

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள அனுமந்தபுரம் என்னும் இடத்தில் ஸ்ரீ அகோர வீரபத்திரர் கோவில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது சிவபெருமானின் அம்சமான வீரபத்திரர் சுயம்புவாக தோன்றிய தலம். தமிழகத்தில் உள்ள பெரிய வீரபத்திரர் கோவில் இது.
சிறப்பு வழிபாடு:
மூலவர் ஸ்ரீ அகோர வீரபத்திரர் சுமார் 8 அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அதீத சக்தியுடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள அகோர வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்வது மிகவும் பிரபலம். வெற்றிலை தோட்டத்தில் தோன்றியதால் இவருக்கு வெற்றிலை மாலை உகந்ததாக கருதப்படுகிறது.
பரிகாரத் தலம்:
இது ஒரு சிறந்த பரிகாரத்தலமாக போற்றப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், உடல் நிலையில் கோளாறு உடையவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் 5 அமாவாசை அல்லது 5 பௌர்ணமி தினங்களில் வந்து எதிரில் உள்ள குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வேண்டிக் கொள்ள பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள். பில்லி, சூனியம், ஏவல், செய்வினை கோளாறுகள் மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட அதிலிருந்து விடுபடுவதாக நம்பிக்கை உள்ளது. கோவிலின் முன்பாக ஒரு பழைய குளம் உள்ளது.
பக்தர்கள் இங்கு குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். பௌர்ணமி நாட்களில் இரவு முழுவதும் அர்ச்சனைகள் நடைபெறுகின்றது. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் வெற்றிலை மாலை சாத்துவதும், முடி காணிக்கை செலுத்துவதுமாக வழிபாடு செய்கிறார்கள்.
தல சிறப்பு:
பொதுவாக வீரபத்திரர் கோபமான வடிவமாக கருதப்பட்டாலும், இங்கு தட்சனை வதம் செய்த பின்பு, உக்கிரம் குறையாத வீரபத்திரரை சிவபெருமான், குளிர்ந்த வெற்றிலை தோட்டத்தில் அமர்த்தி சாந்தப்படுத்துகிறார். சாந்தமடைந்த வீரபத்திரர் கோபம் நீங்கி அருள் பொழியும் முகத்துடன் நான்கு கரங்களுடன் சாந்தமான காவல் தெய்வமாக பக்தர்களை காக்கும் வகையில் அருள் புரிகின்றார். மேல் கரங்களில் வில் மற்றும் அம்பு, கீழ் இடக்கரத்தில் கேடயமும், வலக்கரத்தில் கத்தியும் கொண்டு நின்ற கோலத்தில் அருளும் வகையில் இந்த வெற்றிலை தோட்டத்திலேயே குடி கொண்டார். அவ்வாறு வீரபத்திரர் குடி கொண்ட இடமே அனுமந்தபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் 12 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிவாம்சம் உடையவர் என்பதால் அனுமந்தபுரம் கோவிலில் சண்டிகேஸ்வரர், துர்க்கையின் சன்னதிகளும் உள்ளன. தலைமுடியில் சிவலிங்கம் உள்ளது. வலது கால் அருகே ஆட்டுத் தலையுடன் தட்சன் கரம் கூப்பியபடி வணங்கிக் கொண்டு நிற்பதைக் காணலாம்.
பிரார்த்தனைகள்:
வீரபத்திரருக்கு வெண்ணை சாற்றுதல், வெற்றிலைப் படல் அமைத்தல், வெற்றிலை மாலை அணிவித்தல் போன்ற பிரார்த்தனைகள் தனி சிறப்பு வாய்ந்தவை.
திருவிழாக்கள்:
மாசி மாதம் சிவராத்திரி அன்று நான்கு கால அபிஷேகமும், மதியம் புறப்பாடும் நடைபெறும். மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பாடாகி மாடவீதிகள் வழியாக வீரபத்திரர் வலம் வருவார். செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பான வழிபாடுகளும், ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.
காலை 6:00 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.