பெண்ணின் திருமண வயது 21: என்ன அவசியம்?

பெண்ணின் திருமண வயது 21: என்ன அவசியம்?
Updated on

இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னணி என்ன?
அதற்கு என்ன அவசியம்? 

ஓர் அலசல்

எஸ். சந்திர மௌலி

ம் ஊரில் பல ஆட்டோக்களின் பின்புறம் "பெண்ணின் திருமண வயது 18" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், இதனை மத்திய அரசு மாற்றி, சட்டம் கொண்டுவர இருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது. ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்த பட்ச வயது 18 என்று இருந்ததை, மத்திய அரசு 21 ஆக உயர்த்தி இருக்கிறது. இதன் மூலமாக ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்த பட்ச வயது 21 ஆகி இருக்கிறது. "பெண்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்டது" என ஆளும் தரப்பினரும்,
"இந்த மாற்றம் அவசியமில்லாதது; இதனால் உருப்படியான பலன் ஒன்றும் ஏற்படாது" என எதிரணியினரும் சொல்கிறார்கள். இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னணி என்ன? அதற்கு என்ன அவசியம்? என்று பார்க்கலாமா?

"அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல சர்வே அறிக்கையின்படி, நம் நாட்டில் குழந்தைத் திருமணம் குறைந்துள்ளது. 2015-16ஆம் ஆண்டில் 27% ஆக இருந்தது, 2019-20ல் 23% ஆகக் குறைந்துள்ளது. இதனை மேலும் குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளும் செய்து வருகிறது. அதன் ஒரு படிதான் மத்திய அரசின் இந்த சட்டம்.

மோடி அரசு, தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. சமதாக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி தலைமையில்,
நீதி ஆயோக் அமைப்பின் சுகாதாரப் பிரிவு செயலாளர் டாக்டர் வி.கே.பால் உள்ளிட்ட உயரதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்து அறித்த அறிக்கையின் சிபாரிசுகளைத்தான் செயல்படுத்த முன்வந்துள்ளது.
16 பல்கலைக் கழகங்களைக் சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் கருத்து கேட்டனர். 15 தொண்டு நிறுவனங்கள் மூலமாக சமூகத்தின் விளிம்பு நிலை மக்களிடம் கருத்துக் கேட்டனர். பல்வேறு மத, இன, கிராமப்புற, நகர்புறத்தினர் இதில் பங்கேற்றனர். அந்தக் கமிட்டி "பெண்களின் திருமண வயதை உயர்த்துவதுடன், அவர்களுக்கு பள்ளி, கல்லூரி கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டும்; அவர்கள் சென்றுவருவதற்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்; அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்" என சிபாரிசு செய்துள்ளது. மேலும், புதிய சட்டத்தை அமல்படுத்தி, அதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்குவதைவிட, இந்த சட்டத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லி, மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால்தான் சட்டத்தின் பலன் சமூகத்துக்குக் கிடைக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் குறித்து தன் கருத்துக்களைக் கூறுகிறார் கல்வியாளரான டாக்டர் காயத்ரி சுரேஷ்:
"கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக பிரசவத்தில் சிக்கல் எழுவதும், ரத்த சோகை போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது என்றும் பெண்களின் திருமண வயதை 21 ஆக ஆக்குவது இதற்கு ஒரு தீர்வு என்றும் ஐ.நா. சபையின் அறிக்கை கூறுகிறது. ஜெயா ஜேட்லி தலைமையில் மத்திய அரசு அமைத்த கமிட்டியும் அதனை இந்தியாவில் ஒரு பிரச்னையாக சுட்டிக்காட்டி இருக்கிறது. நம் பிரதமரும் தனது சுதந்திர தின உரையொன்றில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டிய அவசியத்தைப் பற்றிப் பேசி இருக்கிறார்.

இன்னொரு முக்கியமான விஷயம், இலவசமாக பள்ளிக் கல்வியை முடித்தவுடன், பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கவே பெற்றோர்கள் முனைகிறார்கள். எனவே, திருமணம், பெண்கள் படிப்பைத் தொடருவதற்குப் பெரும் தடையாக உள்ளது. திருமண வயதை உயர்த்துவதன் மூலமாக, பெண்கள் மேற்கொண்டு படிப்பைத் தொடரவோ, மத்திய அரசின் முன்னெடுப்பில் நடத்தபப்டும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை பெற்று, பயனடையவோ முடியும். அதன் மூலமாக, பெண்கள் பொருளாதார ரீதியாக வலிமை பெற முடியும். கல்வியில் முன்னேறிய தமிழ் நாடு போன்ற மாநிலங்களிலேயே பின் தங்கிய மாவட்டங்களில் பெண்களின் கல்வி என்பது போதிய அளவுக்கு மேம்படவில்லை. இதை
பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே தமிழ்நாடு சட்ட சபையில் பேசி இருக்கிறார்கள்.

இப்போது என்ன நடக்கிறது? பெண்களுக்கு, பதினெட்டு வயது முடியக் காத்திருந்து, உடனே, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். அவள் 19 வயதில் முதல் குழந்தைக்குத் தாயாகிறாள். 21 வயதுக்குள் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து, உடல் ரீதியாக பலவீனமாகி விடுகிறாள். கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பெண்களுக்குக் கூட, பதினெட்டு வயதாகிவிட்டால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

இதனைத் தடுக்கவே, இத்தகைய சட்டம் அவசியமாகிறது. குழந்தை திருமணங்களை தடை செய்யும் சட்டம், மூலமாக குழந்தைத் திருமணங்கள் பெருமளவு கட்டுப்பட்டிருப்பது போலவே, இந்த சட்டம் மூலமாக, பெண்களுக்கு நன்மை விளையும், தண்டனை குறித்த பயம், குற்றத்தைக் குறைக்கும் என்பது ஒரு பக்கம் என்றால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நல்ல பயன் தரும்.

இந்த சட்டம் மூலமாக, ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பிணிப் பெண்கள் மரணம், போன்றவற்றுக்கு தீர்வு காண முடியும். கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார சுதந்திரம் போன்றவைகளும் பெண்களுக்குக் கிடைக்கும்" என்று கூறுகிறார் டாக்டர் காயத்ரி.

"இந்த சட்டத்தால் ஒரு பயனுமில்லை; சொல்லப்போனால் இந்த சட்டத்துக்கு அவசியமே இல்லை" என்கிறார் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி.
எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர் கூறியதாவது:
" சர்வ தேச அளவில் இளம் கர்ப்பிணிப் பெண்கள் ரத்தசோகை முதலிய நோய்களால் பாதிக்கப் படுகிறார்கள் என்று அறிக்கைகள் தெரிவித்தாலும், நம் நாட்டில், சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு போதுமான அளவுக்கு இல்லையே! அப்படி இருக்கும்போது, வெறுமனே சட்டம் கொண்டு வந்து என்ன பிரயோஜனம்? பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு பற்றி இத்தனை வருடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லையே? பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்க சட்டம் இருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை தண்டிக்க போஸ்கோ சட்டம் இருக்கிறது. ஆனால், அத்தகைய கொடுமையான குற்றங்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதானே இருக்கின்றன. அவற்றை கண்டிப்புடன் செயல்படுத்தி, அத்தகைய வன்முறைகளை கட்டுப்படுத்தாத அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பவே இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது" என்கிறார்.

மேலும், "திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு. அதனை அவளது 21 வயது வரை தள்ளிப்போடுவது சரியல்ல. 18 வயதில் தன்னை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்னும் மிக முக்கியமான முடிவினை எடுக்கும் திறன் கொண்ட ஒரு பெண்ணால், தான் திருமணம் செய்துகொள்ள ஒரு சரியான நபரைத் தேர்ந்தெடுக்க முடியாதா? அவளுக்கு 18 வயதில் ஏன் அந்த உரிமையை மறுக்க வேண்டும்?"

கௌசல்யா, திவ்யா போன்று ஜாதி மறுத்து திருமணம் செய்துகொண்டவர்கள் சந்தித்த கொடுமைகளை நாம் பார்த்தோமல்லவா? 18 ல் இருந்து 21 ஆக திருமண வயதை உயர்த்துவது இந்த சட்டம் ஜாதிய, மதவாத சக்திகளுக்குத்தான் சாதகமாக அமையும். மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசத்தை அடுத்து தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகம் நடப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்று பரவலாக நாடெங்கும் இதே நிலைமைதான் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசு பெண்களின் திருமண வயதை 21 ஆக நிர்ணயித்து, சட்டம் கொண்டு வருவது தேவையற்றது; இருக்கும் சட்டங்கள் மூலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வழி உள்ளது. மத்திய அரசு, இருக்கும் சட்டங்களை ஒழுங்காக அமல்படுத்தி, பெண்களுக்கு பாதுகாப்பு தரட்டும்; அதுதான் இன்றைய அவசரத் தேவை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com