சோழ நாட்டைச் சேர்ந்த நாகப்பட்டணம் என்னும் நகரில் கடற்கரை அருகில் உள்ள நுளைப்பாடி என்னும் ஊரில் பரதவர் குலத்தில் பிறந்தவர் அதிபத்தநாயனார். அவர் பரதவர்களுக்குத் தலைவராக விளங்கினார். அங்கு வாழும் மக்கள் அவர்கள் வலையில் பிடிபடும் மீன்களைப் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.
சிவ பக்தியில் மிகச் சிறந்தவராக விளங்கியதால், தனது வலையில் அகப்படும் மீன்களில் முதல் மீனை "இது சிவனுக்கு" என்று மிகுந்த அன்போடு எப்பொழுதும் மீண்டும் கடலிலே விட்டுவிடுவார். சிலநாளில் ஒருமீன் மட்டுமே வலையில் அகப்படினும் சிவபெருமான் மீது கொண்ட அன்பினால் அதனை சிவனுக்கு என்றே விட்டுவிடுவார். இதனால் வறுமையால் வாடினார்.
தனது பக்தனை சோதித்து அவனது பக்தியை வெளிப்படுத்த விரும்பிய சிவபெருமான் அதிபத்தரது வலையில் ஒரு மீனும் அகப்படாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். விலைமதிப்பில்லாத ஒளி பொருந்திய நவரத்தினங்களால் அமையப் பெற்ற அற்புதமான ஒரு பொன்மீன் வலையில் பிடிக்கப்பட்டு கரை ஏறினார். அன்று அந்த ஒரு மீன் மட்டுமே வலையில் அகப்பட்டது. அதிபத்த நாயனார் அம்மீனைக் கண்டு, "இது இரத்தினங்களால் அமைந்த பொன்மீன் ஆதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு இது சமர்ப்பணம் ஆகும்" என்று கடலிலே விட்டார்.
அப்பொழுது அவரது பக்தியைக் கண்டு மெய்மறந்த பரமசிவன் இடபாரூடராய் தனது வாகனத்தில் ஆகாயத்தில் தோன்றி அதிபத்த நாயனாரை ஆட்கொண்டருளினார். இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பக்தியில் தவறாத நெறியைக் கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவர் நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் கோயிலில் இன்றும் நடைபெறுகிறது. விழாவில் அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததைப்போல பாவனைகள் செய்வார்கள்.
இது அதிபத்தர் தங்க மீனை பிடித்ததாக கொள்ளப் படுகிறது. அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் விழா நிகழ்கிறது.