

மாசாணி அம்மன் கோவில் பொள்ளாச்சியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை (Aanaimalai Masani Amman) அருகே அமைந்துள்ளது. இது நீதிக்கான தெய்வம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள அம்மன் 17 அடி; சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை ஒரு தாளில் எழுதி அம்மனின் பாதத்தில் சமர்ப்பிப்பார்கள். அந்தக் கோரிக்கைகள் மூன்று வாரங்களில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை மேலும் சிவப்பு மிளகாய் அரைத்து வழிபடும் தனித்துவமான வழிபாட்டு முறையும் இக்கோவிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. இது நோய்கள் மற்றும் தீய சக்திகளை நீக்குவதாக நம்பப்படுகிறது.
துரோகிகளை தண்டித்து நீதியை நிலைநாட்டுபவள் என பக்தர்கள் நம்புகின்றனர். அம்மனின் உக்கிரத்தை குறைக்கவும், நோய்கள் நீங்கவும், தீய சக்திகளை விரட்டவும் இந்த வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
கோவிலில் உள்ள நீதிக் கல் அருகே வழிபாடு செய்வதும் உண்டு. பில்லி, சூனியம், மாதவிடாய் கோளாறு, பேய் பிசாசு தொல்லைகள் நீங்க இங்கு வழிபாடு செய்வார்கள்.
ஆனைமலை பகுதியை ஆண்ட மன்னன் நன்னன் என்பவர் ஆலமரத்து பழத்தை உண்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதித்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் நினைவாக அந்த இடத்தில் மாசாணி அம்மன் தோன்றியதாக வரலாறு. ஆனைமலை குன்றின் அடிவாரத்தில் ஆழியார் சங்கமிக்கும் இடத்தில் மாசாணி அம்மன் கோவில் உள்ளது.
மாசாணி அம்மனை சுற்றிவலம் வந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்று நம்பிக்கை மக்கள் இடத்தில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.
ராமாயண காலத்தில் கௌசிக மன்னராக இருந்து ரிஷியாக மாறிய விசுவாமித்திரர் தவம் செய்து பல வரங்களை பெற்றவர். தன் உடலையே திரியாக்கி எரித்து காயத்ரி மந்திரத்தை போதித்தவர்.
இந்த இடத்தில் ஒரு முறை விசுவாமித்திரர் தவம் செய்து கொண்டிருந்தபோது பல வரங்களைப் பெற்ற தடாகை அவரது தவத்திற்கு இடையூறு செய்தாள். அந்த தடாகை ராவணினிடமிருந்து நிறைய வரங்களை பெற்றவள். விசுவாமித்திரர் தடாகையை அழிக்க ராமர் லட்சுமணர் உதவியை நாடினார். ராமர் லட்சுமணன் அந்த தடாகையை பெண் என்றும் பார்க்காமல் ராட்சசி எனக் கூறி அவளை வதம் செய்தனர். வதம் செய்வதற்கு முன்பாக ராமர் சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவன் ராமருக்கு தடாகையை கொல்ல சில சூட்சுமங்களை வழங்கினார். அதன்படி மண்ணால் ஒரு உருவத்தை தயார் செய்து அதனை அழித்துவிட்டு பின்னர் தடாகையை வதம்செய்ய வேண்டும் என சிவன் கூறினார்.
ராமர் அவசரத்தில் தடாகையை கொன்று விட்டு மண்ணால் செய்யப்பட்ட அந்த உருவத்தை அழிக்க மறந்துவிட்டார் .
அந்த மண் உருவம் ஈஸ்வரி என அழைக்கப்படுகிறது. பின்னர் ராமருக்கு ஞாபகம் வந்து அந்த மணல் உருவத்தை அழிக்க முற்பட்டபோது ஈஸ்வரி தோன்றி இதை அழிக்க வேண்டாம். நான் இங்கேயே ஆட்சி புரிய இருக்கிறேன் என்று கூறினார். அந்த மணல் உருவத்தில் தோன்றிய ஈஸ்வரியே மாசாணி அம்மன் எனப்படுகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் இங்குள்ள பஞ்சாமிர்தம் சாப்பிட்டு கையில் கருப்பு கயிறு கட்டிக் கொள்வார்கள். இந்தக் கோவிலில் சிவப்பு மிளகாய் அரைத்தால் எதிரிகள் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் மற்றும் திருட்டுப் போன பொருட்கள் மீண்டும் திரும்பி வரும் என்பது நம்பிக்கை.
பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறிய பின் மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு எண்ணெய் காப்பு செய்வார்கள். மயானத்தில் இருக்கும் அம்மன் நீதி தேவதையாக பார்க்கப்படுகிறாள்.
இந்தக் கோவிலில் மாசாணி அம்மனை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மாசாணி அம்மன் கனவில் வந்தால் நல்ல சகுனம் என கூறப்படுகிறது. தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைதிறந்து இருக்கும்.