கடந்த அத்தியாயத்தில் என் மாமனாரிடம் இருந்து எனக்குக் கிடைத்த பொக்கிஷமான சைக்கிள் பற்றிச் சொல்லி இருந்தேன்.
‘மாமனார் உனக்குக் கொடுத்த சீதனம் இந்த சைக்கிள்பா’ என்று என் மகள் அடிக்கடி கிண்டலாகச் சொல்வாள்.
தாம்பரம் ஏரியாவில் சைக்கிளில் வெகு இயல்பாகப் பயணிப்பதைப் பார்க்கிற பலரும், முதலில் ஏற இறங்கப் பார்ப்பார்கள். ‘என்னது டி.வி.ல பேசுற மாமா, சாதாரணமான சைக்கிள்ல போறாரே!” என்று.
தாம்பரம் ஏரியாவில் மூன்று நான்கு கி.மீ. ரேடியஸக்குள் பயணிக்க வேண்டுமானால், சைக்கிள்தான் எனக்கு சவுகரியம்.
மாமனார் சைக்கிள் எனக்குக் கிடைப்பதற்கு முன் ஒரு சைக்கிள் வைத்திருந்தேன்.
அது கொஞ்சம் பழசு. என் மாமனார் சைக்கிள் கொஞ்சம் புதுசு. அவர் சைக்கிள் ஓட்டுவதை விட்டவுடன், என் சைக்கிளை (வீட்டார் விருப்பத்துடன்) ஒரு பேரீச்சம்பழக்காரரிடம் கொடுத்துவிட்டேன்.
கரண்ட் பில் கட்ட, தாம்பரம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க, டெலிபோன் ஆபீஸ் என்று இந்த சைக்கிள் தாம்பரத்தில் பார்க்காத இடம் இல்லை.
எனக்கும் பைக்குக்கும் ராசியே இல்லை. ஏழாம் பொருத்தம்தான்.
பைக் போன்ற மோட்டார் வாகனங்கள் ஓட்டுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. 1990களின் துவக்கத்தில் ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது விபத்துகள் ஏற்பட்டன.
அப்போது பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் பிரபலம். புத்தம் புது ஸ்கூட்டர் 19 ஆயிரம் ரூபாய் என்று நினைவு.
இந்த ஸ்கூட்டரை ஒருவர் ஓட்டிச் சென்றால், அவரை அண்ணாந்து பார்ப்பார்கள். அது ஒரு கவுரவம்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடி இருந்தோம். ஸ்கூட்டர் புதுசாக வாங்கி, பழகக் கற்றுக்கொண்டேன். சைக்கிளில் இருந்து ஸ்கூட்டருக்கு மாற்றம் ஆனேன்.
பட்டினப்பாக்கத்தில் இருக்கும் மெக்கானிக் பிரேம் என்பவர்தான் எனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தார்.
ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் செய்தவுடன் அதிவேகமாக கியரை மாற்றுகிறதைப் பார்த்து பிரேம் மிரண்டார். ‘இப்படி எல்லாம் எடுத்தவுடனே வேகம் கூட்டக்கூடாது. மெதுவா போகணும்’ என்றார் கறாராக.
மனம் கேட்க வேண்டுமே! அது ஒரு இளமைத் துள்ளல். புது வண்டி வாங்கிய திமிருன்னும் சொல்லலாம்!
ஸ்கூட்டரின் பின்னால் பிரேம் உட்கார்ந்திருப்பார். முன்னால் அமர்ந்து நான் ஓட்டிக்கொண்டிருப்பேன்.
ஒரு நாள் வண்டி பழகுகிறபோது பட்டினப்பாக்கத்தில் என் வீடு அருகே ஓட்டிக் கொண்டிருந்தேன்.
என் அம்மா ராஜலட்சுமி முதல் மாடியில் ஜன்னல் ஓரம் அமர்ந்து நான் வண்டி ஓட்டும் அழகை (?) பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் வண்டியைத் திருப்பியபோது தரையில் சறுக்கி... பிரேக் பிடிப்பதற்குப் பதில் எதையோ அமுக்க... வேகம் கொண்டு தாறுமாறாக சரிந்தது. நான் ஒரு பக்கமும், பிரேம் மறுபக்கமும் விழுந்தோம்.
அவ்வளவுதான்! இந்தக் காட்சியை நேருக்கு நேராகப் பார்த்த அம்மா பதறிப்போய் மாடியில் இருந்து இறங்கி ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். விபத்தை நேருக்கு நேர் பார்த்த அதிர்ச்சியில், ‘இனிமே நீ வண்டியே ஓட்டக்கூடாது’ என்று உத்தரவு போட்டுவிட்டார்.
பெரிதாகக் கும்பிடு போட்டு பிரேம் கழன்றுவிட்டார்.
மெக்கானிக் மட்டுமில்லை. ஒரு ஜோஸ்யக்காரரும் இதையே சொன்னார்.
மயிலாப்பூர் அப்பர் ஸ்வாமி கோயில் தெருவில் ஒரு ஜோஸ்யர் இருந்தார்.
அவரிடம் ஒரு நாள் போனேன். என் ஜாதகத்தைக் கொடுத்தேன். ‘வண்டி ஓட்டுவது பற்றி’ கேட்டேன்.
ஜாதகத்தை ஒரு சில விநாடிகள் பார்த்தவர், ‘வண்டி ஓட்டுற ராசி உங்களுக்கு இல்லை. பின்னால் உட்கார்ந்துபோற யோகம்தான் இருக்கு’ என்றார்.
மெக்கானிக்கும் சொல்லியாச்சு... சந்தேகத்துக்கு ஜோஸ்யக்காரரும் சொல்லியாச்சு.
ஆசைப்பட்டுப் புதிதாக வாங்கின ஸ்கூட்டரை ஒரு சிறு நஷ்டத்துக்கு விற்றுவிட்டேன்.
அதன்பிறகு சகலமும் சைக்கிள்தான்!
சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது திருப்புறம்பயத்தில்.
இரண்டு மூன்று முறை இங்கு அக்ரஹாரத்தில் சைக்கிள் கற்றுக்கொண்டபோது ஏடாகூடமாக விழுந்து அடிபட்டதும் நினைவில் இருக்கிறது.
ஒரு முறை அக்ரஹாரத்தில் ஓதுவார் வீட்டு வாசல் அருகே விழுந்து எனது வலது குதிகாலில் ஸ்போக்ஸ் கம்பி குத்தி, தையல் போட்டுத்தான் சரியானது.
தண்ணீர் குடிக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.
தரையில் விழாமல் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடியாது.
என் அண்ணன் விசு (இப்போது இல்லை) பிரமாதமான ஒரு சைக்கிள் வைத்திருந்தார்.
‘ரலே’ என்று ஞாபகம். ரொம்ப வெயிட்டாக இருக்கும். புதுசாக ஒருவர் ஓட்ட ஆரம்பித்தால், ஒரு பக்கமாகத் தள்ளும்.
சைக்கிளில் ஏராளமான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் சேர்த்திருப்பார் அண்ணன். ஒரு புது மணப்பெண்ணுக்கு அழகு செய்ததுபோல் என் அண்ணனின் சைக்கிள் எப்போதும் மிடுக்குடன் ஜோராக இருக்கும்.
கும்பகோணத்தில் காந்தி பார்க்குக்கு எதிரே இருக்கும் நாகப்பா சைக்கிள் மார்ட்டில் என்னென்ன டிசைன்கள் புதுசு புதுசாக வருகிறதோ, அத்தனையையும் வாங்கி சைக்கிளில் மாட்டி விடுவார். சும்மா சொல்லக்கூடாது. மிக நன்றாகப் பராமரிப்பார்.
அண்ணனின் பராமரிப்பில் இப்படி சொகுசாக பராமரிக்கப்படும் சைக்கிளின் குஷன் ஸீட்டில் உட்கார்ந்து ஓட்டும்போது ஏதோ ஃப்ளைட் ஓட்டுவதுபோல் இருக்கும்.
சைக்கிளை ஓட்டிச் செல்லும்போது சாலையின் இருபுறத்திலும் இருக்கிறவர்கள் நம்மைக் கவனிக்க வேண்டுமே என்கிற பந்தாவில் இடது ஹேண்டில்பாரில் இருக்கிற ‘டிரிங் டிரிங்’ பெல்லையும், வலப்பக்கம் இருக்கிற ஆர்டினரி பெல்லையும் சேர்த்து அடிப்பேன்.
ஒரு சிலர் திரும்பிப் பார்ப்பார்கள். அப்போது அவர்களைப் பார்த்து சிநேகமாக ஒரு புன்னகை. இதில் கிடைக்கிற ஒரு பூரிப்பு இருக்கிறதே, அதன் மவுசே தனி.
தன்னைத் தவிர இந்த சைக்கிளை வேறு யாரும் ஓட்டக்கூடாது என்று அண்ணன் விசு கறாராக இருப்பார். எனவே, அவர் வீட்டில் இல்லாதபோது அந்த சைக்கிளை ஓட்டிப் பார்ப்பது என் வழக்கம்.
தப்பித் தவறி அந்த சைக்கிளை நான் ஓட்டுவதை அண்ணன் பார்க்க நேர்ந்து விட்டால்... அவ்வளவுதான்! அவர் முறைக்கிற ஒரு முறைப்பே போதும். அடுத்து ஒரு பத்து நாட்களுக்கு அந்த சைக்கிள் பக்கமே போக மாட்டேன்.
சைக்கிளுக்காக நானும் கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டு, ஒரு சைக்கிளை அண்ணன்தான் கும்பகோணத்தில் இருந்து எனக்கு வாங்கிக் கொடுத்தார். அதில் சில மராமத்து வேலை தேவைப்பட்டது.
திருப்புறம்பயத்தில் கடைத் தெருவில் இருக்கிற சைக்கிள் கடைக்குத் தள்ளிக்கொண்டு போனேன்.
கடைக்காரர் இரண்டு மூன்று மணி நேரம் கடினமான வேலை பார்த்தபிறகு சைக்கிள் மிளிர்ந்தது. ஓட்டுவதற்கு லேசாக இருந்தது.
திருப்புறம்பயம் டூ கும்பகோணம் 10 கி.மீ. தொலைவு.
6ஆம் நம்பர், 18ஆம் நம்பர் என்று இரண்டு டவுன் பஸ்கள் இருந்தாலும், சைக்கிள் கற்றுக்கொண்ட பிறகு பஸ்ஸில் ஏறியதில்லை. சைக்கிள் சவாரிதான்.
சைக்கிளில் ஏறி மிதிக்க ஆரம்பித்தால், நான் பயணிக்கிற உலகமே தனி. ஏதோ புல்லட் போன்ற நினைப்பு வந்துவிடும்.
சைக்கிளை மெதுவாக ஓட்டிச்செல்வது என்பதே கிடையாது. வேகம்தான் (மிதிக்கிற மிதியில் செயினே பல முறை அறுந்திருக்கிறது). என்னென்ன வாகனங்கள் சாலையில் போகிறதோ, அவற்றையெல்லாம் முந்த வேண்டும் என்று ‘மிதி மிதி’யென்று மிதிப்பேன்.
புளியஞ்சேரியில் இருந்து திருப்புறம்பயம் செல்கிற 5 கி.மீ. தொலைவு அவ்வளவாக போக்குவரத்து இருக்காது. பறக்கிற மாதிரிதான் சைக்கிள் ஓட்டுவேன்.
6ஆம் நம்பர் டவுன் பஸ் டிரைவராக அப்போது ராமையா என்றொருவர் ஓட்டிக்கொண்டிருப்பார்.
நல்ல தாட்டியாக இருப்பார். பெரிய மீசை. முதன்முதலாக அவரை என்னை மாதிரி சிறுவன் ஒருவன் பார்த்தால், தோற்றம் பார்த்து பயந்து விடுவான். மடிப்பு கலையாத யூனிஃபார்ம் டிரஸ் போட்டிருப்பார். தோளில் ஒரு தேங்காய்ப்பூ கலர்த் துண்டு.
இவர் பஸ் ஓட்டும்போது ஹார்ன் அடிக்கிற டெக்னிக்கே தனி. வித்தியாசமான இந்த ஹார்ன் சத்தத்தை எங்கிருந்து கேட்டாலும், ‘ஓ... இன்னிக்கு டிரைவர் ராமையா போலிருக்கு’ என்று சொல்லலாம் (இதே போல் ஆடுதுறை சுவாமிமலை மார்க்கத்தில் செல்லும் 1ஆம் நம்பர் டவுன் பஸ்ஸில் தண்டபாணி என்ற டிரைவர். அவர் ஹார்ன் அடிக்கிற விதமும் தனி).
ராமையா நல்ல வேகத்தில் ஓட்டக் கூடியவர்தான். இருந்தாலும், கிராமத்துச் சாலைகளில் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் பஸ் ஓட்ட முடியாது.
ஒரு சில முறை இவரது பஸ்ஸையே ‘ஓவர்டேக்’ செய்வதுபோல் சைக்கிள் ஓட்டி இருக்கிறேன். பஸ் முன்னால் சென்று கொண்டிருக்கும்போது வலப்புறம் வேகமாக சைக்கிள் ஓட்டி முந்தியடித்துச் செல்வேன். அப்போது என் நெஞ்செல்லாம் பெருமிதம் நிரம்பி வழியும்!
சைக்கிள் ஓட்டக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் அனைவருமே பாக்கியவான்கள். அது ஒரு சுகமான காலம்.
இன்றைக்கும் உடல்நலனுக்கு நல்லது என்று எல்லோரும் சைக்கிளுக்கு மாறி வருவது வரவேற்கத்தக்கதே!
(தொடரும்)