அடியேனின் முதல் சொற்பொழிவு மகா பெரியவா மகிமை பற்றி!
எத்தனையோ ஆன்மிகச் சிறப்புகள்கொண்ட மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில்! எத்தனையோ ஆன்மிக நிகழ்வுகள் அயோத்யா மண்டபத்தில் நடக்கிறபோது தரையில் பார்வையாளனாக உட்கார்ந்து பார்த்த நான், சொற்பொழிவாளனான மேடை ஏற்றப்பட்டேன்.
சம்மணமிட்டு மைக்கின் முன்னால் அமர்ந்து, எனக்கு முன்னால் காணப்படுகின்ற பக்தர்களையும் பிரபலங்களையும் இடமும் வலமுமாக மாறி மாறிப் பார்த்து ஒரு மணி நேரம் பேசினேன்.
காஞ்சி மகா பெரியவாளின் திருவடி பட்ட புனித இடம்தான் அயோத்யா மண்டபம். எண்ணற்ற ஞான வேள்விகள் நடந்த சபை அது.
சரித்திர நூலாசிரியரும் பழம்பெரும் பத்திரிகையாளருமான அமரர் கலைமாமணி விக்கிரமன் சார் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த மேடை. எனது சொற்பொழிவுக்குத் தற்செயலாக இந்த வாய்ப்பை வழங்கினார்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, ஸ்ரீகிருஷ்ண கான சபா பிரபு, நாட்டிய மேதை பத்மா சுப்ரமண்யம், இசைக்கவி ரமணன், ஆடிட்டர் சங்கரன், காளிகாம்பாள் கோயில் ஸ்ரீசண்முக சிவாச்சார்யர், சமையல் கலைஞர் ஜெய்மாஹி ஜெயராமன் இப்படி என் நலனில் ஆர்வம் கொண்ட பலரும் அன்றைய தினம் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தார்கள். கூடவே, சுமார் நானூறுக்கும் மேற்பட்ட பக்தகோடிகள் திரண்டு அமர்ந்திருந்தார்கள்.
நான் சரியாக சொற்பொழிவாற்றுவேனா, தங்குதடை இல்லாமல் பேசுவேனா என்கிற கவலை எனக்குக்கூட இல்லை.
ஆனால், ஒரே ஒரு ஜீவனுக்கு மட்டுமே இருந்தது.
அந்த ஜீவன், என் மனைவி செல்லா!
காரணம் அன்றைய தினம் இந்தச் சொற்பொழிவில் நான் சொதப்பி ஒருவேளை தோற்றுவிட்டால், அடுத்து எனக்கு என்ன வேலை கிடைக்கும் என்பது அவள் கவலையாக இருக்கலாம்.
அயோத்யா மண்டப சொற்பொழிவில் அன்றைய தினம் நான் சொதப்பி இருந்தால், அதோடு காணாமல் போயிருப்பேன். ஆனால், குருநாதர் நடமாடும் தெய்வம் மகா பெரியவாளின் அருளால் கரையேற்றப்பட்டு, இன்று கடல் தாண்டியும் போய் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இதை அடுத்து அமைந்த ஒவ்வொரு சொற்பொழிவிலும் மகா பெரியவா பிரத்யட்சமாக என்னுடன் இருப்பதை நான் உணர்ந்தேன்.
அது தொடர்பான மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவத்தையும் சொல்கிறேன்.
முதல் சொற்பொழிவு அயோத்யா மண்டபத்தில் முடிந்த கையோடு அடுத்து பேசுவதற்கு ஏதாவது அழைப்பு வரும் என்று மொபைல் போனையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருப்பேன்.
மொபைல் சிணுங்கும்போதெல்லாம், ப்ரொகிராம் விஷயமாக யாரோ கூப்பிடுகிறார்கள் என்று நினைத்து ஆர்வத்துடன் எடுத்துப் பேசத் துவங்குவேன்.
‘‘பத்து பர்சன்ட் இன்ட்ரஸ்ட்ல லோன் தர்றோம். வேணுமா சார்?’’ என்பாள் ஒரு யுவதி மறுமுனையில். இப்படி பல அழைப்புகள்... ஏமாற்றங்கள்!
எனக்கான தருணத்துக்காகக் காத்திருந்தேன்.
சென்னை வளசரவாக்கத்தில் இருக்கிற ஓர் அன்பர். பெயர் ராகவன் ஐயங்கார். ஒரு நாள் என்னை போனில் அழைத்தார்.
‘‘சார்... நீங்க மகா பெரியவா பத்தி சொற்பொழிவாற்றுவேளா?’’
‘‘ஆமா சார்...’’ என் குரலில் இனம்புரியாத ஒரு சந்தோஷம்!
‘‘வருஷா வருஷம் மார்கழி மாசம் என்னோட கிரஹத்திலேயே உபன்யாசங்களுக்கு ஏற்பாடு பண்ணுவேன். நிறைய பிரபலங்கள் எல்லாம் வந்து பேசிட்டுப் போயிருக்கா. இந்த வருட உத்ஸவத்துல ரெண்டு நாள் பேச முடியுமா?’’
இவர் கேட்டதும், உற்சாகமானேன்.
‘‘சரி சார்’’ என்றேன்.
2013 ஜனவரியில் இரு தினங்களைச் சொன்னார். குறித்துக்கொண்டேன்.
அங்கு முதல் நாள் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது எனக்குப் பின்னால் மகா பெரியவா படம். சற்றே பெரிய படம். அதற்கு ஒரு ஃப்ரெஷ்ஷான மலர் மாலை அணிவித்திருந்தார்கள்.
எனக்கு முன்னால் அமர்ந்திருக்கிற கூட்டத்தைப் பார்த்து நான் பேசும்போது படம் எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு முன்னால் அமர்ந்திருக்கிற பார்வையாளர் களுக்குப் படமும் தெரியும்.
சொற்பொழிவு நடந்துகொண்டிருக்கிறது. அப்போது என் மனைவி செல்லாவின் மனதில் என்னைப் பற்றி ஓர் எண்ணம் (இதைப் பிற்பாடு அவள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்) ‘இப்படியே ஒண்ணும் ரெண்டுமா இவரோட ப்ரொகிராம் நடக்கிறதே... இது எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? இவர் பேசுவதை வைத்துக் குடும்பம் நடத்த முடியுமா?’ என்று.
இந்த எண்ணம் அவள் மனதில் தோன்றியவுடன், மறுவிநாடி மேடையில் எனக்குப் பின்னால் இருந்த மகா பெரியவா படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு, ‘மகா பெரியவா... இவருக்கு இந்த ஃபீல்டு சரிதான் என்று தோன்றுகிறது. இருந்தாலும், நாங்கள் எடுத்த இந்த முடிவு சரிதானா? சரி என்றால், உடனே, இந்தக் கணமே எனக்கு ஏதேனும் ஒரு குறிப்பு உங்ககிட்டேர்ந்து பதிலா கிடைக்கணும். நானும் திருப்தி ஆயிடுவேன்’ என்று மனதளவில் பிரார்த்தனை வைத்தாள்.
அடுத்த விநாடி மகா பெரியவா திருவுருவப் படத்தில் இருந்த மலர் மாலை அப்படியே மெள்ள நழுவி, எந்தச் சத்தமும் இல்லாமல் பூப்போல் விழுந்ததாம்.
என் மனைவி, ராகவன் ஐயங்கார் மற்றும் அங்கு கூடி இருந்த பக்தகோடிகள் அனைவரும் இந்தத் தருணத்தில் ‘பெரியவா... பெரியவா...’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு பெரியவா படத்தைப் பார்த்துத் தரிசித்தார்கள்.
எனக்கு என்னவென்று புரியவில்லை. சொற்பொழிவை அப்படியே நிறுத்தினேன்.
உடனே, ராகவன் ஐயங்கார் எழுந்து, கண்கள் கலங்க, ‘‘ப்ரொகிராம் ஆரம்பிக்கறப்ப மாலை சாத்தினோம். இத்தனை நேரமா மாலை படத்துல இருந்துது. எப்படி திடீர்னு விழுந்துது, தெரியலை. பெரியவா யாருக்கோ என்னவோ செய்தி சொல்றார்’’ என்றார்.
அது என் மனைவியின் பிரார்த்தனைக்கான பதில் என்று அதுவரை எனக்குத் தெரியாது.
எனவே, மெள்ள மகா பெரியவா படத்தைத் திரும்பிப் பார்த்து, ஒரு முறை கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.
சொற்பொழிவைத் தொடர்ந்தேன்.
அந்த வேளையில் என் மனைவியின் முகத்தில் அப்படி ஒரு பரவசம். பிரகாசம்! அவளது விழிகளின் ஓரம் ஈரம். எனக்குப் புரியவில்லை.
நிகழ்ச்சி முடிந்து மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆட்டோவில் வரும்போதுதான் இந்த விஷயத்தை எனக்குச் சொன்னாள்.
நான் அவளிடம் சொன்னேன்: ‘‘மகா பெரியவாகிட்ட அடிக்கடி இதுபோல் ஏதாவது பதில் கேட்டு விண்ணப்பம் வெச்சிண்டு இருக்காதே... அவரை நாம ரொம்ப சோதிக்கற மாதிரி ஆயிடும்.’’
அவள் புரிந்துகொண்டாள்.
(தொடரும்)