூழ்நிலை நாம் செல்லும் வழியில் வரும்போது நேரத்தைப் பற்றிக் கவலைபடாமல் வண்டியை விட்டு இறங்கி அச்சூழ்நிலையை ரசியுங்கள்.
உடன் பயணிக்கும் அனைத்து பயணிகளின் வசதியையும் உறுதிப்படுத்த திட்டமிடல் (Prior Planning) மிகவும் முக்கியமானது. நன்கு பராமரிக்கப்பட்ட வாகனத்துடன் ஒரு வசதியான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
உடல் உபாதை தராத தின்பண்டங்கள் மற்றும் பானங்களை முன்கூட்டியே பேக்கிங் செய்யலாம். பயணிக்கும் அனைவரின் விருப்பங்களுக்கும் ஏற்றவாறு பாடல் தொகுப்பு உருவாக்குதல் (Music playlist) ஆகியவை செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பின்பற்றினாலும் சில நேரங்களில் நம் மனம் அந்தச் சமயம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நம் உடலும் செயல்படும். ஆகையால் எந்த ஒரு பயணத்தையும் தொடங்குவதற்கு முன் நம் மனதை ஒரு நிலைப்படுத்தினால் போகும் இடம் எவ்வளவு தூரம் இருந்தாலும் நாமும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கலாம்.