இந்திரப் பதவியில் இருந்த தேவராஜன், விஷிராகரன் என்ற அசுரனைக் கொன்றான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. கொடி வடிவில் அது தொடர்ந்து துன்புறுத்தியது.
தன்னுடைய சாபம் நீங்குவதற்காக சூரியன், தன் தேவியுடன் பூலோகம் அடைந்தான். ஈசனை நோக்கி தவம் செய்து வணங்கி, லிங்கத்திற்கு மேல் பாகத்தில் தாமரை ஓடை உண்டாக்கி, அந்த நீரால் இறைவனை வணங்கித் துதித்தான். அவனது பிரார்த்தனை பலித்தது. ஈசன் அவன் முன் தோன்றி, அவனது சாபத்தை நீக்கியருளினார்.
இதன்படி இத்தலத்து இறைவன் பாஸ்கரலிங்கம் என்றும், தீர்த்தம் சூரிய புஷ்கரணி எனவும், தலம் பாஸ்கர ஷேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் பார்வதீஸ்வரர்தான் இந்த பெருமைக்கும் பெயருக்கும் உடையவர். இங்கு அருள்பாலிக்கும் இறைவி பெயர், சுயம்வரத பஸ்வினி என்பதாகும்.
ஆலயம் அமைந்துள்ள இடம் ‘திருத்தெளிச்சேரி’ எனவும், ‘கோவில் பத்து’ எனவும் அழைக்கப்படும் இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு. இத்தலம் கிரேதாயுகத்தில் ‘சமீவனம்’ எனவும், துவாபர யுகத்தில் ‘ஆனந்தவனம்’ எனவும் அழைக்கப்பட்டு, இந்த கலியுகத்தில் ‘முக்தி வனம்’ என அழைக்கப்படுகிறது.
இத்தலத்திற்கு திருத்தெளிச்சேரி என்று பெயர் வந்ததற்கு காரணம் உண்டு.
ஒரு சமயம் சோழ வள நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. ஊர் எங்கும் மக்கள் பசி பட்டினியால் தவித்தனர். அதனால் இசுவாகு வம்சத்தில் வந்த அரசன் ஒருவன், இத்தல இறைவனை வழிபட்டு மக்களின் வேதனையை போக்கும்படி வேண்டி நின்றான். கருணை கொண்ட இறைவன் மழை பொழியச்செய்தார். பின் இறைவனே உழவனாக வேடங்கொண்டு விதை தெளித்தார். இதனால்தான் இத் தலம் திருத்தெளிச்சேரி என அழைக்கப் படுகிறது.
இன்றும் ஆனி மாதம் ‘விதை தெளி உற்சவம்’ இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இறைவன்-இறைவி எதிரே உள்ள சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளி, விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். பின்னரே விவசாயிகள் விதை தெளிக்கத் தொடங்குவர்.
தனது தல யாத்திரையின் போது திருஞானசம்பந்தர் சமீவனமான இந்தப் பகுதிக்கு வந்தார். அதுசமயம் சோழநாட்டை வீரசோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் சைவத்தின் பெருமை உணராது வேறு ஒரு பிரிவினரை ஆதரித்து வந்தான்.
அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம், ‘நீங்கள் ஈசனைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்வது உண்மையானால்.. தீயால் காய்ச்சப்பட்ட பீடத்தில் அமர்ந்து அதனை மெய்ப்பித்துக் காட்டுங்கள். ஒரு வேளை நீங்கள் தோற்றுவிட்டால் உங்களை கழுமரத்தில் ஏற்றுவேன்’ என்றான்.
அதற்கு சம்மதித்த சம்பந்தர், சிவபெருமானை வேண்டிக்கொண்டு ‘வேதங்கள் உண்மையானால், திருநீறு மற்றும் ருத்ராட்சங்கள் அழியாதவை என்பது உண்மையானால், பரமசிவம் ஒருவனே மூல முதல் பொருள் என்பது உண்மையானால், எனக்கு எந்த சிறு துன்பமும் நேராமல் இருக்கட்டும்’ என்று கூறிக்கொண்டே தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்தார்.
அவருக்கு எந்தவித தீங்கும் நேரவில்லை. வியப்பில் ஆழ்ந்த மன்னன் வீர சோழன், சம்பந்தர் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். அவரிடம் உபதேசம் பெற்றான்.
கோவில் இருப்பிடம் காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.