நன்னெறிக் கதை: அகங்காரத் துறவிக்கு பாடம் உணர்த்திய சீடன்

arrogant-sage-pride
arrogant-sage-pridecredit AI Image
Updated on
deepam strip
deepam strip

ஒரு அடர்ந்த வனத்தில் நெடுங்காலமாக ஆன்மீகத் துறவி ஒருவர் தவம் புரிந்து வந்தார். அவரைக் காண மக்கள் விரும்பினாலும், முற்றும் துறந்தவரான அவர் யாரையும் காண விரும்பாமல், சிந்தனை முழுவதும் 'சிவனே' என வாழ்ந்து வந்தார். ஆனாலும், அவரின் தவ வலிமையாலும் புகழாலும் மக்கள் அவரை 'வனத்துறவி' என்று அழைக்கத் தொடங்கினர்; இப்பெயர் மக்களிடையே வேகமாகப் பரவியது.

இந்த வனத்துறவியைப் பற்றிக் கேள்விப்பட்ட ஓர் இளைஞன், அவரையே தன் குருவாக ஏற்றுக் கொள்ள விரும்பினான். அதற்காக அந்த வனத்திற்குச் சென்று, அவன் துறவியுடன் தங்கினான். துறவி அவனிடம் பாராமுகம் காட்டினாலும், அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து, நாளடைவில் அவரின் மனதில் இடம் பிடித்தான்.

இருவரும் குருவும் சீடனுமாக நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆன்மீக ரீதியாகக் குருவுடன் சீடன் ஒத்துப்போனான். ஆனால், தான் பிறந்த இனத்தின் மீது கர்வம் கொண்டிருந்த துறவியின் குணத்தையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எப்படியாவது தனது குருவின் இந்த உயர்வு-தாழ்வு எண்ணத்தையும் அகங்காரத்தையும் அழிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அதற்கான ஒரு நாளும் நெருங்கியது.

ஒருமுறை துறவிக்குத் திருவண்ணாமலை ஈசனை வணங்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இதற்காகத் துறவியும், இளைஞனான அந்தச் சீடனும் காட்டைக் விட்டு வெளியேறித் திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் பிறரிடம் பிச்சை கேட்டு வாங்கி இருவரும் உணவு அருந்தினர். அப்போதும் கூட, 'உயர் குலத்தவர்' என்று தான் கருதியவர்களைப் பார்த்தே பிச்சை வாங்கிச் சாப்பிட்டார் துறவி. இதைப் பார்த்துச் சீடன் மனதிற்குள் வருந்தினான்.

ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரிந்தன. எந்தத் திசையில் செல்வது என்று இருவருக்கும் தெரியவில்லை. தோராயமாக ஒரு பாதையைத் தேர்வு செய்து இருவரும் சென்றனர். ஆனால், அது ஆள் நடமாட்டமில்லாத பாதையாக இருந்தது. அங்கே வனவிலங்குகளின் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது.

நெடுந்தூரம் நடந்து வந்ததால் இருவருக்கும் பசியும் களைப்பும் ஏற்பட்டது. "உண்பதற்கு ஏதாவது உணவு கிடைக்காதா?" என்று ஏங்கினர். களைப்பு மிகுதியால் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி அமர்ந்தனர்.

அப்போது அங்கு விலங்குகளை வேட்டையாட வந்த வேடன் ஒருவன் இருவரையும் பார்த்தான். "இந்த அடர்ந்த காட்டில் எப்படி வந்து சிக்கினீர்கள்?" என்று கேட்டான். விபரங்களை அறிந்துகொண்ட வேடன், துறவியையும் இளைஞனையும் தன் குடிலுக்கு அழைத்துச் சென்றான். சீடன் உற்சாகமாகச் சென்றான்; ஆனால், துறவியோ வேண்டா வெறுப்பாக உடன் சென்றார். ஏனெனில், வேடன் தன் பார்வையில் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவன் என்று அவர் கருதினார்.

பசி மயக்கத்தில் இருந்த துறவிக்கும் சீடனுக்கும் வேடனின் மனைவி சூடான உணவைப் பரிமாறினாள். நன்றி உணர்வுடன் சீடன் அதை ரசித்து ருசித்துச் சாப்பிட்டான். துறவியோ வேறு வழியின்றி, வேண்டா வெறுப்பாக உணவை உண்டார். பசி தீர்ந்ததும், சரியான பாதையை அவர்களுக்குக் காட்டி வேடன் அனுப்பி வைத்தான்.

செல்லும் வழியில், "என்ன சீடா, பசி தீர்ந்ததா?" என்று கேட்டார் குரு.

"ஆம் குருவே! அற்புதமான ருசியுடன், வெல்லம் போன்ற இனிப்பான உணவு!" என்று பதிலளித்தான் சீடன்.

உடனே துறவி முகம் சுளித்தபடி, "என்ன உணவோ போ! பசியில் உனக்கு ருசி கூடத் தெரியவில்லை... வேட்டையாடிய விலங்கின் இறைச்சியைக் கொண்டு சமைத்தார்களோ என்னவோ, அவ்வளவு துர்நாற்றம் அடித்தது!" என்றார்.

"பசிக்கு உணவிட்டவர்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், இப்படி இழிவாகப் பேசாமல் இருக்கக் கூடத் துறவிக்குத் தெரியவில்லையே!" என்று சீடன் வருந்தினான்.

துறவி மீண்டும் அவனிடம், "சரி, நீ சாப்பிட்ட உணவை வெளியேற்று. அது வெல்லமாக வருகிறதா, இல்லை சாக்கடையாக வருகிறதா என்று பார்ப்போம்!" என்றார்.

குருவின் கட்டளையை மீறாத சீடன், தன் மூச்சை இழுத்துப் பிடித்து, உண்ட உணவின் ஒரு சிறு பகுதியை வாய் வழியாக வெளியேற்றினான். அதைப் பார்த்துத் துறவி அதிர்ந்து போனார். காரணம், அது வெல்லம் கலந்த பாயாசமாக வெளிவந்தது!

"பார்த்தீர்களா குருவே! நான் சொன்னது சரியானதுதானே?" என்றான் சீடன். தொடர்ந்து, "நாங்கள் சாப்பிட்டதும் இதே உணவுதானே... உங்களுக்கு மட்டும் அது எப்படி அப்படி ஆனது?" என்று கேட்டான்.

அடுத்த கனமே, எதிர்பாராதவிதமாகத் துறவியும் வாந்தி எடுத்தார். அவரின் வாயிலிருந்து சாக்கடை நாற்றத்துடன் உணவு வந்து விழுந்தது. அது அந்த இடத்தையே அசுத்தமாக்கியது.

இதையும் படியுங்கள்:
நீதிக் கதைகள் 2 : கஷ்டங்கள் ஏன் அவசியம்? குருவின் இந்த விளக்கம் உங்களை வியக்க வைக்கும்!
arrogant-sage-pride

அதைப் பார்த்த சீடன், "குருவே! தங்கள் மனதில் இருந்த அகங்காரமே இப்படிச் சாக்கடையாக நாற்றம் அடிக்கிறது. வேடனைப் பசியைத் தீர்க்க வந்த சக மனிதனாகத்தான் நான் பார்த்தேன். ஆனால் நீங்களோ, அவனைத் தீண்டத்தகாத மனிதனாக நினைத்தீர்கள். இனியாவது உங்கள் மனதில் இருக்கும் அகங்காரத்தை(arrogant-sage-pride) ஒழித்து, உண்மையான மகானாக மாற வேண்டும்," என்றான்.

குரு தன் தவறை உணர்ந்து மிகவும் வருந்தினார். சீடனின் செயலால் தன் அகங்காரத்தை ஒழித்து, அதன் பின் உண்மையான, நல்ல மகானாகத் திகழ்ந்தார் அந்தத் துறவி.

(படித்ததில் பிடித்தது...)

logo
Kalki Online
kalkionline.com