பகுதி –10.-நளினி சம்பத்குமார்.ஓவியம் : வேதா.குருவின் வாக்கும் குருவாயூரப்பனும்.குரு ப்ரஹ்மா குரு விஷ்ணுகுரு தேவோ மஹேஷ்வர:குரு சாக்ஷாத் பரப்ரஹ்மாதஸ்மை ஸ்ரீ குரவே நம:.இது குரு மந்திரம். குருவே மும்மூர்த்தியின் வடிவில் இருப்பவர் என்று விளக்கும் ஸ்லோகம் இது. ஆம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இறை பக்தியை தோற்றுவிப்பதில், ஸ்ருஷ்டிப்பதில், குரு ப்ரஹ்மாவாக இருக்கிறார். அந்த பக்தியை குறையாமல், அப்படியே காப்பதில், ரக்ஷிப்பதில், குரு விஷ்ணுவாக இருக்கிறார். நமக்குள் தீய எண்ணங்களும், குணங்களும் தலை தூக்கும்போதெல்லாம் அந்தத் தீமையை அழிப்பதில், அவர் சிவபெருமானாக இருக்கிறார். ஆக, குருவே சாட்சாத் பரப்ருஹ்மமாக எங்கும் நிறைந்தவராக இருக்கிறார்..குருவின் அருள் இல்லாமல் பகவான் கிடைக்க மாட்டார். குருவின் அருள் என்பது கிடைத்துவிட்டாலோ பகவான் அருள் கொடுக்காமல் போகமாட்டார். குருவும் வாயுவும் கொண்டு வந்து நிறுவியதால் குருவாயூர் என பெயர் பெற்ற குருவாயூரில் குடிகொண்டிருக்கும் அந்த க்ருஷ்ணன் செய்த லீலைகளை சொல்ல ஒரு ஜென்மம் போதாது..சாந்தீபனி முனிவரை தம் குருவாக கொண்டு குருவின் உயர்வை காண்பித்தவன் அல்லவா க்ருஷ்ண பரமாத்மா? அவன் வாசம் செய்யும் க்ஷேத்திரத்தில் குருவின் மஹிமையையும், குருவின் வாக்கை அப்படியே சிரமேற்கொண்டு தன்னை வழிபடும் பக்தனின் பெருமையையும் உலகிற்கு காட்டாமல் போய் விடுவாரா என்ன? நிச்சயம் எடுத்துக்காட்டி உள்ளான். நாராயண பட்டதிரி எனும் குருவின் மூலமாக. அவரையே தன் மானசீக குருவாக ஏற்ற பக்தன் பூந்தானத்தின் வாயிலாக..நாராயண பட்டதிரி நிரம்ப படித்தவர். சம்ஸ்க்ருத மொழியில் மிகுந்த பாண்டித்யம் பெற்றவர். 'நாராயாணீயம்' எனும் உன்னதக் காவியத்தை இயற்றியவர். பூந்தானம், நாராயண பட்டதிரியை தன் மானசீக குருவாக கொண்டவர். அவ்வளவாக படிப்பறிவு என்பது பூந்தானத்திடம் இல்லை என்றாலும் குருவின் மீதும் குருவாயூரப்பனின் மீதும் அளவற்ற பக்தி கொண்டவர். நாராயண பட்டதிரியின் ஒவ்வொரு வார்த்தையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். நாராயண பட்டதிரி சொல்லிவிட்டால் அது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே அதன் வாக்கை மதிப்பவர் பூந்தானம்..கல்வி அறிவு அறவே இல்லாத தாம் நாராயண பட்டதிரியிடமிருந்து நல்லுரைகளை பெற்று அவற்றின் படி நடக்கவேண்டும் என்பதில் உறுதி கொண்டிருந்த பூந்தானம் ஒரு நாள் நாராயண பட்டதிரியிடம் சென்று,"அடியேனுக்கு குருவாயூரப்பனை மனதில் நிறுத்தி தியானம் செய்யவேண்டும் என்று ஆசை. எந்த ரூபத்தில் பகவானை நிறுத்தி தியானம் செய்யவேண்டும் என்று தெரியவில்லை. நீங்கள்தான் அதற்கு வழி காட்ட வேண்டும்" என்று வேண்டி நின்றார். நாராயணீய பிரவசனத்தை குருவாயூரப்பன் சன்னிதியில் நாராயண பட்டதிரி நடத்திக்கொண்டிருந்த சமயம் அது. பூந்தானம் படிப்பறிவு சிறிதும் இல்லாதவன் என்ற ஒரு சிறு இளக்காரம் எப்போதுமே நாராயண பட்டதிரியிடம் உண்டு. உடனே அவர் பூந்தானத்தை பார்த்து, "நீ எந்த உருவம் கொண்டு உருவகப்படுத்தினாலும் குருவாயூரப்பன் உன் மனக்கண்ணில் தோன்றுவான். காளை மாடு போல நீ அவனை நினைத்து தியானம் செய்தாலும் கூட அவ்வண்ணமே அவன் உனக்குள் தோன்றி உனக்கு அருள் புரிவான்" என்று இளக்காரமாக கூறினார் பட்டதிரி..தன் மானசீக குரு சொல்வதை அப்படியே நம்பும் சுபாவம் கொண்ட வரல்லவா பூந்தானம்? அன்றிலிருந்து குருவாயூரப்பனை இரு கொம்புகள் கொண்ட ஒரு காளை மாட்டின் உருவத்திலியே தன் மனத்தில் நிறுத்தி அப்படியே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார் பூந்தானம். குருவின் வாக்கு வேத வாக்காயிற்றே . நிச்சயம் குருவாயூரப்பன் இந்த உருவில்தான் இருப்பான் போலும் என்று எண்ணிய பூந்தானம், புல், தவிடு போன்ற வற்றையே தான் தியானிக்கும் பகவானுக்கு தினம் நிவேதன மாகவும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். க்ருஷணனோ பூந்தானத்திற்கு தன் உடம்பில் சேற்றை பூசிக்கொண்டு, கொம்புகளை கம்பீரமாக அசைத்துக்கொண்டு ஒரு மாட்டின் உருவிலேயே காட்சி கொடுக்க ஆரம்பித்து விட்டார். குருவாயூரப்பன் மாட்டின் வடிவத்தில் இருப்பானா மாட்டானா என்று எந்தவித எதிர் கேள்வியும் கேட்கவில்லை பூந்தானம். மயில் பீலியோடு சன்னிதியில் காட்சி தரும் க்ருஷ்ணரை இப்படி ஒரு உருவத்தில் வழிபாடு செய்ய சொல்கிறாரே என்பது போன்ற சந்தேக கேள்விகள் எதையும் கேட்கவில்லை. குருவுக்கு எல்லாம் தெரியும் அவர் சொன்னால் நிச்சயம் சரியாகத்தான் இருக்கும் என்பதில் மட்டும் இறுதி வரை உறுதி கொண்டிருந்த பூந்தானத்திற்கு சந்தனம் பூசி கொண்டு சாதாரணமாக மற்றவர்களுக்குக் காட்சி தரும் குருவாயூரப்பன், எப்போதும் சேறு பூசிய சரீரத்தோடு மட்டுமே காட்சி கொடுக்க ஆரம்பித்தான்..ஒரு நாள் சீவேலி (குருவாயூர் கோயிலில் தினம் நடக்கும்) சமயம் வந்தது. யானை மீது அமர்ந்தபடி குருவாயூரப்பனின் உற்சவ மூர்த்தி திருக்கோயிலை சுற்றி வரும் வைபவம் அது. அன்றைய தினம் யார் யாரோ எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் யாராலுமே குருவாயூரப்பன்னை அவன் சன்னிதியை விட்டு வெளியே கொண்டு வர முடியவில்லை. ஏன் இப்படி? என்ன தப்பு செய்து விட்டோமோ தெரியவில்லையே? என்ன அபச்சாரம் பண்ணினோமோ தெரியவில்லையே? ஸ்வாமிக்கு பால் பாயசம் நிவேதனம் செய்வதில் ஏதாவது தவறு செய்துவிட்டோமா அல்லது அவனுக்குச் செய்யப்படும் அலங்காரத்தில் ஏதாவது குறை பண்ணி விட்டோமா என அனைவரும் குழம்பித் தவித்துக்கொண்டிருந்தார்கள். சரி, பிரச்சனம் செய்து பார்ப்போம்… என்ன குறை என்று தெரிந்துவிடும் என முடிவு செய்து அங்கே இருந்த தலைமை குருக்கள் சோழி உருட்ட தயாராகிக் கொண்டிருந்தபோது அங்கே பூந்தானம் வந்து உள்ளே இருக்கும் குருவாயூரப்பனை பார்த்து, " க்ருஷ்ணணை இடதுபுறமாக சாய்த்து எடுங்கள். உன்னி க்ருஷ்ணனின் கொம்பு உத்தரத்தில் இடிக்கிறது" என்றார். பூந்தானத்தின் பேச்சைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் அனைவருமே சிரித்து விட்டனர். ஏற்கனவே பூந்தானத்தை அறிவில்லாதவன். சற்றே மூளை மழுங்கியவன் என்றே அங்கு பலரும் நினைத்துக்கொண்டிருக்க பூந்தானத்தின் இந்த பேச்சு எல்லோரையும் நகைக்கத்தான் வைத்தது..அப்போது குருவாயூரப்பனின் மூல விக்கிரத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் மூச்சிரைக்க ஓடி வந்து, உற்சவ விக்ரஹத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டார். பிறகு அங்கிருந்தவர்களை பார்த்து, " சற்று நிமிடம் முன் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. நான் அர்ச்சனை செய்து கொண்டிருந்த போது குருவாயூரப்பனின் மூல விக்ரஹம் ஒரு மகிஷமாக (காளை மாடாக) மாறி தன் எருமை குரலில், 'என் பக்தன் பூந்தானம் என்னை , நாராயண பட்டதிரி சொன்னபடி இந்த உருவத்தில்தான் தினம் வழிபட்டு வருகிறான். அவன் மனதில் இந்த உருவத்தில்தான் நான் இருக்கிறேன். இன்று இதே உருவத்தில் தான் உமக்கு காட்சி அளித்தேன். வெளியே உற்சவ மூர்த்தியை சுமந்து செல்வோரிடம் இதை தெரிவி' என்று எனக்கு உத்தரவிட்டார். இந்த பூந்தானம் சாதாரண மனிதரே இல்லை. பகவானை தினம் நேரே காணும் மஹான்" என்று கூறி பூந்தானத்தின் கால்களில் விழுந்து எழுந்தார்..சரியாக அப்போது உற்சவ மூர்த்தி, "ம்மா" என ஒரு காளை மாடு கத்துவதை போலவே குரல் கொடுக்க ஒரு நொடி அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே தலையில் கொம்புகளுடன், காளை மாட்டினை போல காட்சி தந்தான் குருவாயூரப்பன். நாராயண பட்டதிரி சொன்னபடி தினமும் இந்த ரூபத்தில் தான் அவரை பூஜை செய்கிறேன் என்றார் பூந்தானம். நாராயன பட்டதிரி ஓடி வந்து பூந்தானத்தை அப்படியே தழுவிக்கொண்டார். நான் ஒரு கேலி பேச்சுக்காக சொன்னதை இவ்வளவு சிரத்தையாக எடுத்துகொண்டு பகவத் தியானம் செய்து வந்திருக்கிறாரே பூந்தானம் என எண்ணி மெய் சிலிர்த்தது நாராயண பட்டதிரிக்கு. குருவை வணங்குவோம். அவர் நிச்சயம் நம்மை கை விடவே மாட்டார் என்று திடமாக நம்புவோம்..-குரு அருள் திரு அருள் தொடரும்.
பகுதி –10.-நளினி சம்பத்குமார்.ஓவியம் : வேதா.குருவின் வாக்கும் குருவாயூரப்பனும்.குரு ப்ரஹ்மா குரு விஷ்ணுகுரு தேவோ மஹேஷ்வர:குரு சாக்ஷாத் பரப்ரஹ்மாதஸ்மை ஸ்ரீ குரவே நம:.இது குரு மந்திரம். குருவே மும்மூர்த்தியின் வடிவில் இருப்பவர் என்று விளக்கும் ஸ்லோகம் இது. ஆம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இறை பக்தியை தோற்றுவிப்பதில், ஸ்ருஷ்டிப்பதில், குரு ப்ரஹ்மாவாக இருக்கிறார். அந்த பக்தியை குறையாமல், அப்படியே காப்பதில், ரக்ஷிப்பதில், குரு விஷ்ணுவாக இருக்கிறார். நமக்குள் தீய எண்ணங்களும், குணங்களும் தலை தூக்கும்போதெல்லாம் அந்தத் தீமையை அழிப்பதில், அவர் சிவபெருமானாக இருக்கிறார். ஆக, குருவே சாட்சாத் பரப்ருஹ்மமாக எங்கும் நிறைந்தவராக இருக்கிறார்..குருவின் அருள் இல்லாமல் பகவான் கிடைக்க மாட்டார். குருவின் அருள் என்பது கிடைத்துவிட்டாலோ பகவான் அருள் கொடுக்காமல் போகமாட்டார். குருவும் வாயுவும் கொண்டு வந்து நிறுவியதால் குருவாயூர் என பெயர் பெற்ற குருவாயூரில் குடிகொண்டிருக்கும் அந்த க்ருஷ்ணன் செய்த லீலைகளை சொல்ல ஒரு ஜென்மம் போதாது..சாந்தீபனி முனிவரை தம் குருவாக கொண்டு குருவின் உயர்வை காண்பித்தவன் அல்லவா க்ருஷ்ண பரமாத்மா? அவன் வாசம் செய்யும் க்ஷேத்திரத்தில் குருவின் மஹிமையையும், குருவின் வாக்கை அப்படியே சிரமேற்கொண்டு தன்னை வழிபடும் பக்தனின் பெருமையையும் உலகிற்கு காட்டாமல் போய் விடுவாரா என்ன? நிச்சயம் எடுத்துக்காட்டி உள்ளான். நாராயண பட்டதிரி எனும் குருவின் மூலமாக. அவரையே தன் மானசீக குருவாக ஏற்ற பக்தன் பூந்தானத்தின் வாயிலாக..நாராயண பட்டதிரி நிரம்ப படித்தவர். சம்ஸ்க்ருத மொழியில் மிகுந்த பாண்டித்யம் பெற்றவர். 'நாராயாணீயம்' எனும் உன்னதக் காவியத்தை இயற்றியவர். பூந்தானம், நாராயண பட்டதிரியை தன் மானசீக குருவாக கொண்டவர். அவ்வளவாக படிப்பறிவு என்பது பூந்தானத்திடம் இல்லை என்றாலும் குருவின் மீதும் குருவாயூரப்பனின் மீதும் அளவற்ற பக்தி கொண்டவர். நாராயண பட்டதிரியின் ஒவ்வொரு வார்த்தையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். நாராயண பட்டதிரி சொல்லிவிட்டால் அது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே அதன் வாக்கை மதிப்பவர் பூந்தானம்..கல்வி அறிவு அறவே இல்லாத தாம் நாராயண பட்டதிரியிடமிருந்து நல்லுரைகளை பெற்று அவற்றின் படி நடக்கவேண்டும் என்பதில் உறுதி கொண்டிருந்த பூந்தானம் ஒரு நாள் நாராயண பட்டதிரியிடம் சென்று,"அடியேனுக்கு குருவாயூரப்பனை மனதில் நிறுத்தி தியானம் செய்யவேண்டும் என்று ஆசை. எந்த ரூபத்தில் பகவானை நிறுத்தி தியானம் செய்யவேண்டும் என்று தெரியவில்லை. நீங்கள்தான் அதற்கு வழி காட்ட வேண்டும்" என்று வேண்டி நின்றார். நாராயணீய பிரவசனத்தை குருவாயூரப்பன் சன்னிதியில் நாராயண பட்டதிரி நடத்திக்கொண்டிருந்த சமயம் அது. பூந்தானம் படிப்பறிவு சிறிதும் இல்லாதவன் என்ற ஒரு சிறு இளக்காரம் எப்போதுமே நாராயண பட்டதிரியிடம் உண்டு. உடனே அவர் பூந்தானத்தை பார்த்து, "நீ எந்த உருவம் கொண்டு உருவகப்படுத்தினாலும் குருவாயூரப்பன் உன் மனக்கண்ணில் தோன்றுவான். காளை மாடு போல நீ அவனை நினைத்து தியானம் செய்தாலும் கூட அவ்வண்ணமே அவன் உனக்குள் தோன்றி உனக்கு அருள் புரிவான்" என்று இளக்காரமாக கூறினார் பட்டதிரி..தன் மானசீக குரு சொல்வதை அப்படியே நம்பும் சுபாவம் கொண்ட வரல்லவா பூந்தானம்? அன்றிலிருந்து குருவாயூரப்பனை இரு கொம்புகள் கொண்ட ஒரு காளை மாட்டின் உருவத்திலியே தன் மனத்தில் நிறுத்தி அப்படியே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார் பூந்தானம். குருவின் வாக்கு வேத வாக்காயிற்றே . நிச்சயம் குருவாயூரப்பன் இந்த உருவில்தான் இருப்பான் போலும் என்று எண்ணிய பூந்தானம், புல், தவிடு போன்ற வற்றையே தான் தியானிக்கும் பகவானுக்கு தினம் நிவேதன மாகவும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். க்ருஷணனோ பூந்தானத்திற்கு தன் உடம்பில் சேற்றை பூசிக்கொண்டு, கொம்புகளை கம்பீரமாக அசைத்துக்கொண்டு ஒரு மாட்டின் உருவிலேயே காட்சி கொடுக்க ஆரம்பித்து விட்டார். குருவாயூரப்பன் மாட்டின் வடிவத்தில் இருப்பானா மாட்டானா என்று எந்தவித எதிர் கேள்வியும் கேட்கவில்லை பூந்தானம். மயில் பீலியோடு சன்னிதியில் காட்சி தரும் க்ருஷ்ணரை இப்படி ஒரு உருவத்தில் வழிபாடு செய்ய சொல்கிறாரே என்பது போன்ற சந்தேக கேள்விகள் எதையும் கேட்கவில்லை. குருவுக்கு எல்லாம் தெரியும் அவர் சொன்னால் நிச்சயம் சரியாகத்தான் இருக்கும் என்பதில் மட்டும் இறுதி வரை உறுதி கொண்டிருந்த பூந்தானத்திற்கு சந்தனம் பூசி கொண்டு சாதாரணமாக மற்றவர்களுக்குக் காட்சி தரும் குருவாயூரப்பன், எப்போதும் சேறு பூசிய சரீரத்தோடு மட்டுமே காட்சி கொடுக்க ஆரம்பித்தான்..ஒரு நாள் சீவேலி (குருவாயூர் கோயிலில் தினம் நடக்கும்) சமயம் வந்தது. யானை மீது அமர்ந்தபடி குருவாயூரப்பனின் உற்சவ மூர்த்தி திருக்கோயிலை சுற்றி வரும் வைபவம் அது. அன்றைய தினம் யார் யாரோ எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் யாராலுமே குருவாயூரப்பன்னை அவன் சன்னிதியை விட்டு வெளியே கொண்டு வர முடியவில்லை. ஏன் இப்படி? என்ன தப்பு செய்து விட்டோமோ தெரியவில்லையே? என்ன அபச்சாரம் பண்ணினோமோ தெரியவில்லையே? ஸ்வாமிக்கு பால் பாயசம் நிவேதனம் செய்வதில் ஏதாவது தவறு செய்துவிட்டோமா அல்லது அவனுக்குச் செய்யப்படும் அலங்காரத்தில் ஏதாவது குறை பண்ணி விட்டோமா என அனைவரும் குழம்பித் தவித்துக்கொண்டிருந்தார்கள். சரி, பிரச்சனம் செய்து பார்ப்போம்… என்ன குறை என்று தெரிந்துவிடும் என முடிவு செய்து அங்கே இருந்த தலைமை குருக்கள் சோழி உருட்ட தயாராகிக் கொண்டிருந்தபோது அங்கே பூந்தானம் வந்து உள்ளே இருக்கும் குருவாயூரப்பனை பார்த்து, " க்ருஷ்ணணை இடதுபுறமாக சாய்த்து எடுங்கள். உன்னி க்ருஷ்ணனின் கொம்பு உத்தரத்தில் இடிக்கிறது" என்றார். பூந்தானத்தின் பேச்சைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் அனைவருமே சிரித்து விட்டனர். ஏற்கனவே பூந்தானத்தை அறிவில்லாதவன். சற்றே மூளை மழுங்கியவன் என்றே அங்கு பலரும் நினைத்துக்கொண்டிருக்க பூந்தானத்தின் இந்த பேச்சு எல்லோரையும் நகைக்கத்தான் வைத்தது..அப்போது குருவாயூரப்பனின் மூல விக்கிரத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் மூச்சிரைக்க ஓடி வந்து, உற்சவ விக்ரஹத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டார். பிறகு அங்கிருந்தவர்களை பார்த்து, " சற்று நிமிடம் முன் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. நான் அர்ச்சனை செய்து கொண்டிருந்த போது குருவாயூரப்பனின் மூல விக்ரஹம் ஒரு மகிஷமாக (காளை மாடாக) மாறி தன் எருமை குரலில், 'என் பக்தன் பூந்தானம் என்னை , நாராயண பட்டதிரி சொன்னபடி இந்த உருவத்தில்தான் தினம் வழிபட்டு வருகிறான். அவன் மனதில் இந்த உருவத்தில்தான் நான் இருக்கிறேன். இன்று இதே உருவத்தில் தான் உமக்கு காட்சி அளித்தேன். வெளியே உற்சவ மூர்த்தியை சுமந்து செல்வோரிடம் இதை தெரிவி' என்று எனக்கு உத்தரவிட்டார். இந்த பூந்தானம் சாதாரண மனிதரே இல்லை. பகவானை தினம் நேரே காணும் மஹான்" என்று கூறி பூந்தானத்தின் கால்களில் விழுந்து எழுந்தார்..சரியாக அப்போது உற்சவ மூர்த்தி, "ம்மா" என ஒரு காளை மாடு கத்துவதை போலவே குரல் கொடுக்க ஒரு நொடி அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே தலையில் கொம்புகளுடன், காளை மாட்டினை போல காட்சி தந்தான் குருவாயூரப்பன். நாராயண பட்டதிரி சொன்னபடி தினமும் இந்த ரூபத்தில் தான் அவரை பூஜை செய்கிறேன் என்றார் பூந்தானம். நாராயன பட்டதிரி ஓடி வந்து பூந்தானத்தை அப்படியே தழுவிக்கொண்டார். நான் ஒரு கேலி பேச்சுக்காக சொன்னதை இவ்வளவு சிரத்தையாக எடுத்துகொண்டு பகவத் தியானம் செய்து வந்திருக்கிறாரே பூந்தானம் என எண்ணி மெய் சிலிர்த்தது நாராயண பட்டதிரிக்கு. குருவை வணங்குவோம். அவர் நிச்சயம் நம்மை கை விடவே மாட்டார் என்று திடமாக நம்புவோம்..-குரு அருள் திரு அருள் தொடரும்.